
ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய்கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி. அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார்.
தாராளமாய் எடுத்துச்செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர்.
அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?… என்று கேட்டார்.
அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில்தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார்.
ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது என்றார்.
தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்...
எல்லாம் மனதில் இருக்கிறது.
துறவி ஒருவர் சாலையில் ஏதோ ஒரு பொருளை தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடுவதை பார்த்த பலர் அவருக்கு உதவி செய்யலாம் என நினைத்தனர். அவர்கள்" "சுவாமி நீங்கள் எதைத் தொலைத்துவிட்டு தேடுகிறீர்கள்" என்றார்கள்.
அதற்கு துறவி "சிறு ஊசி ஒன்றை தொலைத்து விட்டேன். அதைத்தான் தேடுகிறேன்" என்றார். பெரிய தெருவில் தொலைத்துவிட்டு அதை தேடி எடுப்பது சிரமம் எனவே அவர்கள் "ஐயா! இந்த தெருவில் குறிப்பாக எந்த இடத்தில் விழுந்தது என்று கூறினால் தேடி எடுக்க எளிதாக இருக்கும்", என்றார்கள்.
"எனது வீட்டிற்குள் ஊசியை தொலைத்து விட்டேன் " என்றார் துறவி. ஆச்சரியப்பட்ட அவர்கள். "என்ன சுவாமி வீட்டில் ஊசியை தொலைத்து விட்டு தெருவில் தேடினால் எப்படி கிடைக்கும்? அனைத்தும் தெரிந்த தாங்களே இப்படி செய்கிறீர்களே"? என்றனர்.
"வீட்டில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கிறது. எனவேதான் வெளிச்சமான தெருப்பகுதியில் தேடினேன், " என்றார், இப்படி சம்பந்தமில்லாமல் பேசிய துறவியின் பதில் அனைவரையும் சங்கடப்படுத்தியது.
அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட துறவி. " மக்களே நீங்கள் தினமும் செய்யும் இந்த செயலை இன்று ஒரு நாள் செய்தேன். மன அமைதியும், சந்தோஷமும் மனதிற்குள்ளே இருக்கிறது. ஆனால் நீங்கள் மனதை இருட்டாக வைத்துக்கொண்டு வெளியில் கிடைக்கும் பொருட்களால் அது கிடைக்கும் என நம்பித்தானே வெளியில் அதைத் தேடி அலைகிறீர்கள், உங்கள் திறமையையும், நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்," என்றார். துறவியின் இந்த விளக்கத்தை கேட்டு அனைவரும் தலை குனிந்தனர்.