

கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த காலத்தை நினைவூட்டும் இந்த கட்டுரை, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொடுத்தல் போன்ற பண்புகள் இன்று ஒரே குழந்தை கலாச்சாரத்தில் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. குடும்பம், அலுவலகம், பேருந்து, ரயில், பள்ளி போன்ற சூழல்களில் சிறிய தியாகங்கள் எவ்வாறு உறவுகளை இனிமையாக்கி, மனிதாபிமானத்தை வளர்க்கின்றன என்பதை நெகிழ்ச்சியுடன் விளக்குகிறது.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பண்புகளை சிறுவயதில் நமக்குக் கற்றுக் கொடுத்து விடுவார்கள். அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மூலமாக, நாமும் சிரமமின்றி அவற்றை வாழ்வின் ஒரு அங்கமாகவே ஏற்கப் பழகிக்கொள்வோம்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரே குழந்தையாக வளருவதால் விட்டுக்கொடுத்தல், பகிர்தல் போன்றவற்றை அறிந்து கொள்ளவதற்கான சூழ்நிலையே இல்லையென்று சொல்லலாம். மாறாக, விட்டுக்கொடுப்பது என்றால் அவர்களுடைய கொள்கைகளை, சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதாக தவறாக புரிந்துகொள்கின்றனர்.
விட்டுக் கொடுப்பதால் கிடைக்கும் அலாதியான மகிழ்சியை உணரத்தொடங்கிவிட்டால் வாழ்க்கை உன்னதமாக இருக்கும். அலுவலகத்தில் நடந்த கசப்பான அனுபவத்தால், வீட்டிற்கு வந்ததும் கணவர் தேவையில்லாமல் சத்தம் போடும்போது, மனைவியும் சரிக்குச் சரியாக எதிர்த்துப் பேசினால் அது பெரிய சண்டையாக மாறும்.
அப்பொழுது, மனைவி தனக்கான நேரத்தை விட்டுக்கொடுத்து, சிறிது நேரம் அமைதியாக இருந்தால் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. சிலமணி நேரம் கழித்து, கணவரிடம் பேசி காரணத்தை அறியும்போது சூழ்நிலை சுமுகமாக மாறும். இதைத்தான், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதென நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
ஒவ்வொருமுறையும் வெளிவூர் செல்லும் தந்தை, தன்னுடைய இரு மகள்களுக்கும் ஒரே நிறத்தில் புடவைகள் எடுத்து வருவார். அவர்களும் ஆசையாக வாங்கிக் கொள்வார்கள்.
ஒருமுறை வெவ்வேறு நிறங்களில் புடவைகளை எடுத்துவந்து தந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட நிறப் புடைவைக்கு இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.
இதனால், தன் தந்தையின் முகம் மாறியதையும், கவலைப் படுவதையும் கவனித்த ஒரு பெண், உடனே அடுத்தவளுக்கு விட்டுக்கொடுக்க, அவளும் மகிழ்வோடு கட்டி அணைத்துக் கொண்டாள். தந்தையிடமும் ஒரு பரவசம். ஒருசில நிமிடத்தில் அந்த சூழ்நிலையே மாறிவிட்டது.
வேலைக்காகச் செல்லும்போது கூட, சிறிது நேரத்தை செலவழித்து நமக்காக புடைவையை எடுத்து வரும் தந்தையை வேதனைப் படுத்தக்கூடாது என்ற நல்ல எண்ணமே விட்டுக்கொடுக்க வைத்தது.
பேருந்தில் பயணம் செய்யும்போது, முதியவர் ஒருவர் நிற்பதற்கு மிகவும் சிரமப்படுவதை கவனித்து, தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டுக்கொடுப்பது மனிதாபிமானம். முதியவரின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தவரின் முகத்திலும் சிறு புன்னகை.
அதுபோல, ரயில் பயணத்தில் தனக்கு கிடைத்த மேல் இருக்கையை மாற்றிக்கொள்ள சக பயணிகளிடம் கேட்கும்போது, அவர்கள் விட்டுக்கொடுத்து உதவுவதும் சிறந்த பண்பு.
தனக்கு கிடைத்த சாக்லேட்டை தன் தம்பிக்கும் பகிர்ந்து கொடுப்பதும், பள்ளியில் மதிய உணவை எடுத்து வராத சக மாணவனுக்கு, எல்லோரும் தங்கள் உணவை பங்கிட்டு கொடுக்கும் விளம்பரங்களை நாம் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. இதுபோன்ற சின்னச் சின்னச் செயல்களே நம்மையும், குழந்தைகளையும் செம்மைப் படுத்தும்.
"விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப நல்ல எண்ணத்துடனும், அன்போடும் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் என்றும் ஆனந்தமே..!
உங்கள் குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் பகிர்தல் குணத்தையும் சுலபமாக வளர்த்து, அவர்களைச் சமூகத்தில் சிறந்த பண்பாளர்களாக உருவாக்குவதற்கான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.