
இயற்கையின் அழகிய செயற்பாடுகளில் குழந்தையின் பிறப்பும் வளர்ச்சியும் சிறப்பிடம் வகிக்கிறது. ஒரு குழந்தையின் சிரிப்பும், பரிசுத்த மனதும், இறைவனின் உருவம் போன்று திகழ்கின்றன. “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்” என்பது வெறும் சொற்கள் அல்ல. அது ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரு சமூகத்தின் உயிர்சுமை. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தெய்வீக கடமை, பாசமும் பொறுப்பும் சேர்ந்த ஒளிமிக்க பயணம். இத்தகைய இடத்தில் அன்பும் நம்பிக்கையும் விதையாகப் பூண்டுவிட்டால், அந்த இடம் வாழ்வின் புனித மையமாக மாறும்.
குழந்தைகளை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். தாய் வளர்க்கும் குழந்தைக்கு மதிப்பும் பலமும் அதிகம். குழந்தைக்குத் தேவையானது உணவு, கல்வி, ஒழுக்கம் அதோடு நேரத்தை நல்ல முறையில் செலவிடுவதாகும். குழந்தையை கவனிக்கும்போது சத்தான உணவு கொடுத்தல், தூங்க வைத்தல், தேவையானதைக் கொடுத்தல், விளையாட்டு பொருட்களைக் கொடுத்து சந்தோஷம் அடையச் செய்தல் ஆகியவைகளை செய்வதுண்டு. ஆனால் வலி தெரிதல் என்பதும், மனவேதனை என்பதும், மன விறைப்பு என்பதும் அவர்களால் கூறமுடியாதபோது அவைகளை உணர்தல் அவசியமாகும்.
குழந்தைகளை உயர்வுபடுத்த வேண்டும். அவர்களோடு பேசி மகிழ வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்று வலி மற்றும் வயிற்று உபாதைகள் எப்போதும் தவிர்க்கும் பொருட்டு கைவசம் மருந்துகள் வைத்திருப்பது நல்லது. வயிற்று போக்கின்போது கஞ்சியின் வடி நீரில் உப்பு கலந்து கொடுப்பது எளியவர்களுக்கு விலைமதிக்க முடியாத மருந்தாகவும் பயன்படும்.
குழந்தைகள் சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக உப்பு, புளிப்பு எரிப்பு, இனிப்பு இல்லாமலிருப்பது நல்லது. சிறு வயதில் சுத்தத்தையும், ஒழுங்கையும் போதிப்பது அவசியமாகும். மேலும், எப்போதும் தைரியத்தையும், கடமையையும் உணர்த்த தவறக்கூடாது. அவர்களிடம் செல்லமாகவும் பேசலாம். கொஞ்சலாகவும் பேசலாம். அவர்கள் பேசுவதை கிண்டல் செய்யாதிருத்தல் அவசியமாகும்.
குழந்தை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
1.அன்பும் பாதுகாப்பும்: குழந்தைக்கு அன்பும் பாதுகாப்பும் மிக முக்கியம். இது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும். குழந்தைகளை தூக்கி போடுதல், சுற்றுதல், கூச்சம் காட்டுதல் போன்றவற்றை செய்தல் ஆபத்தானது. சீரான பாசமான உறவு வளர்ச்சிக்கு அடிப்படை.
2.பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம்: குழந்தைகளை குளிப்பாட்டி, சாம்பிராணி புகையிட்டு அவர்களை சுத்தம் செய்தல் நலம். சீரான உணவு, தூக்கம், சுகாதாரம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு அவசியம். தடுப்பூசி, மருத்துவ பரிசோதனைகள் தவறாமல் செய்ய வேண்டும்.
3.கல்வி மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சி: வயதுக்கேற்ப கல்வி, புத்திசாலித்தனத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுகள், புத்தகங்கள். கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்க வேண்டும்.
4.ஒழுக்கமும் பண்பாடும்: நல்ல பழக்கங்கள், மரியாதை, பொறுமை போன்றவற்றை குழந்தையின் நடத்தை மூலம் கற்றுக்கொடுக்க வேண்டும். முன்னோடியாக நாம் இருக்க வேண்டும்.
5.மனநலம் மற்றும் உணர்ச்சி வளர்ச்சி: குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனஅழுத்தம், பயம் போன்றவற்றை சரியாக கையாள உதவவேண்டும்.
6.சமூகத் திறன்: பிற குழந்தைகள், குடும்பம், சமூகம் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை வளர்த்தல். ஒத்துழைப்பு, பகிர்வு, நட்பு ஆகியவை முக்கியம்.
7.ஆட்டமும் விளையாட்டும்: உடல் இயக்கத்திற்கும், சிந்தனையும் வளர்ச்சிக்கும் விளையாட்டு அவசியம். கற்பிக்கும் விதமாக விளையாட வேண்டும். குழந்தைகளிடம் விளையாடும்போது அறிவு பூர்வமான படங்களை கோலங்கள்போல வரைந்து கதைகளாய் உணர்த்துவது மிகவும் ஆழமாக பதியச்செய்யும்.
வாழ்க்கை முழுவதும் அடித்தளமாக இருக்கும் இந்த வளர்ப்பு அம்சங்கள், குழந்தையை சுயமாக வாழும், பொறுப்புள்ள நபராக உருவாக்க உதவுகின்றன.