

ஒரு பெரிய இரும்பு தொழிற்சாலையின் அதிபராக சார்லஸ் ஸக்வாஸ் என்பவர் இருந்தார். தன்னுடைய சொந்த கடினமான உழைப்பினால் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். 'நீங்கள் நிறைய சொத்து சம்பாதித்து விட்டீர்கள். மிகப்பெரிய தொழிற்சாலையின் சொந்தக்காரராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்தவர்' என ஒருவர் அவரிடம் குறிப்பிட்டு கேட்டபோது,
"என்னை அதிர்ஷ்டக்காரன் என்று அனைவரும் கூறுவது தப்பு. ஏனென்றால் எனக்கு கிடைத்த வெற்றி கடினமான உழைப்பினால் கிடைத்தது. வெறும் அதிர்ஷ்டம் மட்டும் எனக்கு வெற்றியை கொடுக்கவில்லை," என்று கூறினார்.
"நீங்கள் இன்னும் வளமான எதிர்காலம் வரும் என்று அதற்காக நம்பி பிரார்த்தனை செய்கிறீர்களா?" என்று மீண்டும் அவர் கேட்டபோது,
"தப்பு நண்பனே! நல்ல வளமான எதிர்காலம் வரும் என்று நான் காத்துக் கொண்டிருக்கவில்லை. அந்த வளமான எதிர்காலத்தை அடைய நான் அயராது உழைத்துக் கொண்டு வருகிறேன்," என்று பதில் கூறினார்.
அற்புதமான காரியங்களை செய்து முடித்த 'வீரர்கள்' என்று கருதப்படுபவர்கள், சாதாரண மக்களை விட பெரிய தைரியசாலிகள் அல்ல. ஆனால் அவர்கள் சாதாரண மக்களை விட இன்னும் ஐந்து நிமிடங்கள் தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து வேலை செய்ததனால் அபாயகரமான அற்புதமான காரியங்களை செய்து முடித்திருக்கிறார்கள் என்பது ரால்ஃப் வால்டேர் என்பவரின் கருத்தாக உள்ளது.
சாதாரண மக்களை விட இன்னும் சில நிமிடங்கள் நம்பிக்கையோடு தைரியமாக தொடர்ந்து வேலை செய்தால் மிகப்பெரிய காரியங்களை சாதிக்க முடியும். அவர்களே நல்ல பெயரையும் புகழையும் சம்பாதிக்கிறார்கள். சில நிமிடங்கள் ஒருவன் செய்யும் அதிகமான உழைப்பே மற்றவர்களால் நன்கு மதிக்கும்படியான வாழ்க்கையை கொடுக்கிறது.
யாரையும் குறை கூறாமல் தனது வேலையை கம்பீரத்துடன் தொடர்ந்து அயராது வேலை செய்து வருபவன் விரோதிகளாலும் புகழும் நிலையை அடைவான். குறை கூறும் பழக்கத்தை கொண்டவர்கள் நிறைந்து நிற்கும் அலுவலகங்களில் புயல் காற்று வீசி கொண்டிருப்பது போன்ற சூழல் இருக்கும்.
ஒருவரை ஒருவர் மதித்து விரும்பி வேலை செய்து வரும் நிறுவனத்தில் வண்ண வண்ண மலர்கள் கொண்ட மலர் தோட்டத்தைப் போல வசீகரமாக காட்சி தரும். அங்குள்ள அனைவரும் அவர்களாகவே முன்வந்து மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.
ஊழியர்களுடைய கடமை என்னவென்பதை எல்பர்ட் ஹாப்பர்ட் என்பவர் பின்வருமாறு அழகாக கூறுகிறார். ஒரு அவுன்ஸ் விசுவாசம் ஒரு பவுண்ட் புத்திசாலித்தனத்தை விட மதிப்பு வாய்ந்தது. ஆகவே அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழ்வை இழக்காமல் உழைப்பை நம்பினால் உயர்வு நிச்சயம் உண்டு.