புகழே வாழ்வின் இலட்சியம்!

abraham lingan...
Fame is the ideal of life!Image credit - pixabay
Updated on

"புகழ்தான் மனித வாழ்க்கையை அமைக்கிறது. புகழ்பெற வேண்டுமென்ற ஆர்வம் இல்லாதவன் மனிதனாக வாழவே தகுதியற்றவன்," என்று கூறுகிறார் ஹென்றி போர்டு.

வாழ்க்கையின் அடித்தளமாய், இன்ப வாழ்வின் கருவூலமாய் அமைந்திருக்கும் புகழைப் பெற்றே ஆகவேண்டும். புகழின் மூலம் பெருமையும் அடைய முடியும். புகழும், பெருமையும் நமக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய டானிக் போலாகும். இரண்டும் முன்னேற்றத்திற்குப் பெரும் துணையாக இருப்பவை.

அமெரிக்க நாட்டின்  ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் சாதாரண வழக்கறிஞராக இருந்த காலத்தில், சிக்கலான ஒரு  கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

வெறும் புகழை மட்டும் நாடுவதால் ஏதாவது பயன் உண்டா? என்பதுதான் அக்கேள்வி.

கேள்வி கேட்டது அவருடைய வருங்கால மனைவி மேரி. நீதி மன்றத்தில் ஏராளமான வழக்குகளுக்கு ஆஜரானார் லிங்கன். அவர் வாதித்த வழக்குகளில் பெரும்பாலானவை வெற்றியடையவே செய்தன. ஆனால் சாதரண வழக்கறிஞர்களுக்குக் கிடைப்பதைவிட குறைவான வருமானமே அவருக்குக் கிடைத்து வந்தது.

தன்னுடை எதிர்கால வாழ்க்கையை லிங்கனோடு பிணைத்துக் கொள்வதென்று முடிவு கட்டிவிட்ட மேரி, லிங்கனின் வருமானக் குறைவைப் பற்றி ஆராய்ந்தாள். லிங்கன் எழைகளுக்கு இலவசமாக வாதாடினார்.

கட்சிக்காரர் கொடுத்ததை வாங்கிக் கொள்வாரே தவிர, இவராகத் தொகையைக் கேட்கமாட்டார் . "நீங்கள் எதற்காக வக்கீல் தொழில் செய்கிறீர்கள்?" என்று கேட்டாள் மேரி.

புகழுக்காக அந்த புகழினால் கிடைக்கும் மன அமைதிக்காக!” என்றார் லிங்கன் கம்பீரமாக.

"வெறும் புகழ் மட்டும் மனிதனுடைய வயிற்றை நிரப்பி விடுமா? என்று வினவினாள் மேரி.

லிங்கன், சிரித்துக் கொண்டே, தன் வயிற்றை  அளந்து காட்டி "இந்த ஒரு சாண் வயிறு நிரம்புவதைப் பற்றியா நான் அதிகமாக கவலைப்பட வேண்டும்? எந்த மிருகமும் பறவையும் கவலைப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி மனிதன் ஏன் மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்?" என்றார் 

"மற்ற வழக்கறிஞர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் மட்டும் இதற்குப் புறம்பாக நடப்பதில் என்ன லாபம்?" என்று கேட்டாள்.

"லாபம் சம்பாதிக்க மூளை தேவையில்லையே! ஒரே கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டினால் கூடப் பணம் குவிந்துவிடும். நானும் அப்படி மிரட்ட வேண்டுமா என்று திருப்பி கேட்டதும் மேரியால் பதில் ஒன்றும் கூற முடியவில்லை.

ஆண்டுகள் பல கடந்து லிங்கன் அமெரிக்க நாட்டின் பிரசித்தி பெற்ற ஜனாதிபதியாக மின்னிக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய மனைவி என்ற ஸ்தானத்தில் நின்ற மேரி ஒரு நாள் அவரிடம் இப்படிக் கூறினாள்.

"பணம் சம்பாதித்த வழக்கறிஞர் யாரும் ஜனாதிபதியாக வரவில்லை. புகழ் தேடிய என் கணவர்தான் ஜனாதிபதியாகி விட்டார்!" என்றாள் மேரி.

இதையும் படியுங்கள்:
செயல்பாடுகளே வெற்றியின் விதைகள்!
abraham lingan...

செல்வம் என்பது மோட்டார் என்றால், புகழ் என்பது அதை இயக்கும் பெட்ரோல். பெட்ரோலை அலட்சியப்படுத்தி மோட்டாரைத் தள்ளிக் கொண்டே, தன் பிரயாணத்தைத் தொடங்குபவன் எப்படிப் புத்தியுள்ளவனாக இருக்க முடியும்?

ராக் ஃபெல்லர் சுட்டிக் காட்டுவதுபோல, செய்யும் தொழிலில் பொறுப்பையும் ஒழுங்கையும் வளர்ப்பது புகழ்.

மன அமைதியையும் ஆறுதலையும் அளிக்கக் கூடியது. "போருக்குரிய காயமே புகழின் காயம்" என்கிறது மனோன்மணியம்.

logo
Kalki Online
kalkionline.com