துரித உணவுகளின் மோகம்: ஆரோக்கியப் பேரழிவின் ஆரம்பப் புள்ளி!

The starting point of health disaster
fast food culture
Published on

முந்தைய தலைமுறை பெண்கள் குடும்பத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று சமையலறையிலேயே தங்களது நேரத்தை செலவழித்தனர். தற்போது உள்ள தலைமுறை தனிக்குடித்தனம் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சமைக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பாரம்பரிய சமையல் உணவுகளை செய்வதில் விருப்பமின்மை, குடும்பத்தில் மிகக் குறைவான உறுப்பினர்கள் இருப்பதால் ரெடிமேடு சிற்றுண்டி வகைகளை வாங்கி உபயோகப்படுத்துதல் போன்றவற்றிலேயே தங்களது கவனத்தை செலுத்துகிறார்கள்.

மேலும், சமையலில் அதிக நேரம் செலவழிப்பது, அதற்கான பொருட்களை வாங்க வெளியே செல்லுதல், சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்தல் போன்ற மெனக்கெடல்களை அவர்கள் விரும்புவதில்லை. முற்காலத்தில் மிளகாய்ப்பொடி, மசாலாப் பொடி அரைக்கத் தேவையான பொருட்களை வாங்கி பதமாக வெயிலில் காய வைத்து வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து ஒரு வருடம் வரை வைத்திருப்பார்கள் பெரியவர்கள். ஆனால், இப்போது அவை பிராண்டட் பாக்கெட்டுகளில் பல்பொருள் அங்காடிகள் முதற்கொண்டு அருகில் இருக்கும் பெட்டிக்கடைகள் வரை கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அதிகாலை படிப்பதால் மாணவர்களுக்கு உண்டாகும் 6 நிரூபிக்கப்பட்ட நன்மைகள்!
The starting point of health disaster

தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டப்படும் பலவித வண்ணத் துரித உணவு வகைகள் குழந்தைகளை மிகவும் ஈர்த்து, அவற்றை விரும்பி உண்ண ஆரம்பித்து, கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகியும் விட்டனர். பல பெரியவர்களும் கூடத்தான் இதற்கு அடிமையாக உள்ளனர். அவர்கள் விரும்பி உண்ணும் நூடுல்ஸ் வகைகளில் கலக்கப்படும் நிறக்கலவைகளும், அஜினமோடோ போன்ற சுவையூட்டிகளும், மீண்டும் மீண்டும் அவற்றை சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன.

நாளிதழ்களில், ‘வார இறுதி நாட்களில் இரண்டு கிலோ பிரியாணி வாங்கினால் அரை கிலோ இலவசம்’ என்ற விளம்பரங்கள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. மக்களும் இலவசத்திற்கு ஆசைப்பட்டு அடிக்கடி, ஏன் வாராவாரம் கூட பக்கெட் பிரியாணி சாப்பிடுகின்றனர்.

நம் முன்னோர்கள் பறவைகளைப் போல அதிகாலையில் கண் விழித்து, பறவைகள் தமது கூட்டை சேரும் அந்தி மாலை நேரத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு உறங்கச்செல்லும் வழக்கத்தை வைத்திருந்தனர். தற்போது பெரும்பாலான பெருநகரங்களில் விடிய விடிய பிரியாணி கடைகள் திறந்திருப்பதும், அங்கே வாலிபர்கள் கூட்டம் அலை மோதுவதும் கண்கூடு. அவற்றைக் காணும்போது வேதனையே எழுகிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சி ஹார்மோன்கள்: உங்கள் மனநிலையை மாற்றும் 4 ரகசியக் காரணிகள்!
The starting point of health disaster

பசிக்கு உண்ணும் காலம் என்பது போய், ருசிக்கும், ஆசைக்கும் உண்ணும் காலமாகி விட்டது தற்போது. மாயாபஜார் படத்தில் ரங்காராவ் போல இஷ்டப்பட்டதை நினைத்த நேரத்தில் உண்கிறோம். அடிக்கடி பொரித்த இறைச்சி வகைகள், ஃபிரன்ச் ஃபிரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்து உண்கிறோம். துரித உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், கெட்ட கொழுப்பு, அதிக அளவு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், பழைய கெட்டுப்போன இறைச்சி வகைகளையும் இதுபோன்ற உணவகங்கள் விற்பனை செய்யத் தயங்குவதில்லை.

இவற்றை உண்பதால் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இருதய நோய், இள வயதில் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவை தாக்குகின்றன. ஏழு, எட்டு வயது சிறுவர், சிறுமிகள் கூட அதீத உடல் பருமனோடு இருக்கின்றனர். ஒன்பது அல்லது பத்து வயதிலேயே குழந்தைகள் பூப்படைதல், பெண்களுக்கு பி.ஸி.ஓ டி, கருத்தரித்தலில் சிக்கல்கள் என இதன் பட்டியல் நீள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com