
நாம் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறோம். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன? நம்மிடமுள்ள எல்லா நல்ல எண்ணங்களும் நமக்கு மகிழ்ச்சி தந்துவிடுமா?
எதையோ சாதிப்பதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இயல்பாகவே மகிழ்ச்சியாக இருந்தீர்கள். மகிழ்ச்சியாக இருக்க அப்போது எந்தக் காரணமும் தேவைப்படவில்லை. உண்மையில் அதுதான் உங்கள் தன்மை. ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு செயலிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஏனெனில் அதுதான் நம் இயல்பான தன்மை. தத்துவங்கள், கடவுள்கள், சொர்க்கம் மற்றும் நரகம் ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சியைப் பற்றி யாரும் கற்றுத்தரவில்லை.
உங்கள் இயல்பான தன்மைக்குப் புறம்பாக செல்லும்போது நீங்கள் எங்கும் போய்ச் சேரமுடியாது. மகிழ்ச்சியாக இருப்பது வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. மகிழ்ச்சியாக இருப்பது வாழ்வின் அடிப்படையான விஷயம். நீங்கள் மகிழ்ச்சியாகக் கூட இல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு என்ன செய்துவிடப் போகிறீர்கள்?
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, வாழ்க்கையின் மிகச் சிறந்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்க முடியும். ஒரு மனிதனுக்கு முதலில் முக்கியமான பொறுப்பு என்னவென்றால், அவன் மகிழ்ச்சியாக இருப்பதுதான். நீங்கள் வாழ்வில் தொழில், பணம், பதவி, கல்வி, சேவை என்று எதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாலும் அதன் மூலம் மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற உணர்வு இருப்பதால்தான் அப்படிச் செய்கிறீர்கள்.
இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். ஆனால் மகிழ்ச்சியைத்தேடி நாம் செய்யும் செயல்களால் இன்று இந்த பூமியின் இருப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.
இயல்பாகவே நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது. அதாவது மகிழ்ச்சிக்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லாதபோது, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணமும் மாறிவிடும். நீங்கள் வாழ்க்கையை புரிந்து நடந்து கொள்ளும் தன்மை மிகவும் மாறிவிடும். எந்த ஒரு வேலையையும் எந்த எதிர்பார்ப்புடனும் செய்ய மாட்டீர்கள்.
ஒரு செயல் மூலமாக ஏதாவது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ஏதாவது நடந்தாலும், நடக்காவிட்டாலும் அவை உங்களை பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இதுபோன்ற நிலைமையில் உங்கள் செயல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு உயர்ந்துவிடும்.
உங்களுக்குள் உண்மையான மதிப்புமிக்க விஷயம் எதுவும் நிகழவில்லையென்றால். உங்களால் இவ்வுலகிற்கு எந்தவொரு பிரமாதமான விஷயத்தையும் செய்ய முடியாது. உங்களின் ஒவ்வொரு செயலிலும் உங்கள் உள்தன்மைதான் வெளிப்படப்போகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை.
எனவே நீங்கள் உலகின் மீது உண்மையான அக்கறை கொண்டவராக இருந்தால், முதலில் செய்ய வேண்டிய காரியம், உங்களை மகிழ்ச்சியான மனிதராக மாற்றிக் கொள்வதுதான்.