

"சுரேஷ்! Hold your horses! ஆஃபீஸ்ல, சிவா கூட கொஞ்ச நாள் தான் உனக்கு பழக்கம். சிவா நல்லவனாகவே இருக்கட்டும். ஆனாலும், அவன் ரூபாய் பத்து லட்சம் பேங்க்ல கடன் வாங்க, நீ செக்யூரிட்டி கையெழுத்து போட அவசரப் படாதே! பொறுமையா நான் சொல்றதைக் கேளு" சுரேஷின் தந்தை ராமசாமி சொன்னதைக் காதில் வாங்காமல் சென்றான் சுரேஷ்.
சிவாவிற்காக பேங்கில் கையெழுத்துப் போட்டான். பத்து லட்சம் கையில் கிடைத்தவுடன், சுரேஷிடம் சொல்லாமல், சிவா வெளிநாடு பறந்துவிட்டான். மாட்டிக்கொண்ட சுரேஷிற்கு,
தந்தை சொன்ன Hold your horses நினைவிற்கு வந்தது. அவசரக் குடுக்கையாக கையெழுத்துப் போட்டதற்காகத் தன்னையே நொந்து கொண்டான். காலம் கடந்த ஞானோதயம்.
Hold your Horses
அப்படியென்றால்...!
அவசரமாக செயல்பட நினைப்பவர்களைத் தடுத்து நிறுத்தி, பொறுமையாக இருக்கக் ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.
பலருக்கு இப்படி பிறர் கூறுவது பிடிக்காது. இவர் என்ன சொல்வது? நான் ஏன் கேட்கவேண்டும்? என்று எண்ணுவார்கள். யோசிக்காமல் தான் நினைத்தபடி செய்து சங்கடத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடுவார்கள்.
Hold your horses பற்றி சுவையான சிறிய கதை:
ஒரு கிராமத்தில் ராமு என்ற துடிப்பான இளைஞன் இருந்தான். அவனிடம் ஒரு குதிரை வண்டி இருந்தது. அவன் எப்போதும் எதற்கெடுத்தாலும் அவசரப்படுவான்.
ஒரு நாள், பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்விட்டு மாலை நேரத்தில் குறுக்கு வழியாக அவன் தன் குதிரை வண்டியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு வயதான பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால், சீக்கிரம் மழை வரும் என்று ராமு குதிரையை வேகமாக ஓட்டினான்.
பெரியவரைக் கடக்கும்போது ராமு, "பெரியவரே, மழை வர்ற மாதிரி இருக்கு. நான் சீக்கிரம் ஊருக்குப் போகணும். இந்த வேகத்துல போனா இன்னும் எவ்வளவு நேரத்துல ஊர் போய்ச் சேரலாம்?" என்று அவசரமாகக் கேட்டான்.
பெரியவர் குதிரையின் வேகத்தையும், சாலையின் மோசமான நிலையையும் பார்த்தார். அமைதியாக, "தம்பி, உன் குதிரைகளை கொஞ்சம் அடக்கு. மெதுவாகப் போனால், அரை மணி நேரத்துல ஊர் போய்ச் சேரலாம். இதே வேகத்துல அவசரமாப் போனா ஊர் போய்ச்சேர நடுராத்திரி ஆகிடும்" என்றார்.
ராமுவுக்கு பெரியவர் சொன்னது முட்டாள்தனமாகத் தெரிந்தது. "வேகமாப் போனா எப்படி நேரம் அதிகமாகும்?" என்று நக்கல் அடித்துவிட்டு, குதிரைகளை இன்னும் வேகமாக விரட்டினான்.
வேகமாக சென்றதில் சாலையில் இருந்த பள்ளம் தெரியவில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அந்த பள்ளத்தில், வண்டியின் முன் சக்கரம் பலமாக இறங்கியது. வேகத்தின் காரணமாக அச்சு முறிந்து, வண்டி அப்படியே நின்றதோடு, குதிரைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
காட்டிற்கு நடுவே வண்டியைப் பழுது பார்க்க ராமுவுக்கு பல மணி நேரம் ஆனது. இடையிடையே சோர்வடைந்து உட்கார்ந்தான். கடைசியில் அவன் ஊர் போய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.
அப்போதுதான் ராமுவிற்கு பெரியவர் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. அவசரப்பட்டால் காரியம் கெடும் என்பதை அவன் உணர்ந்தான்.
பேச்சாக இருந்தாலும் சரி! செயலாக இருந்தாலும் சரி!
அவசரக்குடுக்கையாக செயல்படுவதற்கு முன்பு, Hold your horses.
அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது என்பதையும், 'Hold Your Horses' என்ற ஆங்கிலப் பழமொழியின் ஆழமான அர்த்தத்தையும் சுவையான கதைகள் மூலம் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.