நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அடிக்கடி எதிலாவது வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதை கவனிப்போம். அவர்கள் வெற்றி பெறுவதைத் தான் கவனிப்போமே தவிர, எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை கவனிக்கத் தவறி விடுவோம். அதுதான் வெற்றி அடையாமல் போவதற்கான நாம் செய்யும் சிறு தவறு. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் நாம் கவனித்தால் வெற்றி இலக்கை எப்படி அடைகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
புதிதாக கிரைண்டர் வாங்கி இருந்த சமயத்தில் கிரைண்டரை சுற்ற விட்டோம். நீண்ட நேரம் வரையில் மாவு நன்றாக அரைபடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. இதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு விளங்கவில்லை. எங்கிருந்தோ விளையாடிவிட்டு ஓடி வந்த சிறுவன் கிரைண்டரை ஆஃப் பண்ணிவிட்டு அந்தச் செயினின் முதல் ஹூக்கினை கழட்டி இரண்டாவதில் மாற்றினான். செயின் தளர்த்தியால் நன்றாக அரைபடாமல் இருந்த மாவு, செயின் இறுக்கமானதும் நன்றாக அரைப்பட்டு எளிதில் வேலை முடிந்தது. சிறு சிறு நுணுக்கங்களை தெரிந்து வைத்திருந்தால் எந்த வேலையையும் சிரமமின்றி முடிக்கலாம். எவரிடத்திலும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு சான்று.
பெர்னாட்ஷா உலகம் போற்றும் சிந்தனையாளர் ஆனது எப்படி தெரியுமா? அவரே சொன்னது இது. அப்போதெல்லாம் என்னிடம் இருந்தது ஒரே ஒரு கோட்டும், பேண்டும்தான். அந்த ஒரே உடையை அணிந்து கொண்டு பலர் முன் நடமாட எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் நான் ஒரு மறைவிடமாக நூலகத்தைத் தேர்ந்தெடுத்தேன். அவ்வாறு நூலகத்தில் பல ஆண்டுகளை போக்கியதன் மூலம் நானும் ஒரு சிந்தனையாளன் ஆனேன். இப்படி பல ஆண்டுகளை பயனுள்ள வழியில் செலவழித்ததால் என்றென்றும் போற்றப்படும் நபராக நம்முள் நிலைத்து நிற்கிறார் பெர்னாட்ஷா. தம்மிடம் இல்லாததை மறைப்பதற்கு ஏதுவாக அவர் ஏற்றுக் கொண்ட இடம் எப்பேர்ப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தை அவர் எப்படி கருவியாக பயன்படுத்திக் கொண்டார் என்பதை நாம் பாடமாக, வெற்றிக்கான படியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறக்கும் பொழுதே குழந்தை பார்வையற்று, செவி கேட்கும் தன்மை அற்று பிறந்திருந்தது. அதுவும் பெண் குழந்தை வேறு. குருடாய், செவிடாய் பிறந்த பெண் குழந்தை எப்படி வாழப்போகிறது என்று கண்ணீர் விட்டபடியே குழந்தையை வளர்த்தார் தாய். ஆனால் அப்பெண் குழந்தைதான் ஒரு சரித்திரம் படைத்தது. நுகரும் திறனாலும், தொடும் உணர்வாலும், கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும், பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டு எண்ணற்ற புத்தகங்களை எழுதி முயற்சி செய்தால் என்ன குறை இருந்தாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் ஹெலன் கெல்லர்.
இவைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். தேவையான முயற்சியும், பயிற்சியும், நுண்ணறிவும் கொண்டு காலத்தை சரியானபடி பயன்படுத்தி வந்தால் எதிலும் ஏற்றம் பெறலாம். இதுபோன்ற வெற்றிடத்தை வெற்றியாக்கும் யுத்தியை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குத்தான் இது போன்ற அனுபவங்களை படிப்பதும், கேட்பதும் எழுதுவதும் கூட. காலத்தை தக்கபடி பயன்படுத்தி கடமையாற்றினால் வெற்றித் திருமகள் நம் கைகளில் தவழ்வாள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே.