
ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கும்போது எழும் இயல்பான பயம் அதிகமானால் அதுவே வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெற்றியை அடையும் ஒருவரின் திறனை கணிசமாக பாதிக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பயத்தின் தாக்கம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? அதிகரித்த பதட்டம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்; இது செயல்திறன் மற்றும் முடிவெடுப்பதைத் தடுக்கலாம்.
அதீத பயம் சந்தேகங்களையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கலாம்; இது ஆபத்துக்களை சந்திப்பதை அல்லது துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதை சவாலாக மாற்றும். குறிப்பாக அதிகப்படியான பயம் உடல் நலத்தை பாதித்து பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்று அறிவீர்களா?
பயத்தை போக்கும் வழிகளை கண்டறிந்து அதில் கவனம் செலுத்துவதில் இருக்கிறது முன்னேற்றம்.
மைதானத்தில் விழுந்து அடிபடும் நிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் பயத்தை வென்று தங்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த உடலளவில் உடற்பயிற்சிகளுடன் மனதளவிலும் தயாரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
தொழில்முனைவோர் மற்றும் தலைவர்கள் பயத்தை ஒதுக்கி, வெற்றியை அடைய தகவல்கள் அறிந்து தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை வெல்வது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.
பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை வெல்வதில் உறுதியாக இருப்பதே வெற்றிக்கு அடிப்படை.
நேர்மறையான உறுதிமொழிகளால் தன்னைத்தானே ஊக்குவிப்பது பயத்தை விடுத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ஒரு விஷயத்தை எடுத்ததும் அதில் தெளிவான பயிற்சி மற்றும் முழுமையான முன் தயாரிப்பு பயத்தைக் குறைத்து தன்னம்பிக்கையை ஊட்டும்.
அந்த மேடை பேச்சுக்கு அந்த பள்ளியின் இரண்டு மாணவர்களை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தனர். காரணம் இருவருமே நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர்கள். இருவருக்குமே அது முதல் மேடை என்பதால் பயம் அவர்களை தாக்கியது. தங்கள் பயம் குறித்த ஆசிரியர்களிடம் அவர்கள் சொன்ன போது அவர்கள் சில வழிமுறைகளை சொன்னார்கள்.
கண்ணாடியில் தினமும் பேசிப் பாருங்கள். நீங்கள் உங்கள் எக்ஸ்ட்ரா திறமை மூலம் மேடையில் பேசப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் நேர்மறை எண்ணத்தை ஊக்குவித்து உங்கள் பயத்தை போக்கும் என்று சொன்னார்கள்.
இரண்டு மாணவர்களில் ஒரு மாணவன் அவர்கள் கூறியபடி தினம் பயிற்சி மேற்கொண்டு வந்தான். கண்ணாடி முன் நின்று எதிரில் மற்றவர்கள் இருப்பதைப் போல் கற்பனை செய்து கொண்டு அவன் பேசத் தொடங்கினான். அவனின் பயம் எங்கே போனது என்று தெரியவில்லை. அப்ளாஸ்களுடன் அவன் இறங்கியதும் அடுத்த மாணவனும் மேடை ஏறியதும் மைக்கை பிடித்தான். அடுத்த நிமிடம் யாரும் எதிர்பாராத வண்ணம் மயங்கி கீழே சாய்ந்தான். காரணம் தகுந்த பயிற்சியின்மை தந்த பயமானது அவனது உடலில் நடுக்கம் தந்து நாக்கை உள்ளிழுத்து பேச முடியாமல் செய்து விட்டது.
ஆகவே நாம் நமது பயம் மற்றும் எதிர்மறை சிந்தனையின் தாக்கத்தைப் புரிந்து அதை அகற்றுவதன் மூலம் தடைகளைத் தாண்டி இலக்குகளை அடைய முடியும்.