நம் வாழ்க்கையில் பல வகைகளில் தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாமல் பேசுவதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் பேசாமல் அமைதி காத்துவிட்டால், பல இன்னல்களை போக்கி விடலாம். அப்படி நம் வாழ்வில் அமைதியாக இருக்க வேண்டிய 7 இடங்களை பற்றி பார்க்கலாம்.
*ஒருவரை பற்றி முழுமையாக எதுவும் தெரியாத போது, எல்லாம் தெரிந்தது போல பேசுவது மிகவும் தவறு. அதனால் முழுமையாக எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு கருத்து கூறுவது அவசியமாகும். அப்படியில்லையேல் அவ்விடத்தை விட்டு அமைதியாக விலகி விடுவது நல்லது.
*எப்போதுமே அதிகமாக உணர்ச்சி வசப்படும் போது, அமைதியாக இருந்து விடுவது நல்லதாகும். அதிக மகிழ்ச்சியோ அல்லது அதிக கோபமோ இருக்கும் போது எந்த முடிவும் எடுப்பது தவறு, எந்த வாக்குறுதி கொடுப்பதும் தவறு. அதனால் அதிகமாக உணர்ச்சி வசப்படும் தருணம் அமைதி காப்பது நல்லதாகும்.
*இப்போது நாம் வாயை திறந்து பேசக்கூடிய வார்த்தை அடுத்தவரை காயப்படுத்தும் என்று தெரிந்தால், நிச்சயமாக அங்கே அமைதி காப்பது மிகவும் நல்லது.
*நம்முடைய இலக்கையும், நாம் என்னனென்ன திட்டம் வைத்திருக்கோம் என்பதையும் முன் கூட்டியே யாரிடமும் தெரியப்படுத்த கூடாது. அதை பற்றி மற்றவர்கள் வினவும் போது, அந்த இடங்களில் அமைதி காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
*எந்த ஒரு விஷயத்தையும் பற்றிய முழு அறிவு இல்லாத இடத்தில் பேசாமல் இருப்பதே சிறந்தது. எல்லாமும் தெரிந்தது போல பேசி மாட்டிக்கொள்வதை விட அமைதியாக இருப்பது எவ்வளவோ மேலானதாகும்.
*அடுத்தவர்கள் தங்கள் வேதனையை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அமைதியாக அவர்கள் சொல்வதை கவனிப்பதே சிறந்ததாகும்.
*நம்முடைய வார்த்தைக்கு மரியாதை இல்லாத இடத்தில் கருத்து சொல்வதை விடுத்து, அமைதியாக இருந்து விடுவதே சிறந்ததாகும்.
‘அமைதியாக இருக்கும் இடத்திலேயே ஞானம் பிறக்கிறது’ என்று கூறுவதுண்டு. அதனால் வாழ்வில் பேசுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை அமைதியாக கவனித்து அதன் மூலம் மேன்மையடைவதே சிறந்ததாகும்.