சிக்கனம் என்பது வரவா? செலவா?

சிக்கனம்
சிக்கனம்
Published on

டவுள் பணம் என்ற ஒன்றைக் கொடுத்து வாழ்க்கை என்னும் ஓடத்தில் பயணிக்க வைக்கிறான். பாவம் அந்த பணம்தான் மனிதனை பாடாய்படுத்துகின்றது. ஏழ்மை எனும் எந்திரத்தின் எரிபொருள்தான் பணம். உலகில் கொடுமையானது வறுமை. பசி வந்தால் பத்தும் பறந்திடும். வறுமை வந்தால் சுற்றம் சுருங்கிடும். வறுமைச் சூழலில் வாடி தவித்தவர்கள் வசதி வந்தால் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிப்பர்.

சிக்கனம் உருவாக மரபுதான் முக்கியக் காரணம். பெற்றோர்கள் சிக்கனமாக இருந்தால் பிறக்கும் பிள்ளைகளில் எவரேனும் ஒருவர் மட்டுமே அந்த குணமுடையவராக இருப்பார்கள். சில நேரம் சூழ்நிலையால் அவர்களில் சில சதவிகிதம் மாற வாய்ப்புண்டு. பணமே இல்லாமல் செலவு செய்யாமல் இருப்பவர்கள் கஞ்சனா என்றால், இல்லை. அங்கு பணமே கஞ்சமாக உள்ளது. பிறகு எப்படி அவர்கள் கஞ்சனாக முடியும். வடிகட்டின கஞ்சன் என்பார்கள். வெளியில் சென்றால் மனம் மதியம் சாப்பாடு சாப்பிடாமல் பசி மயக்கத்துடன் வந்து அல்சரை விலைக்கு வாங்கி அதையும் கவனிக்காமல் விட்டு அதுவும் புற்றுநோயாக மாறி, புதைகுழிக்குப் போகிறான்.

மேலும், சில சிக்கனவாதிகள் வீட்டிற்குப் பொருட்கள் வாங்குவதில் கஞ்சத்தனம் காட்டுவர். கூறுகட்டி விற்கிறது என்பதற்காக வீணாய் போன பழங்களை வாங்கி நோய்க்கிருமிகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் தவறு.  குறைந்த விலையில் வருகின்றது என்று மூன்று தடவை மூன்று பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதும் ஒரே முறை நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்துவதும் ஒன்றே. கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும்.

கம்பெனி செல்போன் ரூபாய் 3000 என்றால் அதன் உழைப்பு மூன்று வருடத்திற்கு மேல் வரும். அதே தரம் குறைவான சைனா போன்கள் ரூபாய் ஆயிரத்துக்கு கிடைக்கிறது என்று வாங்கினால் அதன் உழைப்பு ஒரு வருடம் மட்டுமே வரும். கணக்கிட்டுப் பார்த்தால் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும். இதிலே நல்ல பொருளை வாங்கிப் பயன்படுத்தினால் மன உளைச்சல் குறையும். மேலும், தரமற்ற செல்போன்கள் பயன்பாட்டால் கதிர்வீச்சு அபாயம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அனைத்துப் பொருட்களுமே அப்படித்தான்.

இதையும் படியுங்கள்:
புத்திசாலிகள் சந்திக்கும் பிரச்சனைகள்!
சிக்கனம்

தரமான பொருட்களை வாங்கும்பொழுது வாழ்க்கை தரமும் உயரும். வாழ்நாளும் கூடும். எந்த ஒரு பணத்தின் பின்னாலும் ஒரு துளி வியர்வை இருந்தால் நிச்சயம் அந்த நபர் சற்று சிந்தித்து செயல்படுவார். எத்தனையோ உழைப்பாளிகளின் வியர்வையால் வந்த பணத்தை வாரி இறைப்பவன் வள்ளலா? உண்மையான வள்ளல் தனது உழைப்பில், தனது சொந்தத்தை தவிர்த்து மற்றவர்களுக்கு மனதார செலவு செய்பவனே சிறந்த மனிதன்.

உலகிலேயே மிகப்பெரிய சேமிப்பு கல்வி. அந்தக் கல்வியை வைத்து ஒரு வேலையை பெற்று வாழ்வில் உயர வேண்டும். இன்றைய சிக்கனம் பிள்ளைகளின் நாளைய வருவாயாக இருந்தால் நலம். சிக்கனம் என்ற பெயரில் நல்ல பொருளை உண்ணாமல் பார்த்து பார்த்து ஏங்கிப் பாடையில் போவதைவிட, மிதமாக செலவு செய்து வளமாக வாழ்ந்து வாழ்க்கை என்னும் சுகத்தை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் . மனிதன் பார்த்து சம்பாதிப்பது பணம். ஆகவே, அதனை அளவோடு செலவு செய்து உழைத்து வளமோடு வாழ அடித்தளம் அமைப்போம். ஆனந்தமாய் வாழ்வோம்.

- ம.வசந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com