

மழைக்காலத்தில் குடையை வாங்கிய சில நாட்களிலேயே அது துருப்பிடித்தோ அல்லது கிழிந்தோ போவது பலருக்கும் நடக்கும் விஷயம்தான். ஆனால் குடையை மடிப்பதற்கு முன் சில விஷயங்களைச் சரியாக செய்தால் குடை ஒரு வருடம் அல்ல, பல வருடங்கள் வரை வீணாகாமல் நீடிக்கும்.
குடை பராமரிப்பு :
மழைக்காலத்தில் குடையைப் பயன்படுத்திய பிறகு, நாம் செய்யும் சில சிறிய தவறுகளால் குடை சீக்கிரமாகவே வீணாகிவிடுகிறது. குடையை மடிப்பதற்கு முன் அதை முழுமையாகக் காயவைப்பது மட்டுமே அதன் ஆயுளை ஒரு வருடத்திற்கும் மேலாக நீட்டிக்கச் செய்யும் மிக முக்கியமான செயலாகும். ஈரமான குடையை அப்படியே மடித்து வைப்பதால் துணியில் பூஞ்சை பிடிக்கத் தொடங்கும். அத்துடன் குடையின் கம்பிகளில் துருப்பிடித்து, துணி சீக்கிரமாகவே கிழிந்துவிடும்.
குடை நீண்ட நாட்களுக்குப் புதியது போல உழைக்க, மடிப்பதற்கு முன்பு செய்யவேண்டிய சில எளிய வழிமுறைகள் உள்ளன.
தண்ணீரை உதறுங்கள்:
வீட்டிற்குள் நுழைந்ததும் குடையை நன்றாக உதறி, அதிலுள்ள உபரி நீர்த் துளிகளை வெளியேற்ற வேண்டியது அவசியம். ஆனால் பலர் குடையில் இருக்கும் தண்ணீரை வடிப்பதற்கு குடையைத் தரையில் பலமாகத் தட்டுவார்கள் அல்லது வேகமாக உதறுவார்கள்.
இப்படி செய்வதால் குடையின் கம்பிகள் மட்டும் நட்டுகள் தளர்ந்து, குடை சீக்கிரமே உடைந்து விடும். எனவே தண்ணீரை மெதுவாக உதறிவிட்டு காயவைக்கவும்.
குடையில் சேறு அல்லது அழுக்கு படிந்தால் கடினமான பிரஷ்களை பயன்படுத்தாமல், லேசான சோப்பு நீர் மற்றும் மென்மையான துணியைப் பயன்படுத்தி துடைக்க சரியாகிவிடும்.
விரித்து வைத்து காயவையுங்கள்:
குடையைப் பயன்படுத்தி முடித்ததும், அதை மூடிய நிலையில் வைக்காமல் நன்றாக விரித்து வைத்து உலர விட வேண்டும். அத்துடன் மழையில் எடுத்துச் சென்றக் குடையை அப்படியே மடிக்காமல், ஒரு ஓரமாக முழுமையாக விரித்து வைத்துக் காயவைக்க குடைத்துணியில் பூஞ்சை (Mold) பிடித்து துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்ப்பதுடன், சீக்கிரம் கிழிந்து போவதையும் தவிர்க்கலாம். இது குடை நீண்ட நாட்கள் வருவதற்கு உதவும்.
நிழலில் உலர்த்துங்கள்:
குடையை நேரடியாக வெயிலில் காய வைக்கக்கூடாது. வெயில் படுவதால் குடையின் நிறம் மங்குவதுடன், அதன் துணியின் தரமும் குறைந்து விடும். முக்கியமாக அதன் நீர்ப்புகாத் தன்மை (Waterproof coating) பாழாகிவிடும். எனவே குடையை வெயிலில் காய வைப்பதை விட, நிழலான மற்றும் காற்றோட்டமான இடத்தில் காய வைப்பது நல்லது.
கம்பிகளைத் துடையுங்கள்:
குடைத் துணி காய்ந்தாலும், அதன் உட்புறக் கம்பிகளில் தண்ணீர் தங்கி இருக்க வாய்ப்புள்ளது. இது கம்பிகளில் துருப்பிடிக்க வழிவகுக்கும். எனவே குடை காய்ந்ததும் அதன் உள் பக்கம் உள்ள இரும்புக் கம்பிகளை ஒரு உலர்ந்த காட்டன் துணி கொண்டு துடைத்துவிட்டு, சிறிது ஆறவிட்டு மடிக்க குடைக்கம்பிகள் துருப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்கலாம். மழைக்கால உபயோகம் முடிந்ததும் குடைக்கம்பிகளின் மூட்டுகளில் (ஜாயிண்ட்ஸ்) சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது மெஷின் ஆயில் தடவி வைக்க துருப்பிடிக்காமல் நீண்ட நாட்கள் உழைக்கும்.
தளர்வாக மடியுங்கள்:
குடை முழுமையாகக் காய்ந்த பிறகு அதன் மடிப்புகளுக்கு ஏற்ப நேர்த்தியாகவும், இறுக்கமாக இல்லாமலும் தளர்வாகச் சுற்றி மடித்து வைப்பது குடை நீண்ட நாட்கள் உழைக்க உதவும்.
உறைக்குள் வையுங்கள்:
குடை நன்கு காய்ந்ததும், அதன் துணிகளைச் சுருக்கங்கள் இல்லாமல் ஒழுங்காக மடித்து உறைக்குள் வைப்பது நல்லது. குடையுடன் கொடுக்கப்பட்ட கவரை (Sleeve) தூக்கி எறியாமல், குடை காய்ந்த பின்பு அதற்குள் போட்டு வைக்க தூசி படியாமல் இருப்பதுடன் குடைக்கு கூடுதல் பாதுகாப்பையும் தரும்.
அடுத்தமுறை மழையில் நனைந்து வந்ததும் சோம்பேறித்தனம் படாமல் குடையை விரித்து வைத்து நன்கு காயவைத்து சரியாகப் பராமரிக்க பல வருடங்களுக்கு குடை பழுதாகாமல் உழைக்கும்.
இந்த எளிய பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், ஒவ்வொரு மழைக்காலத்திலும் புதிதாகக் குடை வாங்கும் வீண் செலவு மிச்சமாகும். துருப்பிடிக்காத, கிழியாத மற்றும் துர்நாற்றமில்லாத குடையை பல வருடங்களுக்குப் புதியது போலத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.