ஒருவர் வாழ்வில் சாதிக்க வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினால் முதலில் அவருடைய மனதில் தான் சாதிப்போம் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். அவருடைய புறச் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் தன்னைத்தானே மோட்டிவேட் செய்து கொள்வது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே அவரால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கால நிர்ணயம்-
உங்களுடைய இலட்சியத்தை அடைய எவ்வளவு நாட்களாகும் அல்லது எத்தனை மாதங்கள் ஆகும் என்று ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயம் செய்யுங்கள். ‘’இந்த குறிப்பிட்ட தேதிக்குள் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’’ என்கிற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகப்பெரும் உத்வேகத்தைத் தந்து செயல்பட வைக்கும்.
2. செயல்படுவதை ஒரு பழக்கம் ஆக்கிக் கொள்ளுங்கள்;
தினமும் எழுந்து பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது போல உங்கள் லட்சியத்தை நோக்கிய செயல்களும் உங்களுடைய அன்றாட செயல்களில் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டு செய்யுங்கள்.
3. இடையில் ஒரு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்;
ஒரு மாணவராக இருந்தால் நான்கு சேப்டர் படித்து முடித்தால் பத்து நிமிடம் நான் வீடியோ பார்ப்பேன், ஒரு எழுத்தாளராக இருந்தால் 50 பக்கங்கள் எழுதி முடித்த பின்பு ஒரு 15 நிமிடம் நான் வேறு புத்தகம் படிப்பேன்’’ என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
4. தடைகளை எதிர்பாருங்கள்;
நீங்கள் செய்யும் வேலைகளில் அவ்வப்போது தடை வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நடை பயிற்சி செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் அன்று மழை வருகிறது. உங்களது காலில் அடிபட்டுவிட்டது. உடம்பு சரியில்லை அப்படி இருக்கும்போது உங்களால் வெளியில் செல்ல முடியாது. அப்போது வீட்டிற்குள்ளேயே சிறிதளவில் நடைப்பயிற்சி செய்யலாம். தடைகளை எண்ணி மனம் தளர வேண்டாம்.
5. சிறிய செயல்களில் தொடங்குங்கள்
உங்களுடைய லட்சியம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அதை செய்யுங்கள். அந்த சின்ன சின்ன வேலைகளை முடிக்கும் போது உங்களுக்கு ஒரு திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். அதை அனுபவியுங்கள்.
6. உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள்
உங்களின் சின்ன சின்ன வெற்றிகளுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளலாம். ஒரு சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். பிடித்த உணவை சாப்பிடலாம். நண்பர்களுடன் வெளியே சென்று வரலாம். பிடித்த விளையாட்டை விளையாடலாம்.
7. நேர்மறையாளர்களுடன் தொடர்பில் இருங்கள்; உங்களுடைய லட்சியத்துக்கு உதவக்கூடிய, ஊக்கமளிக்கக்கூடிய நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்களுடன் உங்கள் செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
8. நன்றி உணர்வுடன் இருங்கள்;
தினமும் படுக்கையை விட்டு எழுந்ததும் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ள அத்தனை நல்ல விஷயங்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நல்ல கொள்கையை வைத்திருப்பதற்காக உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிக் கொள்ளுங்கள்.
9. இப்போதே செயல்பட தொடங்குங்கள்;
அதிகம் யோசிக்காமல் விளைவுகளைப் பற்றி சிந்தனை செய்யாமல் உங்களுடைய இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் இப்போதே முதல் அடி எடுத்து வையுங்கள்.