
பறவைகளுக்கு நாள்தோறும் உணவளித்து வருவது, இயற்கையோடிணைந்த இனிய வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறுவதற்கு சமம். இதனால் நமக்கு நேர்மறை சக்தி கிடைப்பதுடன், நம்மைச் சுற்றி ஓர் அமைதியான சூழலும் உருவாகும். பல நாட்டு கலாசாரங்களும் பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும் மாற முடியும் என்கின்றன. ஒன்பது கிரகங்களின் ஆளுமையும், நம் ஜாதகங்களில் உள்ள கட்டங்களில் எந்த மாதிரியான தாக்கத்தை உண்டுபண்ணக் கூடும் என்பதை ஜோதிடரால் கணித்துத் தர முடியும். கிரக தோஷம் நீங்க அந்த கிரகத்துடன் சம்பந்தப்பட்ட பறவைக்கு தினமும் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வரலாம்.
1. கருணையோடும் அன்போடும் பறவைகளுக்கு உணவளிக்கும்போது, நம் முன்ஜன்ம பாவ வினைகள் நீங்கி, நேர்மறை சக்தி நம்முடன் இணைகிறது. சேவை மனப்பான்மையுடன் இச்செயலை செய்யும்போது அது நம் அடக்கமான பண்பையும், தூய்மையான நோக்கம் மற்றும் நமக்குள் இருக்கும் ஆன்மிக வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது நம் ஆன்மாவை உயர்த்திக் காட்டுவது மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள உயிர்களிடம் அன்பும் நல்லிணக்கமும் கொண்டிருப்பதால் அனைத்து நன்மைகளும் நம்மை வந்தடையவும் உதவி புரிகிறது.
2. பெற்றோரை இழந்தவர்கள் காக்கைக்கு உணவளிப்பது ஏன் தெரியுமா? வானவியல் சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட சக்தியால் ஆட்கொள்ளப்பட்டும், அதனுடன் ஒரு பறவை அல்லது விலங்கு இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி காகம், சனி பகவானின் பிரதிநிதியாகவும், மூதாதையரின் ஆசிகளைப் பெற்றுள்ளதாகவும் நம்பப்படுகிறது. காக்கைக்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் தீமைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்பது நம்பிக்கை. இதேபோல், குருவி மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பதால், முறையே புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் அதிகரிக்கும்.
3. பொதுவாக, இச்செயலை தொடர்ந்து செய்வதால் நேர்மறை அதிர்வலைகள் உருவாகும். நன்றியுடன் கூடிய பரோபகார மனப்பான்மை, வீட்டிற்குள் அளவற்ற வளங்கள் சேர உதவும். காந்தம் போல் மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டங்களையும் இழுத்து வரும்.
4. நம் நிதி நிலைமையை முன்னேற விடாமல் தடுத்து வைத்திருக்கும் எதிர்மறை ஆற்றலை தகர்த்தெறியவும், நம் கடன்கள் தீரவும், பறவைகளின் பசியாற நாம் கொடுக்கும் தானிய வகைகள் வழி செய்யும்.
5. இயற்கையோடு இணைந்து வாழும் பறவைகளோடு தொடர்பு கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது, நம் உள் மனது, மெடிடேஷன் செய்தது போன்ற அமைதி பெறும். உடலின் ஸ்ட்ரெஸ் மற்றும் கவலைகள் நீங்கும். பொறுமை, பொறுப்புணர்வு, ஆன்மிக உணர்வில் வளர்ச்சி போன்ற நற்குணங்கள் நம்முடன் வந்து சேரும்.
பிரபஞ்சத்தின் அளவற்ற வளங்கள் நம் வாழ்வுடன் இணைந்திருக்க உதவும் இந்தப் பழக்கத்தை அனைவரும் தவறாமல் பின்பற்றி நலமோடு வாழ்வோம். வீட்டிற்கொரு மரத்தாலான Bird Feeder அமைத்து வைத்து குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்போம்.