மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள உதவும் பொன்மொழி எது தெரியுமா?
நாம் அனைவரும் ஏதாவது நாம் நினைத்த செயல் நடந்துவிட்டால் சந்தோஷமாக கொண்டாடுவோம். நாம் நினைத்தபடி அது நடக்கவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவோம். அடடா! இப்படி நடந்து விட்டதே என்று சதா உச்சுக் கொட்டிக்கொண்டே இருப்போம். அதேபோல் யாராவது நமக்கு நன்றி பாராட்டாவிட்டால், நாம் ஒரு செயலை செய்து அவர்கள் அதற்கு புன்னகை புரியாவிட்டால், மரியாதை செலுத்தி அவர்கள் மரியாதை செலுத்தாமல் இருந்தால் இப்படி பல்வேறு விஷயத்தில் நம் எதிர்பார்ப்பு இயங்கிக் கொண்டே இருக்கும்.
நம்மைப் போல் பிறரையும் நேசிப்போம். நாம் எப்படி எல்லாம் இருக்கிறோமோ அப்படியே அவர்களும் நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அப்படி இல்லாத பொழுதும் மன வருத்தம் அடைவோம். மனவருத்தம் அடையும் பொழுது மனநிலையே மாறி நாம் நாமாக இல்லாமல் நாம் செயல்பாடுகள் எல்லாம் தலைகீழாக நடக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் இருப்பவர்கள் கூட ஏன் இப்படி மாறிவிட்டாய்? என்ன வந்தது உனக்கு என்று கேட்பார்கள்.
ஆனால் என் உறவினர் ஒருவர் அவர் வாழ்க்கையில் எது நடந்தாலும் எதற்குமே அளவுக்கு மீறி சந்தோஷமும் அடைய மாட்டார் வருத்தமும் படமாட்டார். எப்பொழுதும் ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் யார் எந்த கேள்வி கேட்டாலும் தடுமாறாமல் பதில் கூறுவார் அவரைப் பார்த்து எப்படி இப்படி உங்களால் இருக்க முடிகிறது என்றுதான் கேட்பார்கள். இது எல்லோருக்கும் சாத்தியப்படாத ஒரு மனநிலை.
எந்தச் செயலை எடுத்தாலும் இதுவும் நல்லதுக்கே என்று கூறுவார். இப்படியே எல்லாத்தையும் கடந்து வருவார். நாமும் அப்படியே கடந்து வரவேண்டும் என்று கூறுவார். ஆனால் அந்தக் கடந்துவிடும் என்று வார்த்தையைச் சொல்லும்பொழுது சாதாரணமாகத்தான் தோன்றும். ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி பெறும்போதும் தோல்வியுறும் போதும், நவரசங்களிலும் அதை செயல்படுத்தி பார்க்கும்பொழுதுதான் அதனுடைய வலிமை எவ்வளவு பெரிய ஆயுதம் என்பது புரியும்.
ஒரு குருவிடம் பல சீடர்கள் தியானம் கற்று வந்தனர். சில நாட்கள் கழித்து ஒரு சீடன் குருவிடம் வந்தான். என்னால் தியானம் செய்ய முடியவில்லை. கால்கள் வலிக்கின்றன. தூக்கம் வருகிறது. பசிக்கிறது என்றான். இதுவும் கடந்து போகும் என்றார் குரு. அடுத்த சில நாட்கள் கடந்தன. அதே சீடன் குருவிடம் வந்தான். இப்போது என்னால் நன்றாக தியானம் செய்ய முடிகிறது. மனம் உற்சாகமாக இருக்கிறது என்றான் மகிழ்ச்சியாக. அதற்கு குரு "இதுவும் கடந்து போகும்" என்றார்.
அப்பொழுதுதான் அவன் மனம் சாதாரண நிலைக்கு வந்தது. குரு சொன்னதன் அர்த்தம் நன்றாக விளங்கியது. அதன் பிறகு எந்த செயலை செய்தாலும், எவ்வளவு இன்ப துன்பம் வந்தாலும் எல்லாவற்றையும் கடந்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியதுடன் எல்லாமே கடந்து போவதுதான் வாழ்க்கையின் முழு முழு அர்த்தம் என்பதையும் விளங்கிக்கொண்டான்.
வாழ்க்கையில் எல்லாம் ஒரு நாள் மாறும்!
ஆனால் ஒரே நாளில் எதுவுமே மாறாது..!
"எல்லாம் கடந்து போகும்" என்ற மனநிலையுடன்
வாழ்வில் பயணிப்போம்!