ஆசையும், உந்துதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும். இவை வெளி புறத்தில் இருந்து வருவதும், உள்மனதில் இருந்து வருவதும் ஆகும்.
வெளிப்புற உந்துதல்
இது பணியிடத்தில் இருந்து ஊக்குவிப்பது மற்றும் சமூக கலாச்சார ரீதியாக பாராட்டு கிடைப்பது. வீட்டை எடுத்து கொண்டாலும், நாம் சமைக்கும் உணவு நன்றாக இருக்கிறது என்று வீட்டு உறுப்பினர்கள் ருசித்து சாப்பிடும்போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுமே, அது நம்மை சமையலை ஆர்வத்துடனும், ஆசையுடனும் நன்றாக செய்ய தூண்டுகிறது. மனதில் வகை வகையாக இனி என்ன செய்யலாம் என்ற கற்பனையில் அமைதியுடனும், பொறுமையுடனும் செய்தோமானால் செய்யும் உணவு வகை அனைத்துமே சுவையுடன் செய்து விடுவோம்.
உள்ளார்ந்த உந்துதல்
இது வெளிப்புற சூழலால் பாதிக்கபடாத உந்து சக்திகளை உருவாக்குகிறது. இது தனிநபருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. எந்த நேரத்திலும் ஒரு தனி நபரின் சிறந்த செயல் திறன் அவரது உச்ச செயல்திறன் ஆகும். இது சூழ்நிலையினால் ஏற்படும் கோரிக்கைகள் மற்றும் எதையாவது சாதிப்பதற்கான உள் உந்துதல் காரணமாகும். உச்ச செயல்திறனே, ஒருவரின் செயல்களையும், நடத்தையையும், மாற்றுவதற்கான உந்துதல் ஆகும்.
ஒன்றை சாதிக்க விரும்பினால் மற்றவர்களுடன் போட்டியிடுவதை நிறுத்தி விட்டு நம்மோடே போட்டியிட தொடங்குவதே போட்டியின் உண்மையான அர்த்தம். அதற்கு நமக்கு தேவை உள்ளார்ந்த உந்துதலான முயற்சியே ஆகும்.
நம்மை சுற்றியுள்ள சூழலுக்கு பதிலாக நம்முள்ளே இருந்து நல்ல விஷயங்கள் வரும்போது ஆர்வம், முயற்சி, கடின உழைப்பு ஆகிய சிறந்த உந்துதல்கள் கிடைக்கும்.
ஆர்வம்
ஒரு இலக்கை அடைய அதை நோக்கி செயல்பட குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளும்போது பார்வைக்கு எட்டாத மலையில் ஏறுவதுபோல் தோன்றும். நாம் ஒரு வேலையை தொடங்குவதற்கு முன் எப்போதும் மூன்று கேள்விகளை நமக்குள்ளே கேட்டுகொள்ள வேண்டும்.
1. நான் ஏன் இதை செய்கிறேன்
2. முடிவுகள் என்னவாக இருக்கும்
3. நான் வெற்றி அடைவேனா
இந்த கேள்விகளுக்கு நாமே ஆழ்ந்து சிந்தித்து திருப்திகரமான பதில்களை கண்டால் மட்டுமே மேலே செல்ல முடியும் என்ற சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்ந்தால் ஆர்வந்தால் கண்டிப்பாக நம்முடைய இலக்கை அடைய முடியும்.
முயற்சி
ஒரு செயலை செய்யும்போது எவ்வாறு செய்து முடிப்போம் என்று சற்று பயம் ஏற்படும். அதற்காக சும்மாவே இருந்து விடக்கூடாது. பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நமக்கு நன்றாக தெரியும் வரை நம்மால் முடிந்ததை செய்வோம். பிறகு நமக்கு நன்றாக தெரிந்தால் சிறப்பாக செய்யலாம். என்ற “மாயா ஏஞ்சலோ” கூறிய கூற்றை உண்மையாக்குவோம்.
வெற்றி என்பது தற்செயலானது அல்ல. இது கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றல், படிப்பது, தியாகம், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் என்ன செய்கிறோம், அல்லது செய்ய கற்றுக் கொள்கிறோம் என்பதுதான்.
கடின உழைப்பு
கடின உழைப்பு இன்றி மேலே வந்தவர்கள் யாருமே கிடையாது. சாதிக்க கடின உழைப்புதான் செயல்முறை ஆகும். கடின உழைப்பு மக்களின் குணாதி சயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடின உழைப்பாளி களிடம், கர்வம், ஆணவம் இருக்காது.
நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டால் மக்கள் அல்லது பொருட்களோடு வாழாமல், மகிழ்ச்சியை ஒரு இலக்கோடு இணைத்து வாழ்வோம். இன்று ஒரு வாசகராக இருப்பவர்களை நாளை ஒரு தலைவராகவும் மாற்றிவிடும் திறமை கடின உழைப்புக்கு நிச்சயம் உண்டு.