

இன்றைய நாட்களில் வேலைக்கு செல்லும் பெண்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது Housewife எனப்படும் இல்லத்தரசிகள் தான்.
அட ஆமாங்க, அவங்க வீட்ல சும்மா இருக்காங்க என்று ஈஸியா சொல்லி விடுகிறோம். அவங்களை கேட்டால்தான் தெரியும், உட்காரக்கூட நேரம் இல்லை என்று அலுத்துக் கொள்வார்கள். அவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.
இல்லத்தரசிகளே, நீங்கள் உங்கள் உடல்நலம் மற்றும் மனநலம் கருதி அன்றாட வாழ்வில் சிறிது நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். உங்களுக்குள் உள்ள தனித்திறமையை வெளிக்கொண்டு வாருங்கள் (Hobbies for housewives).
காலை நேர பரபரப்பு முடிந்து, மற்ற வேலைகளை திட்டமிடும் போது, அன்றைய நாளில் உங்களுடைய நேரம் எது என்று நீங்களே திட்டமிடுங்கள்.
கலைத் திறன் இருக்குமானால், கை வேலைகளில் உங்களுக்கு பிடித்த ஒன்றை உருவாக்கி, அதை உங்கள் வரவேற்பறையில் வைத்துப் பார்க்கும் போது, ஒரு பெருமை கலந்த சந்தோசம் உங்கள் மனதை ஆசுவாசப்படுத்தும்.
தோட்ட வேலை செய்ய ஆர்வம் கொண்டவராயின், சிறு தொட்டிகளில் செடிகளை வளர்த்து பராமரியுங்கள். அவற்றுடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். அந்த செடிகளில் அரும்பும் ஒவ்வொரு துளிரும் உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.
உங்கள் வீட்டு ரோஜா செடியில் பூக்கும் அந்த ஒற்றை ரோஜாவைப் பார்த்து, நீங்கள் உதிர்க்கும் புன்னகைக்கு ஈடு இணை இல்லை என்று சொல்வார்கள்.
நீங்கள் ஒரு கவிதாயினி என்றால், எடுங்கள் ஒரு டைரி அல்லது நோட்டை. யாரைப் பற்றி வேண்டுமானலும், எதைப் பற்றி வேண்டுமானலும், உங்கள் அகத்தில் உள்ளதை கவிதையாக்குங்கள். அதனை பரிசுப் பொருளாக கொடுங்கள் உங்கள் அன்புச் சொந்தங்களுக்கு. அப்போது அவர்கள் முகம் ஆச்சரியத்தால் விரியும் போது, நீங்கள் உற்சாகமடைவீர்கள்.
கதை, ஓவியம், சிற்பம் எது பிடிக்குமோ அதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாதம் ஒருமுறையாவது உங்களின் தோழிகளைச் சந்தித்து மனம் திறந்து பேசி மகிழுங்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் நட்பு வட்டத்துடன் சிறு சுற்றுலா சென்று வாருங்கள்.
குடும்பம் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதைக் கட்டிக்காக்கும் நீங்கள், உங்கள் உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்துக் கொள்வது, அதை விட முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.