
நமது பழங்காலப் பாரம்பரியம் மிக்க வேத மந்திரங்களை மனப்பாடம் செய்து அடிக்கடி உச்சரித்து வருவது, நமது மூளையின் அளவை பெரிதாகச் செய்யவும், பிரச்னைகளை தீர்க்கவும் உதவும். இது புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலை வளரச் செய்யவும் சிறந்த முறையில் உதவும் என கற்றறிந்த அறிஞர்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் மேற்கத்திய கலாசாரம் நம் நாட்டில் பரவ ஆரம்பித்ததும் சமஸ்கிருத மந்திரங்களின் புகழ் சிறிது மங்க ஆரம்பித்தது.
நரம்பியல் விஞ்ஞானிகள், அடிக்கடி சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்துவரும் பண்டிட்கள் 21 பேர்களிடம் நடத்திய ஆராய்ச்சி மற்றும் காயத்ரி மந்திரத்தின் மீது AIIMS நடத்திய ஆராய்ச்சி ஆகிய இரண்டின் முடிவுகளுமே அதிர்ச்சி தரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.
பெருமூளையின் இரண்டு அரைக் கோளங்களில் உள்ள மூளையின் உணர்ச்சி, நினைவகம், இயக்கம் மற்றும் சிந்தனை போன்ற செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கிரே மேட்டரின் (grey matter) செயல் திறன் 10 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சிகளின் முடிவும், MRI டெஸ்ட் முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தப் பரிசோதனைக்கு, ‘சமஸ்கிருதத்தின் தாக்கம்’ (Sanskrit Effect) எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்ட 21 வேதாகமப் பண்டிட்களும் அவர்களின் சிறு வயது முதலே சமயத்திருமுறை நூல்களை மனதில் இறுத்தி பயின்று வந்துள்ளனர். சுக்ல யஜுர் வேதா மற்றும் அதன் உரை அடங்கியுள்ள நூலில் 40,000 முதல் 1,00,000 வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டது மட்டுமின்றி, அவற்றின் உச்சரிப்பு, தாளம், சுருதி மற்றும் தொனி வேறுபாடுகளையும் குறைவின்றி கற்றுத் தெளிந்துள்ளனர் அவர்கள்.
கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் அவர்களின் வலது புற மூளைப் பின்புற மேடு சற்றுப் பெரிதாக்கம் கொண்டிருப்பதும், கேட்கும் திறன், மொழி வகைகள், குரல் அறிதல், முகங்களை அடையாளம் காணுதல், இடஞ்சார்ந்து உணர்தல் ஆகிய திறமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலது டெம்போரல் கார்டெக்ஸ் (temporal cortex) தடிமனாகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருடக்கணக்கில் ஒரு வடிவமைக்கப்பட்ட முறையில் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து வந்தது, மூளையின் முக்கியப் பகுதிகளை மறுசீரமைத்து வலுவடையச் செய்துள்ளது என்ற உண்மை இந்த ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது. சமஸ்கிருதம் ஒரு மொழி என்பதைத் தாண்டி, அதை ஆர்வத்துடனும் நுண்ணறிவு கொண்டும் கற்றுக்கொள்பவர்களின் மூளை பல வழிகளில் மேம்பாடடையவும் கூர்நோக்கு சக்தி பன் மடங்கு பெருகவும் செய்யும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. நாளடைவில், இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தால், அது மூளையின் நியூரோபிளாஸ்டி சிட்டியை முன்னெடுத்துச் செல்ல உதவும்.