
காதலர் எந்தெந்த வகையில் ஒத்திருக்க வேண்டும்? காதலரிடையை எந்தெந்த பண்புகள் இருக்கக் கூடாது? தொல்காப்பியர் வழங்கும் காதலருக்கான விதிமுறைகள்!
ஒத்திருக்க வேண்டியவை:
1. பிறப்பு
2. குடிமை (குடி இயல்பு)
3. ஆண்மை, பெண்மைத் தன்மைகள்
4. ஆண்டு
5. உருவப் பொலிவு
6. ஒத்த காம எழுச்சி
7. நிறை (நிறை எனப்படுவது மறை பிறர் அறயாமை)
8. அருள் என்னும் கொடைத்தன்மை
9. உணர்வு ஒத்திருத்தல்
10. திரு என்னும் செல்வ-நிலை
என்று இந்த பத்து பிரிவுகளில் காதலனும் காதலியும் ஒத்திருக்க வேண்டும். இவற்றில் ஆண்மகன் சற்று உயர்ந்த நிலையினன் ஆகவும் இருக்கலாம் என்றும் ஆண்களுக்குச் சிறிது ஆதரவு காட்டுகிறது.
இருக்கக் கூடாத பண்புகள்:
1. நிம்பிரி (அழுக்காறு, ஔவியம்)
2. கொடுமை (அறன் அழியக் கொடுமை செய்ய எண்ணுதல்)
3. வியப்பு (தம்மைப் பெரிதாக நினைத்தல்)
4. புறமொழி (புறங்கூறுதல்)
5. வன்சொல் (கடுமையாகத் திட்டுதல்)
6. பொச்சாப்பு (தன்னை மறந்து செயல்படுதல்)
7. மடிமை (முயற்சி இல்லாமை)
8. குடிமை இன்புறல் (தன் குடிப் பெருமையை நினைத்து இன்புறுதல்)
9. ஏழைமை (பேதைமை, உண்மையை அறிய மறுத்தல்)
10. மறப்பு (கற்றதையும், கேட்டதையும் மறத்தல்)
11. (போலி) ஒப்புமை (அவனைப் போன்றவன் இவன், அவளைப் போன்றவள் இவள் என ஒப்பிட்டுப் பார்த்தல்)
ஆகியவை இருக்கக் கூடாது.
'ஒத்திருக்க வேண்டிய பத்தும், இருக்கக் கூடாத பதினொன்றும் என்று தொல்காப்பியம் காட்டும் காதல் விதிமுறைகளைப் பின்பற்றி இந்தக் காலத்தில் காதலிக்க முடியுமா?' என்று என்னிடம் கேள்வியெல்லாம் கேட்க வேண்டாம்.
தங்கள் மனதிற்குப் பிடித்தவர்களைக் காதலித்துக் கரம் பிடிக்க உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்...!