
சமீபத்தில் ஜிவாஸ்கைலா பல்கலைக்கழகம், finland ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அன்னல்ஸ் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது, அந்த ஆய்வின்படி, இளம் வயதிலேயே ஆரம்பிக்க படுகின்ற ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களின் விளைவுகள் 36 வயதிற்குள் வெளிப்படத் தொடங்குகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை போன்ற ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களின் எதிர்மறையான விளைவுகள் பொதுவாக 36 வயதிலேயே வெளிப்படத் தொடங்குகின்றன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்விற்காக, பின்லாந்து நகரத்தில் வசிக்கும் சுமார் 370 பேரை ஆராய்ச்சியாளர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்தனர். 27, 36, 42, 50 மற்றும் 61 வயதுடையவர்களில் ஆய்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் ஆய்வுக்கான விவரம் சேகரிக்கப்பட்டது. புகைபிடித்தல், அதிக மது அருந்துதல் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகிய மூன்று கெட்ட பழக்கங்களின் காரணமாக 36 வயதுக்குள் உடல்நலக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்று ஆய்வின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
40 மற்றும் 50 வயதுடையவர்களுக்கு ஆரோக்கியமற்ற நடத்தைகளின் காரணமாக முதுமையில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவர்களின் பகுப்பாய்வு 36 முதல் 61 வயது வரை ஆரோக்கியமற்ற நடத்தைகளின் தீய விளைவுகள் ஒரே மாதிரியாகவே இருந்தன என்பதைக் காட்டுகிறது, 36 வயதிலேயே இந்த பாதிப்பின் பிணைப்பு ஆரம்பித்து விடுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஜிவாஸ்கைலா பல்கலைக்கழகத்தின் முதுமையியல் ஆராய்ச்சி மையத்தின் சுகாதார விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான தியா கெகலைனென், "புகைபிடித்தல், அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளின்மை போன்ற ஆபத்தான சுகாதார நடத்தைகளை விரைவில் கையாளுவதன் முக்கியத்துவத்தை எங்கள் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
இதனால் பல ஆண்டுகளாக அதிகரிக்கும் சேதத்தைத் தடுக்க முடியும், இதை முன்னெச்சரிக்கையாக தடுக்கா விட்டால், பிற்காலத்தில் மோசமான மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் முடிவடைகிறது” என்று கூறினார்.
மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, இதயநோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைத்து, ஆரம்பகால மரணத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்று கெகலைனென் கூறினார்.
உடற்பயிற்சியின்மை குறிப்பாக மோசமான உடல் ஆரோக்கியத்திற்கும், புகைபிடித்தல் மோசமான மன ஆரோக்கியத்திற்கும் தொடர்புடையது. இருப்பினும், அதிக மது அருந்துதல் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தின் சரிவுடன் தொடர்புடையது.
இந்த மூன்று ஆரோக்கியமற்ற நடத்தைகளும், மனச்சோர்வு அறிகுறிகள் மற்றும் வளர்சிதை மாற்ற அபாயங்கள் அதிகரிப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு வலுவான தீய விளைவுகளை ஏற்படுத்துவதாகக் காணப்பட்டது.
"தற்போதைய ஆய்வின் கண்டுபிடிப்புகள், 36 வயது முதல் 61 வயது வரையிலான காலகட்டத்தில் இந்த தொடர்புகள் முக்கியமாக ஒரே மாதிரியாக இருந்தன என்பதைக் காட்டுகின்றன. எனவே, முந்தைய ஆபத்தான நடத்தைகளின் ஒட்டுமொத்த தொடர்பு ஏற்கனவே 36 வயதிலியே உள்ளது, நடுத்தர வயதிற்கு பிறகு அல்ல என்பதே இந்த ஆய்வின் முக்கிய கருத்தாகும்.
ஆகவே, இளைஞர்களே தயவு செய்து தீய பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் ஆரம்பித்திருந்தாலும் இந்த கட்டுரையை படித்த பிறகு அதை கைவிடுவதற்கான முயற்சியை செய்யுங்கள். உங்களின் ஆரோக்கியமான எதிர்காலம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது!