
குறைகள் இது யாரிடம்தான் இல்லை. எல்லோரிடமும் தானே இருக்கிறது. ஏதேனும் ஒரு குறை இல்லாத மனிதன் நிச்சயமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக்குறையை நினைத்து என்றைக்கு நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோமோ அன்றைக்கு நாம் ஊக்கத்தை இழக்கிறோம்.
நம் குறை கூட ஒரு நாளில் நிறைவு ஆகலாம். நம்மில் பலருக்குப் பல குறைகள் இருக்கும். அதை நினைத்து வருத்தப்படுவது உண்டு. வருத்தப்படுவதால் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை.
அந்தக் குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம்? என்று எண்ணி அதைச் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள் கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆமாம், குறைகளும் நமக்கு ஒரு வகையில் கொடைகள் தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. ஆனால் நாம்தான் அதைக் கண்டு கொள்வதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் (Texas) மாநில நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கைகளும், கால்களும் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த ஒரு தாய், தன் 5 மாதக்குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில அரசு தீர்மானம் செய்தது.
தன்னால் முடியும் என்று நிரூபிக்க, அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடினார். வழக்கு ஆரம்பமானதும், அந்தத்தாய் நீதிமன்றத்தில் செய்தது, அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
கைகளும், கால்களும் இல்லாத அந்தத்தாய், தன் உதடுகள், நாவு இவற்றின் உதவியுடன், அவருக்கு முன் படுத்திருந்த குழந்தையின் துணிகளைக் கழற்றி, மீண்டும் புதுத்துணியை மாட்டிவிட்டார்.
குழந்தைக்குத் தேவையான உணவை ஊட்டிவிட்டார். இதைக்கண்ட நீதிபதி, தன் இருக்கையைவிட்டு எழுந்து நின்று, அந்தத்தாயை வணங்கினார். பின்னர் அவர், "திறமைகளை உடல் அளவில் பெற்றிருப்பது, உண்மையின் ஒரு சிறுபகுதிதான்; உள்ளத்தில் பெற்றிருக்கும் உறுதியே, உண்மையான திறமை என்பதை, எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி" என்று கூறினார்.
குறைகளும், நிறைகளும் அனைவரிடம் இருக்கத்தான் செய்கிறது. நமது குறைகளைப் பெரிதுபடுத்தினால் அவையே அதிகமாய் நம் மனதில் தங்குகின்றன. எனவே, நமது குறைகளைப் பொருட்படுத்தாமலும், அதை எண்ணிக்கவலைப்படாமலும் துணிந்து செயல்படுவோம்.