

ஒரு ரயில் பயணம் போன்றது நமது வாழ்க்கை. எதிர்பாராத தாமதங்கள் வழியில் எதிர்ப்படும் நிறுத்தங்கள்.
திடீரென மாறும் பாதைகள், தவிர்க்க முடியாமல் நேரிடும் விபத்துகள் என எல்லாமே இப்பயணத்தில் இருக்கும்.
இந்தப் பயணம், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம், குழப்பம், தவிப்பு, எதிர்பார்ப்பு, நலம் விசாரிப்புகள், விடை பெறுதல் என கலந்து இருக்கும்.
பயணத்தை நாம் இனிதாக அமைத்துக் கொண்டால் சக பயணிகளோடு அன்பான உறவு அமையும்.
அவர்களுக்கு நாம் உதவினால் அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். அவர்களும் நம் மீது பாசம் பொழிவார்கள்.
இந்த பயணத்தில் விடைதெரியாத புதிரே எந்த காலத்தில் எந்த இடத்தில் நாம் இறங்கப் போயிடும் என்பதுதான். எனவே, இருக்கும் காலத்தில் எல்லோருடனும் அனுசரித்து அடுத்தவர்களின் தவறுகளை மறந்து துரோகங்களை மன்னித்து சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ்வோம். எனில், நமக்கான நிறுத்தம் வந்து நான் இறங்கி ஓடும்போது நம்முடன் பயணித்த சக உறவுகளுக்கு இனிமையான நினைவுகள் மட்டுமே விட்டுச் செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் பயணம் முழுக்க நம்மை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இதற்கு உதாரணம் இக்கதை:
ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார் ஒரு வணிகர். அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களுக்கு தினம் சென்று வியாபாரம் செய்விது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வார். இதனால் அவர் எந்த கிழமையில் தங்கள் ஊருக்கு வியாபாரத்துக்கு வருவார் என்பது எல்லா ஊர் மக்களுக்கும் தெரிந்திருந்தது. ஒரு நாள் வியாபாரத்துக்கு செல்லும்போது விபத்தில் காயமடைந்து அவரால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
வேறு வழி இன்றி, அவர் ஒரு குதிரை வண்டி வாங்கி அதில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்தார்.
இந்த பயணத்தில் ஒரு ஊரில் இன்றைக்கு வணிகர் வருவார் என மக்கள் காத்திருந்தால் குறிப்பிட்ட நாளில் இந்த ஊருக்கு அவர் போவதில்லை. வழக்கத்திற்கு மாறாக, அவர் இப்படி செய்வதைப் பார்த்து ஒரு ஊரில் உள்ள மக்கள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
"என்னப்பா.. ஒரு நாள் கிழக்கு பக்கம் வர்றே? ஒரு நாள் மேற்கால வர்றே? ஒரு நாள் உடனே திரும்புற? ஒரு நாள் ரொம்ப நேரமாய் காணல? மறுநாள் வேகமா போற? ஒரு நாள் மெதுவா போற?ஒண்ணும் புரியலையே? உனக்கு என்ன ஆச்சு?" என்று கேட்டனர்.
அவர் நிதானமாக அவர்களைப் பார்த்து சிரித்தபடி, "என் உடம்பும் முன்னே மாதிரி இல்லைங்க, என்னால தனியா எங்கேயும் போக முடியாது. இந்தக் குதிரையோட உதவி தேவைப்படுது. ஆனா, இந்தக் குதிரை நான் இழுத்த இழுப்புக்கு வரலை. அதுக்கு எப்படி தோணுதோ? அந்த திசையில் போகுது. அதுக்காக நான் சும்மா இருந்துவிட முடியுமா? நமக்கு வேலை ஆகணும். இந்த குதிரை கூட மல்லுக்கட்டவும் முடியாது. அதுக்கு சொன்னாலும் புரியாது .ஏன்னா அதுக்கு ஆறறிவு கிடையாது. அதனால் நான் கொஞ்சம் மாறிவிட்டேன். அது கிழக்கே போனா, அங்கு நான் செய்ய வேண்டிய வியாபாரத்தை முடிச்சுடறேன். அதுக்கேத்த மாதிரி என் வேலையை முடிக்க பழகிட்டேன். இப்ப குதிரைக்கும் பிரச்னை இல்லை. எனக்கும் பிரச்னை இல்லை. வாழ்க்கை நிம்மதியாக போகிறது" என்றார் அந்த வணிகர்.
வாழ்க்கையில், அலுவலகத்தில், உறவு வட்டத்தில், நட்புகள் மத்தியில் இப்படி முரண்டு பிடிக்கும் நிறைய குதிரைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அதற்காக எல்லா குதிரைளுடன் அன்றாடம் நாம் மல்லு கட்ட முடியாது. அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது. புரிய வைப்பதும் கஷ்டம்.
அதனால் நாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் நம் வேலையும் நடக்கும். நம் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்.
எனவே, பேசி தீருங்கள்! பேசியே வளர்க்காதீர்கள்! உரியவர்களிடம் சொல்லுங்கள்!
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்! யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து, வாழுங்கள்!
வாழ்க்கைப் பயணம் குறுகியது. ஆனால் அழகானது !