
பெரியவர்கள் சில விஷயங்களை, ‘தரித்திரம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அவற்றைச் செய்யும்போது வீட்டில் செல்வம் நிலைக்காது என்பது அவர்கள் சொல்லிச் சென்றுள்ள கருத்து. வாழ்வியலாகப் பார்த்தால் பெரியவர்கள் கூறி இருக்கும் அந்தக் கருத்துக்கள் உண்மைதான். முன்னோர்களின் இந்த அறிவுரைகள் வாழ்வியலில் பல நன்மைகளைத்தான் வழங்குகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க / வாங்க வேண்டும்.
செல்வம் நிலைக்க, விருத்தி அடைய பணம் கொடுக்கல், வாங்கல், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவராலும் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்பக் கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி போன்றவற்றில் உட்காரக்கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் போன்றவற்றை அடுத்தவர்கள் நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
எரியும் குத்துவிளக்கை தானாக அணைய விடக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். வீட்டில் யாரையும் ‘சனியனே’ என்று திட்டக் கூடாது. ‘எழவு’ என்ற வார்த்தையையும் கூறக் கூடாது.
அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக் கூடாது. அரிசியை கழுவும்போது, அது தரையில் சிந்தக் கூடாது.
உங்கள் வீடுகளில் லட்சுமி கடாட்சம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவற்றை வாட விடக் கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக் கூடாது.
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். நெல்லிக்கனிக்கு ‘ஹரிபலம்’ என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் இது திகழ்கிறது. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது. நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தவை. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா வழிபாடு பூஜை குபேர பூஜைக்கு சமம். செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றைப் பார்க்க வேண்டும். தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்றுதான் சொல்ல வேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.