உங்கள் சந்தோஷத்தை மற்றவர்களுக்காக அடமானம் வைக்காதீர்கள்!

happy moments...
Your happinessImage credit - pixabay
Published on

ருமுறை ஒருவருக்குக் கடவுள் நேரில் தரிசனம் தந்து மூன்று வரங்கள் கேள். தருகிறேன் என்றார். ஆனால், உனக்கு அது கிடைத்தாலும், உன் நண்பனுக்கு இரண்டு மடங்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

எனக்கு அரண்மனைபோல் வீடு வேண்டும் என்றார்.  உடனே அவரது வீடு அரண்மனையாகிவிட்டது.  ஜன்னல் வழியே பார்த்தார். அவருடைய நண்பருக்கு இரண்டு அரண்மனைகள் தோன்றியிருந்தன. இவருக்கு சற்றே வலித்தது. 

இரண்டாவதாக உல்லாசமாக இருக்க உலக அழகி வேண்டும் என்றார்.  அவர் வீட்டுக் கட்டிலில் ஓர் அழகி படுத்திருந்தாள். ஆவலை அடக்கமுடியாமல் ஜன்னல்  வழியே பார்க்க, அவருடைய நண்பரின் இருபுறமும் அழகிகள் இருந்தனர். இதைக் கொஞ்சம்கூட இவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

மூன்றாவதாக அவசரம் அவசரமாக, "என் ஒரு கண்ணைப் பிடுங்கிக்கொள்" என்றார்.  வரம்படி அவன் நண்பனுக்கு இரு கண்களிலும் பார்வை போகுமே என்ற எண்ணம்தான். 

தன்னிடம் இருப்பது அடுத்தவரிடம் இல்லாதிருந்தால் மட்டுமே இந்த மாதிரி ஆட்கள் சந்தோஷப்படுவார்கள். இப்படி இருப்பவர்கள் இருப்பதையும் இழந்துவிட்டுத் தவிப்பார்கள். 

நீங்கள் ஒரு கார் வாங்குவீர்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் உங்களைவிட உயர்ந்த கார் வாங்கினால் உங்கள் சந்தோஷம் புஸ்சென்று போய்விடும்.  ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் காரைப் பற்றியே அறிந்திருக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக மனிதன் இந்தப் பூமியின் முகத்தையே மாற்றிவிட்டான். மரம், செடி, கொடிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. நிலம், நீர், காற்று  எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தி, சுத்தமான சுவாசத்திற்குப் போராடும் நிலைமையை உருவாக்கிவிட்டான். எல்லாம் எதற்காக. தனக்கு சந்தோஷம் கிடைக்க வேண்டும்  என்று நினைத்துதானே?  ஆனால், அவர்கள் சந்தோஷத்தைச் சிறிதளவும் ருசிக்காமல், பூமியை மட்டும் அழித்துக் கொண்டிருக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இதையும் படியுங்கள்:
மனதை வென்றவர்களே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்!
happy moments...

பணம் இருந்தால் அதுவும் மற்றவர் பொறாமைப்படும் அளவு இருந்தால் மகிழ்ச்சி என்று அந்த சந்தோஷத்திற்கு யாரும் நிபந்தனை விதிக்கவில்லை. வெளி சூழ்நிலைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் விருப்பப்படி அமையாது. ஆசையின் நோக்கம் புரியாமல், வெளி சூழ்நிலைகளை நூறு விதமாகப் பார்த்தாலும் நிம்மதி கிடைக்காது. எதன் மீது வேண்டுமானாலும் ஆசை வைக்கலாம்.  சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையின் அடிப்படை  என்பதை மறந்துவிட்டு, அதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் கார், பணம், வீடு, நகை போன்றவற்றில் சிக்கினால் சந்தோஷம் கிடைக்காது.

உங்கள் சந்தோஷத்தை மற்றவர்கள் சொற்களுக்கும், வெளி சூழ்நிலைகளுக்கும் அடமானம் வைக்காமல் பயணத்தைத் தொடருங்கள். இந்த உலகையே உங்கள் விருப்பப்படி மாற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com