பிளாஸ்டிக் சேரில் அந்த ஓட்டை ஏன் இருக்கு தெரியுமா? தெரிஞ்சா இனிமேல் வேற மாதிரி பார்ப்பீங்க!

Chair
Chair
Published on

நமது அன்றாட வாழ்வில் நாம் கடந்து போகும் பல பொருட்களுக்குப் பின்னால், நாம் அறியாத பல ரகசியங்கள் ஒளிந்திருக்கும். அந்த வகையில், கல்யாண மண்டபம் முதல் வீட்டு பால்கனி வரை பிளாஸ்டிக் நாற்காலிகளை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அதன் இருக்கையின் நடுவே இருக்கும் அந்த சிறிய வட்டமான ஓட்டையை எப்போதாவது கவனித்ததுண்டா? 

"அது ஒரு டிசைன்" அல்லது "காற்றோட்டத்திற்காக" என்று பலரும் சாதாரணமாக நினைத்திருக்கலாம். ஆனால், அந்த சிறிய ஓட்டைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காரணங்கள், நீங்கள் நினைப்பதை விட மிகவும் புத்திசாலித்தனமானவை.

அடுக்குவதின் அறிவியல் தந்திரம்!

பிளாஸ்டிக் நாற்காலிகளின் மிகப்பெரிய சிறப்பம்சமே அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக எளிதாக அடுக்க முடிவதுதான். இப்படி அடுக்கும்போது, ஒரு நாற்காலியின் இருக்கைப்பகுதி, அதற்கு கீழுள்ள நாற்காலியின் இருக்கையுடன் மிக நெருக்கமாகப் பொருந்திவிடும். அப்படிப் பொருந்தும்போது, இரண்டிற்கும் நடுவே காற்று சிக்கிக்கொண்டு ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடும். 

இதனால், மேல் இருக்கும் நாற்காலியைத் தூக்கும்போது, அந்த வெற்றிட அழுத்தம் காரணமாகக் கீழுள்ள நாற்காலியும் சேர்ந்தே ஒட்டிக்கொண்டு வரும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த ஓட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டையின் வழியாகக் காற்று எளிதாக வெளியேறிவிடுவதால், வெற்றிடம் உருவாகாது. 

இதனால், நாற்காலிகளை எடுப்பது மிகவும் சுலபமாகிறது. அடுத்த முறை ஒரு கல்யாண மண்டபத்தில் ஊழியர்கள் சரசரவென நாற்காலிகளைப் பிரிப்பதைப் பார்த்தால், இந்த ஓட்டையின் அருமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

இதையும் படியுங்கள்:
விமான நிலைய சக்கர நாற்காலி சேவை!
Chair

கைப்பிடி!

அந்த ஓட்டையின் மற்றொரு புத்திசாலித்தனமான பயன்பாடு, அதை ஒரு கைப்பிடியாகப் பயன்படுத்துவதுதான். ஒரு நாற்காலியைத் தூக்கும்போது, அதன் நடுப்பகுதிதான் அதன் ஈர்ப்பு மையம். அந்த மையப்பகுதியில் விரல்களை நுழைத்துத் தூக்குவதற்கு இந்த ஓட்டை உதவுகிறது. இதனால், நாற்காலியின் எடை சமமாகப் பரவி, அதைத் தூக்குவதும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதும் மிகவும் எளிதாகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று நாற்காலிகளை அடுக்காகத் தூக்க முயலும்போது, இந்த ஓட்டை ஒரு வரப்பிரசாதமாக இருப்பதை உணர முடியும்.

பிளாஸ்டிக் நாற்காலிகள், 'இன்ஜெக்ஷன் மோல்டிங்' (Injection Molding) என்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறையில், உருக்கப்பட்ட பிளாஸ்டிக்கை ஒரு பெரிய அச்சில் அதிக அழுத்தத்துடன் செலுத்தி, குளிர்வித்து, பின்னர் அச்சிலிருந்து வெளியே எடுப்பார்கள். 

இதையும் படியுங்கள்:
நாற்காலி நண்பனா? எதிரியா?... ஆஃபீஸ் பட் என்னும் ஆபத்து!
Chair

இப்படி அச்சிலிருந்து நாற்காலியை எளிதாக வெளியே எடுக்க, சிறிய தள்ளும் கருவிகள் பயன்படுத்தப்படும். இருக்கையின் நடுவில் ஓட்டை இருப்பதால், அச்சிலிருந்து நாற்காலியைப் பிரித்தெடுப்பது சுலபமாகிறது. மேலும், இந்த வடிவமைப்பு பிளாஸ்டிக் சீராகப் பரவி, உறுதியான ஒரு அமைப்பை உருவாக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com