எமன் உங்கள் அருகில் வரும் அந்த 'ஒரு நொடி'... வாகன ஓட்டிகளே உஷார்!

Using phone in driving
Using phone in driving
Published on

இன்றைய அவசர உலகில், வாகனம் ஓட்டிக்கொண்டே போனில் பேசுவது அல்லது அருகில் இருப்பவரிடம் அரட்டை அடிப்பது என்பது மிகச் சாதாரணமான விஷயமாகிவிட்டது. "எனக்கு வண்டி ஓட்டுவது கைவந்த கலை, நான் போனை காதில் வைக்கவில்லையே, ஹெட்செட் தானே பயன்படுத்துகிறேன், அப்புறம் என்ன ஆபத்து?" என்று பலரும் அலட்சியமாகப் பதில் சொல்வதை நாம் கேட்டிருப்போம். 

ஆனால், சாலை விபத்துகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை ஆராய்ந்த ஜப்பானின் ஃபுஜிதா ஹெல்த் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். நாம் சாதாரணமாக நினைக்கும் அந்த உரையாடல், நம் மூளையின் செயல்பாட்டையே எப்படி மாற்றுகிறது என்பதை இந்த ஆய்வு தோலுரித்துக் காட்டியுள்ளது.

வாகனம் ஓட்டுவது என்பது முழுக்க முழுக்க நம் பார்வையைச் சார்ந்த ஒரு செயல். நாம் சாலையில் செல்லும் போது, நம் மூளைக்குத் தேவையான 90 சதவீத தகவல்கள் கண்கள் மூலமாகவே கிடைக்கின்றன. ஆனால், நாம் வாகனம் ஓட்டிக்கொண்டே பேசத் தொடங்கும்போது, நம் மூளை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதாவது, மூளையானது தனது கவனத்தை 'பார்த்தல்' மற்றும் 'மொழி' என இரண்டு விஷயங்களுக்கும் சமமாகப் பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச நினைக்கும்போது, அதற்கான வார்த்தைகளைத் தேடுவதிலும், வாக்கியங்களை அமைப்பதிலும் மூளை மும்முரமாகி விடுகிறது. இப்படி மூளை பிஸியாக இருக்கும் அந்தத் தருணத்தில், சாலையில் திடீரென ஒரு வாகனம் குறுக்கே வந்தாலோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ, அதை நம் கண்கள் பார்த்தாலும், மூளை அதைப் புரிந்துகொண்டு ரியாக்ட் செய்யத் தாமதமாகும். இந்தத் தாமதம் சில மில்லி செகண்டுகள் தான் என்றாலும், விபத்தை ஏற்படுத்த அதுவே போதுமானது.

ஆய்வு சொல்லும் உண்மை!

சுமார் 30 நபர்களை வைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பேசிக்கொண்டே வண்டி ஓட்டும்போது நம் கண்கள் செயல்படும் வேகம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நம் பார்வையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் விஷயங்களைக் கவனிப்பதில்தான் அதிக சிக்கல் எழுகிறது. 

சாலையில் உள்ள பள்ளங்கள், கற்கள் அல்லது திடீரென ஓடிவரும் குழந்தைகள் பெரும்பாலும் நம் பார்வையின் கீழ்ப்பகுதியில்தான் தெரிவார்கள். ஆனால், நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்தக் கீழ்ப்பகுதியைக் கவனிக்கும் திறன் மற்ற திசைகளை விட மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. கண்கள் அந்தப் பொருளைப் பார்த்தாலும், "இதுதான் ஆபத்து" என்று மூளை உணர்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

இதையும் படியுங்கள்:
டயரில் இருக்கும் சிறிய முடிகள் எதற்கு? பலரும் அறியாத ரகசியம் இதோ!
Using phone in driving

பலரும் நினைப்பது போல, கையில் போன் இல்லாதது பாதுகாப்பானது கிடையாது. ஏனெனில், பிரச்சனை உங்கள் கைகளில் இல்லை, உங்கள் மூளையில் இருக்கிறது. நீங்கள் புளூடூத் அல்லது ஸ்பீக்கரில் பேசினாலும், உங்கள் மூளை வார்த்தைகளைத் திட்டமிடும் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு 'கவனக்குருட்டுத்தன்மை' ஏற்படுகிறது. அதாவது கண்கள் திறந்திருந்தாலும், எதிரே நடப்பது மூளையில் பதியாது.

வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளுக்குப் பெரும்பாலும் நாம் சாலை விதிகளையோ அல்லது பிறரையோ குறை சொல்கிறோம். ஆனால், உண்மையில் நம் கவனச் சிதறலே பல உயிர்களைப் பறிக்கிறது. ஒரு சிறிய உரையாடல், உங்கள் அல்லது பிறரது உயிரை விடப் பெரியது அல்ல. 

இதையும் படியுங்கள்:
இருசக்கர வாகனம் வாங்கும் முன்...
Using phone in driving

எனவே, வாகனம் ஓட்டும்போது அழைப்பு வந்தால், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுப் பேசுங்கள் அல்லது பயணத்தை முடிக்கும் வரை காத்திருங்கள். அந்தச் சில நிமிட மௌனம், உங்களைப் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com