

வாழ்க்கையில் எதுவும் சாத்தியம் இல்லை என்பதை ஒருபோதும் நினைக்காமல், நிராகரிப்புக்களை கண்டு அஞ்சாமல் வாழும் வாழ்க்கையே சிறப்பாக இருக்கும். ஒரு செயலை செய்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும். செய்யும் போது, சாத்தியம் சாதனை வரை கொண்டு செல்லும் ஆற்றல் மனதில் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் எதுவும் நீங்கள் நினைத்தது மாதிரி நடக்காது. எதிர்ப்புகள், நிராகரிப்புகள் போன்றவை இருந்து கொண்டே தான் இருக்கும். எதிர்ப்பதில் உண்மைத் தன்மை இருந்தால், மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் கடைசி வரை உங்கள் பிடியை தளர விடாதீர்கள்.
ஒருபோதும் நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதீர்கள். உங்களை யாராவது தூக்கி எறிந்து நிராகரிக்கிறார்கள் என்றால், கவலைப்படாதீர்கள். இறைவன் உங்களை மேலே தூக்கி விடுகிறான் என்று புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடும் மனமும் குணமும் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எதனையும் துணிவோடு எதிர்க்க முடியும். எதிர்ப்பதால், நாளைக்கு எதாவது நடக்கக் கூடாதது நடந்துவிடுமோ என்று பயத்தை உங்கள் மனதில், வளர்க்காமல் இருங்கள்.
மற்றப் பறவைகள் போல், ஒருபோதும் காக்கை அழகாக இல்லை. ஆனால் முதல் படையல் அதற்கு தான். ஆகவே நீங்கள், தாழ்வுமனப்பான்மை கொண்டு உங்கள் சுயத்தின் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம்.
வாழ்க்கையில் கடந்து போன காலத்தின் கவலையில் இருக்கக் கூடாது, அதேமாதிரி ஒருபோதும் எதிர்காலம் பற்றிய பயம் இருக்கக் கூடாது. பயம் மனதில் பதிந்தால், கோழைத்தனம் உங்களிடம் குடிகொண்டு விடும். எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடுங்கள். அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பிக்கையுடன் இன்றே களமாடி வெற்றிக் காணுங்கள்.
வாழ்க்கையில் தூங்காத இரவுகள் இருக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் ஒருபோதும் உங்களிடம் விடியாத இரவு இருக்கக் கூடாது. முயற்சி செய்யும் உங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு தேவையில்லாத நிகழ்வு நடைபெற்று விடக் கூடாது.
வாழ்க்கையில் உங்கள் உள்ளமும் சிந்தனையும் எப்போதும் செயலோடு இரண்டறக் கலந்து இருக்க வேண்டும். அப்போது தான் செயல்கள் நேர் வழியில் பயணம் செய்யும். உங்களுடைய முயற்சி, பயிற்சியின் தளத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் அதில் இருக்கும் குறை மற்றும் நிறை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
வாழ்க்கையில் உங்கள் உழைப்பு மற்றும் இலக்கு இவ்விரண்டும், உங்கள் மீது உள்ள தன்னம்பிக்கை உத்வேகத்தோடு இரண்டறக் கலந்து இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது, உங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்றத் தெளிவும், உங்கள் செயல்கள் அனைத்தும் வலிமையும் பெறும்.
வாழ்க்கையில் ஆணவம் கொண்டோர் அழிந்தார் என்று தெரிந்து கொண்டு, ஒருபோதும் அப்படி இல்லாமல் இருக்க எப்போதும் எச்சரிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் நீங்கள் செல்லும் வழியெல்லாம் வெற்றி நிச்சயம்.
வாழ்க்கையில் ஆபத்தை தரும் கோபம் தவிர்த்து, பணிவோடு இருக்க பழகுங்கள். பொறாமை கொண்டு வீண் போகாமல், உழைப்பு கொண்டு உயர்ந்து காட்டுங்கள்!