
ஒரு வீட்டை நாசமாக்கி நிர்மூலமாக்குவது கோபம்தான். கோபம் என்ற மூன்றெழுத்து ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதையும் செய்வதில்லை. மாறாக, 100 சதவிகிதம் தீங்கு மட்டுமே செய்கிறது.
பொதுவாக, நாம் அறியாதவற்றை அறிந்துகொள்ள நேரிடும்போது, நம்மை நாமே மாற்றிக் கொள்கின்றோம். ஆனால், அதன் தீமைகளை நாம் அறிந்திருந்தும் இந்த பொல்லாத கோபத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றோம். ஒரு நொடிக்குக் குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக்கூடிய கோபத்திற்கு பொல்லாதது என்ற வார்த்தை பொருத்தமானதுதான்.
கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு. இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்னைகளிலும் பங்கு வகிக்கிறது. இது சமுதாய சட்டங்களையும், நன்னடத்தையையும் மீறச் செய்கிறது. நாட்டுத் தலைவர்களின் தனி நபர் கோபம் பல உயிர்களை எடுக்கக்கூடிய போராக உருவெடுக்கிறது.
ஆகையால், இதைக் கண்களை மறைக்கும் இருள் அல்லது அறியாமை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில், கோபம் வரும்போது நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை. கோபக்காரன் வீட்டிலிருக்கும் பானைத் தண்ணீர் கூட வற்றிக் காய்ந்து விடும் என்பார்கள்.
கோபம் எவ்வாறு நம்மை பாதிக்கிறது?
உடல் ரீதியான பாதிப்புகள்: தலைவலி, முடி உதிர்தல், சரும வியாதிகள், களைப்பு மற்றும் தூக்கமின்மை, எடை கூடுதல், எடை குறைதல், மலச்சிக்கல், மூட்டுவலி, தசைப்பிடிப்பு, வயிற்றுவலி, மார்புவலி, அதிகமாக வேர்த்தல் போன்றவை.
மன ரீதியான பாதிப்புகள்: வருத்தம், டென்ஷன், சிடுசிடுப்பு, கடுகடுப்பு, கவலை. உற்சாகமின்மை, தற்கொலை மனப்பான்மை ஆகியவை.
புத்தி சம்பந்தமான பாதிப்புகள்: ஞாபக மறதி, குழப்பம், பகுத்தறிவோ அல்லது சரியான முடிவு எடுக்க முடியாத நிலை.
சமுதாய பாதிப்புகள்: வன்முறைகள், சமூக விரோதச் செயல்கள், போர், தீவிரவாதம், சட்டவிரோதமான போராட்டங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்த ஒருசில வழிகள்: முதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்வது, கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1, 2, 3 என எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல், பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல், நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்னைகளை இலேசாக்குதல், தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல், மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல். காரணத்தை பேசாமல் நிவாரணத்தை யோசித்தல். காலை எழுந்தவுடன் தியானம் செய்தல், இரவு உறக்கத்திற்கு முன்பும் தியானித்தல்.
கோபத்தை நீக்கி அமைதியை நிரப்பும் தியானம்: தியானத்தில் நேர்மறையான சிந்தனைகளினாலும், இறைவனை அன்புடன் நினைவு செய்வதாலும் மனதை சாந்தப்படுத்தலாம். மேலும், பிரச்னைகளையும் அமைதியான முறையில் அணுகலாம். ஏனெனில், தியானம் செய்யும்போது அமைதியின் கடலான பரம்பொருளுடன் புத்தி மூலமாக தொடர்பு கொள்வதால் நமது உள்மனதில் அமைதி நிரம்பி, நாம் அமைதியின் சொரூபமாகி விடுகிறோம்.