

டாக்டர் கணேஷ் பாரைய்யா என்ற குஜராத்தைச் சேர்ந்த, 3 அடி உயர மருத்துவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இல்லை என்றால் சொல்கிறேன், கேளுங்கள்.
இவர் மிகவும் குள்ளமானவர் மட்டுமல்லாமல், மற்றவர்களைப் போல உடல் உறுப்புகளை வேகமாக இயக்க முடியாதவர். இருந்தும், இவர் 'நீட்' (NEET) தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார். நீட் என்ற அக்னிப் பரீட்சையைக் கடந்து வந்த இவருக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் தர மறுத்துவிட்டனர். இவரைத் தடுத்ததற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? "இவரால் மற்ற மருத்துவர்களைப் போல இயங்க முடியாது" என்பதுதான்.
சிறு வயதிலேயே மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டு உழைத்து, நீட் தேர்வை நீந்திக் கடந்த கணேஷ் சோர்ந்து போகவில்லை; போராடினார். எதுவரை? உச்ச நீதிமன்றம் வரை! நீதிமன்றம் இவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடமளித்தது மட்டுமல்லாமல், இவருக்கு அனுமதி மறுத்த நிர்வாகத்தைக் கண்டிக்கவும் செய்தது.
"இவரால் ஆபரேஷன் தியேட்டரில் நின்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது" என்ற வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "எல்லா மருத்துவர்களுமா அறுவை சிகிச்சை செய்கிறார்கள்?" என்ற கேள்வியையும் எழுப்பியது. போராட்டத்திற்குப் பிறகு, பவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று, 'Sir-T' மருத்துவமனையில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
மருத்துவராக வேண்டும் என்ற தன் கனவை நினைவாக்குவதற்கு அவர் சந்தித்த ஏளனப் பேச்சுகளும், பரிகாசங்களும் சொல்ல முடியாதவை. ஆனால், அவர் மருத்துவம் படிக்கையில் அவரது சக மாணவர்கள் பலர் அவருக்கு ஊக்கமும், செய்முறைப் (Practical) பாடங்களில் உதவியும் செய்தனர் என்பதை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.
நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களே "மருத்துவராக வேண்டும்" என்று கனவு கண்டு, அதை நிஜமாக்க மிகவும் சிரமப்படுவார்கள். அப்படியிருக்க, எவ்வளவு மன உறுதி இருந்தால் கணேஷ் போன்ற உடல் ரீதியான குறைபாடுகள் இருப்பவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பார்கள்?
"மனம் இருந்தால் மார்க்கம் தானாக நம் முன் விரியும்." டாக்டர் கணேஷ் பாரைய்யா துவண்டு போகவில்லை; வேதனைகளை எதிர்த்துத் தடைகளைக் கடந்து பெரிய சாதனை (life achievement) படைத்துள்ளார்!