

நம்மோடு விதண்டாவாதம் செய்யும் ஒரு நபரை எப்படி வெல்வது?தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தொடர்ந்து விவாதம் செய்பவருடன் மல்லுக் கட்டி நிற்பதா (how to win an argument calmly)?
இப்படிப்பட்ட நபர்களை எதிர் கொள்ள ஒரு வழி இருக்கிறது. முதலில் அவர் கூறியதை மொத்தமாக சுருக்கமாகத் திருப்பிச் சொல்ல வேண்டும். அதில் உள்ள நல்ல அம்சங்களையும் அவற்றில் நீங்கள் ஒத்துப் போவதையும் முதலில் கூற வேண்டும்.
இதனால் எதிராளி உங்களுடன் ஒரு பெரிய யுத்தம் செய்ய இருப்பதைச் சுலபமாகத் தடுத்து விடலாம். அவர் கூறியதில் ஒத்துப் போகும் அம்சங்களை விளக்கும் போதே அவரை பாதி வென்றது போலத்தான்!
நாம் திறந்த மனதுடன் இருக்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்ட இது ஒரு நல்ல வழி!
வழக்கமாகவே இப்படி விதண்டாவாதம் (Argument) செய்பவரிடம் சற்று நிதானமாக பேசுவது நல்லது. இந்த உத்தியைக் கடைப்பிடித்தவருள் முதன்மையானவர் அமெரிக்காவில் 16வது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் தான்.
கோர்ட் அறைக்குள் செல்பவர்கள் திகைத்துப் போவார்களாம், லிங்கன் அவரது எதிராளிக்காக வாதிடுகிறாரா அல்லது தன் தரப்புக்காக வாதிடுகிறாரா என்று!
முதலில் எதிர்தரப்பு சொன்ன அனைத்தையும் சுருக்கமாக லிங்கன் சொல்லும் போதே நீதிபதியும், ஜூரிகளும் அவர் ஒருதலைப்பட்சமாக நடப்பவர் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வார்கள்.
பின்னர் தனது தரப்பு வாதத்தை அவர் விரித்துரைக்கும் போது அவரைப் பற்றிய நன்மதிப்பு மேலோங்கி நிற்க அவரது வாதத்தை முழுமனதுடன் அனைவரும் கேட்பார்கள்.
அதில் தனது தரப்பில் உள்ள நியாயத்தையும் நேர்மையையும் அவர் காரண காரியத்துடன் விளக்குவார். அதனால் அவர் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தார்.
இந்த உத்தியைப் பலரும் பின்னால் கையாள ஆரம்பித்து வெற்றி கண்டனர்.
விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம் வரும் போது முதலாவதாக நீங்கள் ஏன் உங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்.
“உங்களுடைய பேச்சைக் கேட்கும் போது நான் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லி எதிராளியை வியக்க வைக்கலாம்.
எதிராளியை நிச்சயம் சம்மதிக்க வைக்கப் போவதில்லை என்றாலும் “உங்கள் பேச்சை ரசிக்கிறேன்” என்று சொல்லி எதிர்த்தரப்பை ஒரு நிதானத்தில் வைக்க வேண்டும்.
கங்காருக்கள் இரண்டும் சண்டை போடும் போது எப்படி அவை சண்டை போடும் என்பதை உளவியலாளர் ஜன் ஹாரெல் (Jan Harrell) இப்படிக் கூறுகிறார்: “அவை இரண்டும் வெறி பிடித்தது போலத் தலையைப் பின்னுக்குத் தள்ளும். தன் கைகளை முன்னே நீட்டும். இரண்டு பேர் வாதிடுவதை சில சமயம் கேட்க முடியாது. கங்காருக்களின் சண்டை போலப் பார்க்கத் தான் வேண்டும்.”
விவாதிப்பதில் உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்துவதோ அல்லது சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்வதோ கூடாது.
சுற்றுப்புறச் சூழ்நிலையை முதலில் கவனிக்க வேண்டும். யார் யார் இருக்கிறார்கள், அவர்கள் இந்த வாதப் போர் மிகவும் மோசமான நிலைக்குச் செல்வதாக உணர்கிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
சில சமயங்களில் பேசும் விஷயத்தை மாற்ற முடியுமா என்று பார்த்தால் விவாதம் ஒரு முடிவுக்கு வரும்.
இன்னொரு உத்தி எதிரிலிருப்பவரின் பாடி லாங்குவேஜை, உடல் பேசும் மொழியை, அப்படியே கடைப்பிடிக்கலாம். இது விவாத நாடகத்தை வேறு பக்கம் திருப்பி விடும். எதிரில் விவாதம் செய்பவரின் மனதில் பாஸிடிவாக ஒரு சின்ன விதையை விதைத்தால் கூட அது உங்களுக்கு வெற்றி தான்.
உண்மையில் சிரித்துக் கொண்டே விவாதத்தில் ஜெயிப்பது ஒரு கலைதான்!