
பொதுவாக பிறர் மேல் ஆதிக்க மனப்பான்மை செலுத்துவது நல்லது அல்ல. பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைப்பவர்கள் மட்டுமே ஆதிக்க மனப்பான்மையை கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர் தனக்குத்தானே ஆதிக்க மனப்பான்மையை பின்பற்றுவதன் மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம். இது பல்வேறு உளவியல் குணாதிசயங்கள் மற்றும் அணுகுமுறைகளை உள்ளடக்கியது. இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கவனம் மற்றும் தெளிவு;
ஆதிக்க மனப்பான்மை, ஒருவர் தான் எதை அடைய விரும்புகிறார் என்பதில் தெளிவைத் தருகிறது. இந்த மனநிலை கொண்ட நபர்கள் தங்கள் இலக்குகளை தெளிவாக வரையறுப்பதில் மிகவும் திறமைசாலிகள். அப்போதுதான் அவர்கள் தங்கள் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் கவனச் சிதறல்களை குறைக்கவும் முடியும். ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் இலக்குகளை நிர்ணயித்து அதை செயல்படுத்த வேண்டிய தெளிவை இந்த மனப்பான்மை தருகிறது.
தன்னம்பிக்கை;
மனம் சோர்ந்திருக்கும்போது பிறருடைய ஆறுதலும் தேறுதலும் அவசியம். மற்றவரின் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஊக்குவிப்பு ஒருவருக்கு உதவக் கூடும் என்றாலும், தன் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் பிறருடைய ஊக்கம் அவருக்கு ஓரளவிற்கு மட்டுமே உதவி செய்யும். ஆனால் ஆதிக்க மனப்பான்மை உள்ள ஒருவர் தனக்குத்தானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்வது மிகுந்த நன்மையை செய்யும்.
நேர்மறையான சுய பேச்சு;
ஆதிக்க மனப்பான்மை கொண்ட நபர்கள் பெரும்பாலும் நேர்மறையான சுய பேச்சுக்களை பயன்படுத்துகிறார்கள். முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களை எதிர்க்கிறார்கள். இந்த உள் உரையாடல் அவர்கள் தங்கள் மீது உள்ள நம்பிக்கையை வலுப் படுத்துகிறது. தயங்காமல் செயல்பட வலியுறுத்து கிறது. ஆதிக்கம் செலுத்தும் மனநிலை கொண்ட நபர்கள் விஷயங்கள் நடக்கும்வரை காத்திருப்பதற்கு பதிலாக, தனது முன்னேற்றத்திற்கு தேவையான தகவல்கள், விஷயங்கள், நெட்வொர்க் ஆதாரங்களைத்தேடி அடைகிறார்கள்.
புதிய அணுகுமுறை;
ஆதிக்க மனப்பான்மை உள்ள நபர்கள் தங்கள் அணுகுமுறையில் பலன் இல்லாத போது அவர்களது வலிமையான மனநிலை, தொய்வடையச் செய்யாமல் வேறு புதிய அணுகுமுறைகளை நாடச் சொல்கிறது. புதிய உத்திகளை முயற்சி செய்யத் தூண்டுகிறது. மனம் சோர்ந்து போகாமல் மீண்டும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்கிற பாடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் செயல்படத் தொடங்குகிறார்கள்.
நேர்மறையான கண்ணோட்டம் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை;
இந்த இரு விஷயங்களைப் பராமரிப்பதில் ஆதிக்க மனப்பான்மை உள்ள மனிதர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். உணர்ச்சிகளைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய திறன் இருக்கும். தோல்வி அல்லது சவால்கள், போராட்டங்கள், பின்னடைவுகள் நேரும் போது மனம் கலங்குவதில்லை. கவலை விரக்தி மற்றும் பயம் போன்றவற்றை எளிதாகக் கடந்து விடுகிறார்கள். எதையும் ஒரு கை பார்ப்போம் என்கிற அசாத்தியமான துணிச்சலை ஆதிக்க மனப்பான்மை தருகிறது.
இவர்கள் தங்களது செயல்களுக்கும் விளைவுகளுக்கும் தாங்களே பொறுபேற்கிறார்கள். வெளிப்புறக் காரணிகளைக் குறை சொல்வதை விட சூழ்நிலைகளை கட்டுப்படுத்த அவர்கள் தங்களுக்குத் தாங்களே அதிகாரம் அளித்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் எளிதாக அமைகிறது. அப்படி எளிதாக முன்னேற்றம் கிடைக்காமல் போனாலும், ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்து செயல்படும் தன்மையை அவர்களது ஆதிக்க மனப்பான்மை தருகிறது.