இன்று பல்வேறு துறைகளில் வெகுவேகமான வளர்ச்சி நடைபெற்று வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வேக வளர்ச்சிக்கு அறிந்தும், அறியாமலும் விலை கொடுத்து வருகிறோம் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
நம்மை அறியாமலேயே பலர் சுறுசுறுப்பை இழந்து வருகின்றோம். சில காலங்களுக்கு முன்பு பெரும்பாலான உள்ளூர் இடங்களுக்கு நடந்து சென்றவர்களின் சந்ததியினருக்கு இன்று நடப்பது சுமையாகிவிட்டது! ஒவ்வொரு தேவைக்கு ஏற்ப வெவ்வேறு திக்கில் நடந்தே சென்ற அன்றைய மனிதர்களின் தேவைகளும் நிறைவேறின, நடைபயிற்சியும் அவர்களுக்குக் கிட்டியது. அதன் பலன்களையும் அனுபவித்தனர். நடை உதவி செய்து அவர்களை ட்ரிம்மாக வைத்திருந்தது. ஜிம்முக்கு எல்லாம் செல்லாமலேயே, பலரும் ஜம்மென்று இருந்தனர்.
இந்தக் காலத்தில், ஜிம்முக்கு செல்வது பலருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. பணச் செலவு, நேர விரயம் ஆகிறதே ஒழிய, ஜிம்முக்கு செல்பவர்கள் பலரால் அங்கு செல்வதற்கான பயனைப் பெற முடிவதில்லை.
அன்றைய காலக்கட்டத்ததில் பல குடும்பங்களுக்கு ஃபேமிலி டாக்டர்கள், நடந்து போய் பார்க்கும் தூரத்திலேயே இருந்தனர். ஃபேமிலி டாக்டர்கள் கான்செப்ட்டே அலாதி சிறப்பு பெற்றது. குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும், அவர்கள் உடல் நிலை, நலம் குறித்தும் நன்கு தெரிந்து வைத்து இருந்த ஃபேமிலி டாக்டர்கள், மருந்து, மாத்திரைகளில் அதிக செலவு வைக்காமல் குணப்படுத்தினர். அப்பொழுது டாக்டரைப் பார்க்க டோக்கன் எல்லாம் கிடையாது,
அப்பாயிண்ட்மென்ட் தேவையில்லை. Second opinion என்ற சொல்லைக் கேள்விபட்டதே இல்லை. மருத்துவருக்கும், மருந்து, மாத்திரைகளுக்கும் செலவு செய்ய முடிந்தது. இன்றைய நிலைமையே வேறு. அதை விரிவுபடுத்துவது வேதனை மட்டுமே தரும்.
அன்று டிவி சீரியல், தினமும் கிரிக்கெட் மேட்ச்சுகள், மால்கள் இல்லை. முக்கியமாக மொபைல் போன் கிடையாது. வீட்டிற்கு ஆர்டர் கொடுத்து பொருட்கள், உணவு வகைகள் வரவழைத்து உபயோகிக்க சான்சே இல்லை. டூ வீலர்கள், கார்கள் பலர் பார்த்ததேயில்லை.
குடும்ப உறுப்பினர்கள் அதிகம். வருவாய் குறைவு. இருந்தும் பலர் நிறைவாக வாழ்க்கைகளை வாழ்ந்தனர்.
இன்றையது சிறிய குடும்பம், போய்வர வண்டிகள், செல்போன்கள். அதை உபயோகித்து ஆன்லைன் மூலம் தேவையானவற்றைப் பெறமுடிகின்றது.
இப்பொழுது வாக்கிங், துணைக்கு ஜாக்கிங், யோகா, ஜிம், டயட் படி உணவு உண்பது, பிடித்த வாழ்க்கை வாழ்வது எல்லாம் இருந்தும், டென்ஷன் (tension) அதிகம், நிம்மதியின்மை, வெறுமை, stress போன்றவைகளால் அவதி படுபவர்கள், நாளுக்கு நாள் எல்லா துறைகளிலும் அதிகரித்து வருகின்றனர்.
அதற்கான சில காரணங்கள்.
* பலர் தங்களை அறியாமலேயே, பிறரைப் போல் வாழ நினைப்பது. அதன் இயலாமை காரணமாக, அவர்களை அறியாமலேயே அழுத்ததிற்கு உட்பட்டு தவிப்பது.
* எதிர்பார்ப்புகள் (Expectations) அதிகரித்துவிட்டன. அவை நடைபெறாவிட்டால், தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஸ்ட்ரெஸ் அதிகமாகித் தவிக்கின்றனர்.
* ஜங்க் (Junk food) உணவுகளைத் தவிர்க்காமல், உணவு கட்டுப்பாடுகள் இல்லாமல் உண்டு அவதிபடுகின்றனர். உடல் ரீதியாக தொந்தரவுகள், மனஅழுத்தம், வைத்திய செலவு என்று பட்டியல் நீள காரணமாகி அவதிபட்டு மீளமுடியாமல் வேறு தவிக்கின்றனர்.
* பல்வேறு தேவையற்ற கடன் தொல்லைகள் வேறு.
இவ்வாறு அழுத்தங்கள் பல்வேறு பரிமாணங்களில் பெரும்பாலான மனிதர்களுடன் பயணம் செய்வதால், மக்கள் வசதிகள் இருந்தும் தவிக்கின்றனர்.
ஒவ்வொருவரும், தங்களுடைய நிலைமை அறிந்து வாழ பழக வேண்டும். ஆசை படுவது தவறு கிடையாது. நம்மால் முடியுமா என்று தரம் அறிந்து, திட்டமிட்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால், நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.