
வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே முக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு முறையும், மன ஆரோக்கியத்திற்கு புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதும், சவாலான மன செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும் அவசியம்.
வயதானவர்கள் தங்கள் வயதை மறந்து சுறுசுறுப்பாக இருக்க தங்களுடைய தனித்திறன்களை வெளிக்கொணரலாம். புதிது புதிதாக கற்பதில் ஆர்வம் கொள்வது நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். கணினி பயன்பாடு, இணையத்தில் உலா வருதல், சமூக ஊடகங்களைக் கவனமாக பயன்படுத்துதல் போன்றவை உதவியாக இருக்கும்.
ஓவியம் வரைதல், கைவேலையில் ஆர்வம் காட்டுதல், நல்ல இசையை கேட்பது, தையல் தெரிந்தால் அதில் தங்களுடைய முழுத் திறமையையும் காட்டுவது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் வருவாயையும் ஈட்டித்தரும்.
படிப்பில் ஆர்வம் இருந்தால் ஆன்லைன் படிப்புகளைத் தொடரலாம். ஆன்லைன்லையே இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக் கொள்வதும், பாடுவதும், புதிய மொழிகளை கற்றுத் தேர்வதும் நம் வயதை மறந்து சுறுசுறுப்புடனும், சந்தோஷமாகவும் இருக்க உதவும்.
ஆரோக்கியம் இடம் கொடுத்தால் சமூக சேவை செய்யவும், மற்றவர்களுக்கு உதவவும் செய்யலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப சிறுசிறு பயணங்களை மேற்கொள்ளலாம். இது அவர்களை புத்துணர்வுடனும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க உதவும்.
பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவது, தங்கள் வயதை ஒத்த நண்பர்களுடன் பேசிப்பழகுவது, உறவினர்களை சந்தித்து உறவை புதுப்பித்துக்கொள்வது போன்றவை வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தும்.
தோட்டக்கலையில் ஆர்வம் இருந்தால் சிறிய தோட்டம் அமைத்து பராமரிக்கலாம். தோட்ட வேலை செய்வது உடலை நெகிழ்வாகவும், மனதை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். வீட்டிற்குத் தேவையான சத்தான காய்கறிகள், கீரைகள், பழச்செடிகளை வளர்த்து ஆரோக்கியமாக இருக்கலாம்.
மன அமைதிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்வதும், மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் வயதானவர்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
மனதை சுறுப்பாக இயங்க வைக்க சதுரங்கம், சுடுகோ, பிரிட்ஜ் போன்ற மன விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
எழுத்தில் ஆர்வம் இருந்தால் கவிதைகள், கட்டுரைகள், டைரி எழுதுதல் போன்றவற்றை செய்யலாம். இவை நம் மனதை மட்டுமல்லாமல் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
வயதை மறந்து மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஓய்வெடுக்க போதுமான நேரத்தை ஒதுக்குவதுடன், போதுமான தூக்கத்தை பெறுவதும் அவசியம். அத்துடன் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது குறிப்பாக பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியத்தை காக்க தவறாமல் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வயதாகிவிட்டது என்று ஒதுங்காமல் நமக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் ஈடுபட்டு நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதால் புது தெம்புடன் ஆரோக்கியமாக வலம் வரலாம்.