
Snake Remove from Home: இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களிலும், சில நகர்ப்புற பகுதிகளிலும் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைவது பலருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. பாம்புகள் வீடுகளுக்குள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, அவற்றின் உணவான எலிகள், தவளைகள், பூச்சிகள் போன்றவை வீட்டில் இருந்தால், அவற்றைத் தேடி பாம்புகள் உள்ளே நுழையலாம்.
வீட்டில் உணவு மிச்சங்கள், குப்பைகள், அல்லது திறந்தவெளியில் உணவுப் பொருட்கள் இருந்தால் அவை எலிகளை ஈர்க்கும். அதைத் தொடர்ந்து பாம்புகளும் வீட்டிற்குள் வரலாம். மேலும், மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில் பாம்புகள் உலர்ந்த அல்லது வெப்பமான இடங்களைத் தேடி வீடுகளுக்குள் நுழையலாம். திறந்த கதவுகள், ஜன்னல்கள் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள சிறு துளைகள் வழியாகவும் அவை உள்ளே வரலாம்.
வீட்டில் இருக்கும் பாம்பை வெளியேற்றுவது எப்படி?
வீட்டிற்குள் பாம்பு வந்தால், முதலில் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, பதற்றப்படாமல், பாம்புக்கு அருகில் செல்லாமல், குறைந்தது 6 அடி தொலைவில் இருந்து அதை அமைதியாகக் கவனிக்கவும்.
பாம்பு விஷமுள்ளதா இல்லையா என்பதை அடையாளம் காண முயற்சிக்க வேண்டாம். இது ஆபத்தானது.
உள்ளூர் வனவிலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், பாம்பு பிடிப்பவர்கள் அல்லது தீயணைப்பு துறையை உடனடியாக அழைக்கவும்.
பாம்பை நீங்களே பிடிக்க முயற்சிக்க வேண்டாம், இது ஆபத்தை விளைவிக்கலாம்.
சில சமயங்களில், பாம்பு தானாகவே வெளியேறலாம். கதவுகளைத் திறந்து வைத்து, அதற்கு வழி விடுங்கள்.
வீட்டிற்குள் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பழைய பொருட்கள், உபயோகமற்ற பெட்டிகள் அல்லது குவிந்து கிடக்கும் பொருட்கள் பாம்புகளுக்கு மறைவிடமாக மாறலாம்.
விஷ ஜந்துகள் ஒளிந்து கொள்வதற்கு வசதியான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொடுக்கக் கூடாது. வீட்டை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருப்பது முக்கியம்.
பாம்புகள் மீண்டும் வீட்டிற்குள் வராமல் தடுக்க சில நடவடிக்கைகளை எடுக்கலாம். வீட்டைச் சுற்றி உள்ள துளைகள், பிளவுகள் அல்லது உடைந்த ஜன்னல்களை சரி செய்யவும். உணவு மிச்சங்கள், குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, எலிகளைத் தவிர்க்கவும். வீட்டின் வெளிப்புறத்தில் செடிகள், குப்பைகள் போன்றவற்றை அகற்றி ஒழுங்காகப் பராமரிக்கவும், இதனால் பாம்புகளுக்கு மறைவிடங்கள் குறையும். பாம்புகளைப் பாதுகாப்பாக கையாள்வதன் மூலம் நம்மையும், இயற்கையையும் பாதுகாக்கலாம்.
வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளை அணுகுவதற்கு TOLL-free எண்களைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு வனத்துறையின் 24 x 7 Helpline எண்ணான 1800 425 4409ஐ அழைத்து பாம்பு பிடிப்பு உதவியைப் பெறலாம். மேலும், தீயணைப்பு துறையை அவசரநிலையில் அணுக, இந்தியா முழுவதும் உள்ள TOLL-free எண்ணான 101ஐ அழைக்கலாம். இந்த சேவைகள் பாம்புகளை பாதுகாப்பாக அகற்ற உதவும், எனவே, அவசர சூழலில் இந்த எண்களை அழைப்பது சிறந்தது.