

வீட்டுக்கு பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு என்று வருவதுதான் வெயில் காலம். அப்போது பிள்ளைகளுக்கு விடும் கோடை விடுமுறையை இதற்கு பொருத்தமாக பயன்படுத்தலாம்.
மிக முக்கியமாக எல்லாவற்றையும் உங்கள் பிள்ளைகளை உதவிக்கு வைத்துக்கொண்டு செய்வது நல்லது. அவர்களும் இதை கற்றுக்கொள்வார்கள்.
பரணில் இருக்கும் பாத்திரங்கள் பூஞ்சை பிடித்து அழுக்காக இருக்கும் அவற்றைக் கழுவி வெயிலில் காயவைத்து சுத்தமாக்கி எடுத்து வைக்கலாம்.
பருப்பு வகைகள் கோடையில் விலை குறைவாக கிடைக்கும். மொத்தமாக வாங்கி சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து எடுத்து பாத்திரங்களில் வைத்தால் மாத கணக்கு பூச்சித்தொல்லைகள் இல்லாமல் பாதுகாக்கலாம்.
சுத்தமாக ஈரம் போகும் அளவுக்கு ஒரு வாரமாவது பருப்பு ஐட்டங்களை காயவைத்து காற்று புகாமல் பாத்திரத்தில் மூடி வைக்கலாம். வெறும் வாணலியில் வறுத்தும், ஆறவைத்தும், பாதுகாப்பாக பருப்பு வகைகளை எடுத்துவைக்கலாம். அதில் காய்ந்த மிளகாய் நான்கு, மிளகு ஐந்து என போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
புளியம்பழ சீசனும் கூட, நேரம் இருந்தால் புளி வாங்கி கொட்டை நீக்கி சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கலாம்.
அரிசி வாங்கும்போது சாக்கில் இருந்தால் பூச்சிகள், வண்டுகள் வரும். அதனை மூடிய பாத்திரங்களில் வைப்பதே சிறந்தது.
அதில் காய்ந்த வேப்பிலை, நொச்சி இலை, காய்ந்த மிளகாய் என அரிசிப் பாத்திரத்தில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
மொட்டை மாடியில் வத்தல், வடாம் வகைகளை சுத்தமான துணியில் போட்டு, மேலே துணியில் மூடி கற்களை பாலித்தீன் கவரில் வைத்து சுற்றி வைத்தால் காற்றில் வரும் புழுதியும் படாது. காகமும் தொடாது.
வாரம் ஒரு நாள் வார்ட்ரோப், அலமாரிகளில் துணிகளை சுத்தம் செய்து அடுக்கி வைக்கலாம். அதற்கு இதுவே உகந்த நேரம். மழைக்காலத்தில் படிந்த பூஞ்சைகைளை துடைத்துசில நாட்கள் பகலில் திறந்து வைத்தால் அலமாரி சுத்தமாகும் இதில் துர்நாற்றமும் இருக்காது.
பழைய துணிகள், யூனிபார்ம் போன்றவற்றை தனியாக பிரித்து எடுத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்காக உடை கேட்டு வருவோருக்கு கொடுக்கலாம். பிள்ளைகளின் பழைய நோட்டுகளை பிரித்து எழுதாத பேப்பர்களை மட்டும் கிழித்து எடுத்து தனியாக நோட்டுகளை சேகரித்து வைக்கலாம். பிள்ளைகள் வீட்டில் எழுதி பார்க்க இது உதவும். தேவையற்ற பழைய புத்தகங்கள் நோட்டுகளை கடையில் போட்டு விடலாம்.
கிச்சன் மேடை பாத்திரங்கள், அடுக்குகள் என எல்லாவற்றையும் ஒருநாள் சுத்தம் செய்யலாம். விரிசல், உடைசல் இருந்தால் அதை சரி செய்துவிடுங்கள். மழை நாட்களில் இதுபோன்ற பராமரிப்பு பணிகளை செய்வது சிரமம்.
ஹாலில் சோபா, சேர் ஃபர்னிச்சர்களை சரி செய்வது, அதன் துணிகளை துவைப்பது தற்போது இதுபோன்ற பணிகளையும் இப்போது செய்யலாம்.
படுக்கையில் தலையணை என எல்லாவற்றிலும் தூசி படிந்ததை காயவைக்கலாம். கண்ணுக்கு தெரியாத தூசுகளை தட்டிமொட்டை மாடியில் எடுத்துச்சென்று நன்கு காயவைக்கலாம். பெட்ஷீட், தலையணை உறைகளை துவைக்கலாம் துவைத்து காயவைக்க இதுவே சரியான தருணம்.
திரைச் சீலைகள் ,ஜன்னல் வெறுப்புகள் டேபிள் விரிப்புகள் போன்றவற்றை துவைத்து உலர்த்தி வைக்க இது உகந்த நேரம்.
வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் டேபிள் பேன், ஏர் கூலர் போன்றவற்றை சுத்தம் செய்து ரெடியாக்கலாம்.
இதனை எல்லாம் வாரம் ஒருநாள் ஒவ்வொன்றாக குழந்தைகளுடன் விடுமுறையில் செய்து முடிக்கலாம். வீடு சுத்தமாக இருக்கும்.