"ஐயோ.. புது டிரஸ்ல கறை பட்டுடுச்சே!" - கவலை வேண்டாம், இந்த 5 டிப்ஸ் போதும்!

Stain On dress
Stain On dress
Published on

வெள்ளை நிற ஆடைகளை அணிவது ஒரு தனி கெத்துதான். அது நமக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தரும். ஆனால், அந்த வெள்ளைத் துணிகளைப் பராமரிப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய தலைவலி. ஒரு சின்ன காபி துளியோ அல்லது எண்ணெய் கறையோ பட்டுவிட்டால் போதும், அந்த ஆடையின் மொத்த அழகும் கெட்டுவிடும். 

சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த 'ஸ்டெயின் ரிமூவர்' திரவங்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், பல நேரங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை; பணமும் விரயமாகிறது. ஆனால், கவலை வேண்டாம். நம் சமையலறையில் இருக்கும் சாதாரணப் பொருட்களை வைத்தே, எப்பேர்ப்பட்ட விடாப்பிடி கறையையும் விரட்டி அடிக்க முடியும். 

காபி, டீ கறைகளை விரட்ட: காலையில் அவசரமாகக் கிளம்பும்போது காபியோ, டீயோ சிந்திக்கொள்வது சகஜம். அப்படி நடந்தால், காய்ந்து போகும் வரை காத்திருக்காமல் உடனே குளிர்ந்த நீரில் அந்தப் பகுதியை அலசுங்கள். பிறகு, சமையலுக்குப் பயன்படுத்தும் 'பேக்கிங் சோடா'வை கறையின் மீது தூவி, லேசாகத் தேய்த்துவிட்டு ஒரு 20 நிமிடங்கள் ஊறவையுங்கள். பழைய கறையாக இருந்தால், வினிகரும் தண்ணீரும் கலந்த கலவையில் ஊறவைப்பது சிறந்த பலனைத் தரும்.

எண்ணெய் பிசுக்கு மற்றும் கிரீஸ்: உணவு சாப்பிடும்போது படும் எண்ணெய் கறைகள் சாதாரண சோப்பிற்கு மசியாது. இதற்குத் தண்ணீர் ஊற்றுவது தவறு. கறை பட்டவுடன், வீட்டில் இருக்கும் டால்கம் பவுடர் அல்லது சோள மாவை அந்த எண்ணெய் கறையின் மீது கொட்டி விடுங்கள். மாவு அந்த எண்ணெயை முழுவதுமாக உறிஞ்சிவிடும். 10 நிமிடங்களுக்குப் பிறகு மாவைத் தட்டிவிட்டு, பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் லிக்விட் சோப்பைப் போட்டுத் துவைத்தால் எண்ணெய் கறை மாயமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
சருமத் தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை: வெள்ளை மஞ்சள்!
Stain On dress

வியர்வை மற்றும் மஞ்சள் கறை: வெள்ளை சட்டையின் கழுத்து காலர் மற்றும் கை இடுக்குகளில் ஏற்படும் மஞ்சள் கறைகள் பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இதை நீக்க 'இயற்கை ப்ளீச்' ஆன எலுமிச்சைப் பழம்தான் சிறந்த தீர்வு. எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு கலந்து, கறை உள்ள இடங்களில் தடவி, அரை மணி நேரம் வெயிலில் காய வையுங்கள். சூரிய ஒளியும் எலுமிச்சையும் இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து கறையை நீக்கிவிடும்.

மை (Ink) கறைகள்: பள்ளிச் சீருடையில் குழந்தைகள் கொண்டு வரும் மை கறைகளைப் பார்த்துப் பதற வேண்டாம். கறை படிந்த துணிக்கு அடியில் ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டு, மேலே சானிடைசர் அல்லது ஆல்கஹால் கொண்டு தேய்க்கவும். இப்படிச் செய்யும்போது மை கரைந்து அடியில் உள்ள பேப்பரில் இறங்கிவிடும். அவசரத்திற்கு வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை மை மீது தடவித் தேய்ப்பதும் நல்ல பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:
தீராத வினைகளையும் தீர்க்கும் ‘மஞ்சள் தேங்காய்’ பரிகார வழிபாட்டின் ரகசியம்!
Stain On dress

மஞ்சள் மற்றும் குழம்பு கறைகள்: சாப்பிடும்போது குழம்பு சிந்திவிட்டால் ஏற்படும் மஞ்சள் கறையை நீக்க, குளிர்ந்த பால் ஒரு சிறந்த மருந்து. கறைபட்ட இடத்தில் குளிர்ந்த பாலை ஊற்றி ஊறவைக்கவும். அல்லது சோப்பு பேஸ்ட் தடவித் துவைக்கவும். முக்கியமாக, துவைத்த துணியை நல்ல வெயிலில் காயவைக்க வேண்டும். மஞ்சளின் நிறத்தை மங்கச் செய்யும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு.

எனவே, இனி உங்கள் வெள்ளைத் துணிகளில் கறை படிந்தால், அதைக் குப்பையில் போட வேண்டிய அவசியமில்லை. மேலே சொன்ன குறிப்புகளைப் பயன்படுத்திப் பாருங்கள். இவை உங்கள் ஆடைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தேவையற்ற செலவுகளைக் குறைத்து உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com