புத்திசாலிகளை மக்கள் என்றுமே மதிப்பார்கள். ஏனெனில் புத்திசாலிகள் வெற்றி பெறுகிறார்கள், சிக்கல்களை தீர்க்கிறார்கள் மற்றும் பிறரை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால், ஒருவர் உண்மையில் புத்திசாலி என்பதை எப்படி அறிவது? பார்த்த உடனேயே ஒருவரை புத்திசாலி என கண்டுபிடிக்க முடியுமா? ஒருவர் புத்திசாலி என்பதற்கான அளவுகோல் என்ன? வாருங்கள் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள்:
IQ (Intelligence Quotient): IQ சோதனைகள் பொதுவாக புத்திசாலித்தனத்தை அளவிட பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இந்த சோதனைகள் ஒருவரின் பகுப்பாய்வு திறன், சிக்கலை தீர்க்கும் திறன் போன்ற திறன்களை மதிப்பீடு செய்து கண்டுபிடிக்கப்படுகின்றன.
EQ (Emotional Quotient): EQ என்பது ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறனை குறிக்கிறது. அதிக EQ கொண்டவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் பக்குவம் கொண்டிருப்பார்கள்.
படைப்பாற்றல்: புதிய யோசனை உருவாக்குவது மற்றும் புதிய வழிகளில் சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை படைப்பாற்றல் எனப்படும். கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றவர்கள் பொதுவாக உயர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.
சமூக அறிவு: மற்றவர்களுடன் எவ்வாறு பழகுவது, சமூக சூழ்நிலைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை அறிவது சமூக அறிவு எனப்படும். சமூக அறிவு கொண்டவர்களால் மற்றவர்களுடன் நல்லுறவைப் பேண முடியும். மேலும் இந்த சமூகத்திடம் தங்களை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
புத்திசாலிகளின் சில பொதுவான அறிகுறிகள்:
புத்திசாலிகளை அவர்களது கண்களை பார்த்தாலே தெரிந்துவிடும். பார்வை மூலமாக தொடர்பு கொள்வார்கள். கண்களில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.
எப்போதும் சிரித்த முகத்துடன் பிறருடன் பழகுவார்கள். அத்துடன் சிறந்த உடல் மொழி, நேர்த்தியான தோற்றம், நிமிர்ந்து நிற்கும் உடல்வாகு போன்றவை இவர்களிடம் இருக்கும்.
பேச்சில் எப்போதும் ஒரு தெளிவு இருக்கும். சரியான விஷயங்கள் பேசுவது, கேள்விகளைக் கேட்பது போன்ற அனைத்திலுமே சிறப்பாக இருப்பார்கள்.
புத்திசாலிகளுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். குறிப்பாக அவர்களது திறமையின் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகமாக காட்டுவார்கள். குறிப்பாக எல்லா துறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் இருக்கும்.
புத்திசாலிகளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர்கள் இயற்கையிலேயே பிறரை கவரும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், பிறரை மகிழ்வித்து தன் பக்கம் ஈர்ப்பார்கள்.
ஆனால், இதுபோன்ற அறிகுறிகள் எல்லா புத்திசாலிகளுக்கும் பொருந்தாது. சிலர் தங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படையாக காட்டாமல் மறைத்து வைத்திருக்கலாம். புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவதற்கு பல வழிகள் உள்ளன. மேலும் ஒருவரைப் பற்றிய முழுமையான பார்வையைப் பெற பல்வேறு விதமான காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் ஒருவரைப் பற்றி அறிய விரும்பினால் ,அவர்களிடம் நேரம் செலவிட்டு பேசுவது மிகவும் முக்கியம். இதன் மூலமாக ஓரளவுக்கு அவர்களுடைய உண்மையான தன்மையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.