

குடும்ப உறவுகளில் பெரும்பாலும் இந்த நடுத்தர வயது நபர்களுக்கும் (Middle‑aged) அவர்களின் வயதான பெற்றோர் அல்லது உறவினர்களுக்கும் (Older relatives) இடையே அடிக்கடி சில மனஸ்தாபங்களை எதிர்கொள்கின்றனர் (Generation Gap in family). இதற்குப் பெரும்பாலும் அந்தந்த வயதில் அவர்களால் உணரப்படும் முன்னுரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைகளில் (Life stages) உள்ள வேறுபாடுகள்தான் காரணமாகும். அதனால் உண்டாகும் சண்டை - சச்சரவுகளைத் தவிர்ப்பதற்கு இரு தரப்பினரிடமிருந்தும் ஒரு நிலையான முயற்சி தேவைப்படுகிறது.
வயதானவர்களின் நிலையைக் கொஞ்சம் சிந்தியுங்களேன்:
நடுத்தர வயதில் இருப்பவர்கள் முதலில், உங்கள் அருகில் இருக்கும் வயதான நபர்கள் எப்போதும் கண்ணியத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காரணம், ஒரு குறிப்பிட்ட வயது பெரும்பாலும் ஒருவரின் உடலுக்கு சில வரம்புகளையும் (Limitations), ஆழ்ந்த உணர்ச்சி உணர்திறனையும் (Emotional sensitivity) கொண்டு வருகிறது. எனவே, அதைச் சமாளிக்க நடுத்தர வயதில் இருக்கும் உங்களுக்குத் தேவையானது பொறுமை (Patience).
வயது மூத்தவர்களின் கருத்துகளை நிராகரிக்காமல் கேட்பது, குடும்ப முடிவுகளில் அவர்களை ஈடுபடுத்துவது மற்றும் அவர்களின் பங்களிப்புகளை ஒப்புக்கொள்வது; அவர்களுக்குள் உண்டாகும் புறக்கணிக்க படுகிறோமோ (Neglect) என்ற உணர்வுகளைத் தடுக்கலாம். அவர்கள் கடந்து வந்த காலத்தை நினைவில்கொண்டு, இப்போதுள்ள நவீன பழக்கவழக்கங்களையோ அல்லது வேகமான வழக்கங்களையோ (Fast‑paced routines) திணிப்பதை நடுத்தர வயதிலிருக்கும் நீங்கள் தவிர்க்க வேண்டும். அதன்பின் நீங்கள் அவர்களுடன் மேற்கொள்ளும் மென்மையான பண்பு, நிலையான தொடர்பு மற்றும் மரபுகளுக்கான மரியாதை ஆகியவைதான் உங்கள் இருவருக்குள் உண்டாகும் இடைவெளிகளைக் குறைக்க உதவுகின்றன.
வயதில் மூத்தவர்கள் நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்:
உங்களைப் பார்த்துக்கொள்ளும் அல்லது உங்களுடன் இருக்கும் நடுத்தர வயதுடையவர்கள் பல பொறுப்புகளைச் சுமக்கிறார்கள். அது தொழில், குழந்தைகள், நிதி மற்றும் வீட்டு மேலாண்மை என்று நீங்கள் கடந்து வந்த பாதையைத் தாண்டி, இன்னும் பல புதிய நவீன விஷயங்களையும் சேர்த்து கையாளுகிறார்கள் என்பதை வயதான நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பழைய பழக்கவழக்கங்களை இன்னமும் பின்பற்ற வேண்டும் அல்லது உங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் (Constant attention) என்பதை எப்போதும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களுக்குத் தேவையான மரியாதையை அவர்கள் சேர்த்து வைத்து உங்களிடம் தரலாம். கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையோடு (Flexibility) இருந்து பாருங்களேன்! பின் உங்கள் இளைய தலைமுறையினர் சந்திக்கும் சவால்களை அமைதியாக கவனியுங்கள், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப உங்கள் தனிப்பட்ட வழக்கங்களைக் கொஞ்சம் விருப்பத்தோடு மாற்றிக்கொள்ள முயற்சி செய்து பாருங்களேன்! இது உங்கள் வாழ்நாட்களை விருப்பத்தோடு நகர்த்திக்கொண்டு போகும்.
பின் பெரியவர்களாகிய நீங்கள் அதிகப்படியான விமர்சனங்களை அல்லது ஒப்பீடுகளைத் தவிர்த்து விடுங்கள்; உங்கள் சங்கதியினரே முட்டிமோதிகொண்டு வாழ்க்கையில் மேலே வந்துவிடுவார்கள். ஏனெனில் அதற்கு முன் நீங்கள் குறுக்கிட்டால் சில நேரங்களில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். அதற்குப் பதிலாக அவர்களால் உதவி கேட்கப்படும்போது மட்டுமே நீங்கள் வழிகாட்டுதலை வழங்குவதும், அப்போது உங்கள் எதிர்கால தலைமுறையினரின் முடிவுகளில் நம்பிக்கையைக் காட்டுவதும்; உங்கள் இருவருக்குள் நல்லிணக்கத்தை வளர்க்கின்றன.
இறுதியில் ஒவ்வொரு தரப்பினரும் மற்றவரின் கண்ணோட்டத்தை மதிக்கும்போது, பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் சமநிலைப்படுத்தும்போது, பரஸ்பர மரியாதையை வளர்க்கும்போது சண்டைகள் குறைகின்றன.
இப்படி ஒரு குடும்பம் அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை நீக்கி; உண்டாகும் புரிதல், அக்கறையுடன் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்களிடையே அன்பு மிகுந்து மனஉளைச்சல்கள் குறைந்து மனநிம்மதியுடனும் செல்வ செழிப்புடனும் விளங்குவார்கள் என்பது நிச்சயம்.