
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த காலத்திலிருந்து பெண்மணிகளுக்கு சொல்லித்தருவது என்னவென்றால், வீட்டில் என்ன இருக்கிறது அதை வைத்து உணவை சமை. எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவரிடம் பொருள் வாங்கி சுவையைக் கூட்டாதே. அது இழிவான செயல். சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் கடன் வாங்க ஆசைப்பட்டால், பிறகு பெரிய கடனை வாங்க சங்கடப்படாது கையை நீட்டும் நிலைக்கு வந்து விடுவோம். அப்படி ஒரு நிலையை அடையாமல் இருக்க வேண்டுவதற்கு நாம் செய்ய வேண்டிய செயல் எக்காரணம் கொண்டு பிறரிடம் கடன் வாங்கக் கூடாது என்பதுதான்.
பிசிராந்தையார் கூட ஒரு பாடலில் ஈயென இரத்தல் இழிந்தன்று
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று
கொள்ளேன் என்றல் அதினும் உயர்ந்தன்று என்று கூறியிருக்கிறார்.
எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் அவர் உயிர் நண்பருக்கு சாட்சி கையெழுத்துப் போட்டார். அவரின் நண்பரால் அந்த பணத்தை கட்ட முடியாமல் போக, எங்களுக்குத் தெரிந்த கையெழுத்துப் போட்ட நண்பரே முப்பது வருடங்களுக்கு முன்னால் ரூபாய் ஒரு லட்சத்தை கட்டி முடித்தார். இதனால் அவரின் குடும்பமே பெரும் துயருற்றது.
இன்னும் சிலர் மற்றவர்களுக்கு 50,100 என்று கடன் கொடுத்தால் அதை திரும்ப பெறுபவர்கள் தவணை தவணையாக தராமல், எப்படி வாங்கினீர்களோ அப்படியே கொடுங்கள் என்றும் கேட்டு வாங்குவதைப் பார்க்க முடியும்.
இப்படி எல்லாம் கைநீட்டி வாங்க ஆரம்பித்துவிட்டால் பிறகு எல்லாவற்றையும் சரி சமமாக நினைத்து எடுத்ததற்கெல்லாம் கடன் கேட்க ஆரம்பிப்போம். அது இழி செயலாக மாறிவிடும் என்பதால் தான், கடன் வாங்குவதை அறவே தவிர்க்க சொன்னார்கள் பெரியவர்கள்.
திருவள்ளுவரும்
"ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளி வந்தது இல்" என்கிறார்.
சிறு செயலிற்காக ஒருவனிடத்தில் இரப்பதே பெரும் செயலுக்கும் ஒருவரிடம் சென்று இரக்க வழி கூறுகிறது. எனவேதான் சிலர் பிறரிடம் ஓர் அற்ப உதவிகூட வேண்டாதவர்களாக இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து தங்களின் மானத்தைக் காத்தார்கள். தங்களின் குடும்ப மானத்தைக் காத்துக்கொள்ளவும் செய்தார்கள். பசு தாகமாய் இருக்கிறது அதற்கு சிறிது தண்ணீர் வேண்டும் என்று அறம் நோக்கி பிறரிடம் இரந்து கேட்டாலும், அந்த இரத்தலைவிட நாவிற்கு இழிவானது வேறொன்றும் இல்லை என்பதனை திருக்குறளின் மூலம் உணர்த்துகின்றார்.
ஆமாம் ராமன் காட்டிற்குப்போக முனைந்ததும் இலக்குவனும் அவனுடன் காட்டிற்கு போகுமாறு கூறினார்களா? அல்லது ராமன் தான் அவனை தன்னுடன் வருமாறு அழைத்தாரா இல்லையே. குடிப்பெருமையை உயர்த்துவதற்கு இந்த ஒரு செயல் போதாதா?
நம்மை விட மூத்தவராய், அறம் உணர்ந்தவராய், அறிவு முதலியவற்றால் பெரியவராய் உள்ளவர்களுடன் நட்பு கொண்டு உறவாடுவதானது எல்லாவற்றிலும் சிறந்த வல்லமை பெற்றதாகும். அதுவே பெருதற்கரிய பேறாகும். அவர்களே நமக்கு துன்பம் ஏதும் ஏற்படினும் அதனைப் போக்கி, தீயதை நாம் செய்திருந்தால் எடுத்துரைத்து, மேலும் நமக்கு எவ்வித துன்பமும் அணுகாமல் பாதுகாப்பு செய்வர். எனவேதான் 'பெரு மரத்தை அண்டிய பல்லியும் சாகாது' என்று ஒரு பழமொழி உண்டு.
ஆதலால் கடன் படாமை, குடிப்பெருமையை விட்டுக்கொடுக்காமை, பெரியோரைத் துணை கோடல் என்ற இந்த மூன்று செயல்களும் நம் வாழ்க்கையை இனிமையாக்கி சுகம்தரும் என்பதில் உறுதியுடன் இருப்போமாக!