

உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும், "ரிஸ்க் எடுக்க வேண்டுமே" என்கிற பயம் உங்களை வாட்டி வதைக்கிறதா? அப்படியென்றால், இந்தக் கதை உங்களுக்குத்தான்! முழுமையாகப் படியுங்கள்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த சிறுவன், தன் தாத்தா வீட்டிலிருந்து கிளம்பும்போது, "தாத்தா, நான் வாழ்க்கையில் பெரிய ஆளாக என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கிறான். இதைக் கேட்ட தாத்தா, அவனை அழைத்துச் சென்று, வீட்டின் வாசலில் இரண்டு விதைகளை விதைக்கிறார். "அடுத்த வருடம் நீ மீண்டும் இங்கே வரும்போது, இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பி வைக்கிறார்.
அன்றிலிருந்து அந்த இரண்டு விதைகளுக்கும் ஒரே அளவு தண்ணீர் மற்றும் உரமிட்டுச் சரிசமமாக கவனித்து வருகிறார் தாத்தா.
ஆனால், அந்த இரண்டு விதைகளின் எண்ணங்களும் வெவ்வேறாக இருந்தன.
ஒரு விதை என்ன நினைத்தது என்றால், "ஒருவேளை நான் வளர்ந்து செடியான பிறகு எனக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? பலமான புயல் வந்தால் என் நிலை என்ன?" என்று அதிகமாக யோசித்துக்கொண்டே, மண்ணிலிருந்து வெளியே வராமலேயே இருந்தது.
ஆனால், இன்னொரு விதையோ, "என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்ற துணிச்சலுடன் மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வந்து, செடியாக வளரத் தொடங்கியது. அதைத் தரைக்குள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மற்றொன்றுக்கு அப்போதும் நம்பிக்கை வரவில்லை. "இவன் எப்போது வேண்டுமானாலும் புயலில் பறந்து போகலாம் அல்லது தண்ணீர் இல்லாமல் இறந்து போகலாம்" என்று நினைத்துக்கொண்டே, மண்ணுக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தது.
நாட்கள் நகர்ந்து மாதங்கள் வருடங்களாக மாறின. அந்தப் பேரன் தாத்தா வீட்டிற்கு வந்தபோது, வாசலில் ஒரு கம்பீரமான மரம் வளர்ந்து நிற்பதைக் கண்டான். அப்போது, "தாத்தா, இன்னொரு விதை மட்டும் ஏன் மரமாகவில்லை?" என்று அவன் கேட்டபோது, அந்த முதியவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"நான் இரண்டு விதைகளையும் ஒரே மாதிரிதான் கவனித்துக் கொண்டேன். ஆனால், அந்த ஒரு விதை மட்டும் 'நாளைக்கு என்ன நடக்குமோ?' என்று பயந்தே, தன் வாழ்வைத் தொடங்கத் தவறிவிட்டது. இன்று அது மண்ணோடு மண்ணாக மட்கிப் போய்விட்டது. ஆனால், இந்த மரம் துணிச்சலுடன் சவால்களை எதிர்கொண்டதால் இன்று உயர்ந்து நிற்கிறது!"
நம்முடைய வாழ்க்கையிலும் எல்லோருக்கும் இருப்பது அதே 24 மணிநேரம்தான். ஆனால், பாதி பேர் நாளை நடப்பவை குறித்து (Risk in life) 'அதிகமாக யோசித்து', இன்றைக்கான வாழ்க்கையை வாழத் தவறிவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இருளைக் கண்டு பயப்படாமல், தடைகளை உடைத்துக்கொண்டு அழகான மரமாக வளர்ந்து நிற்கிறார்கள்.