

முதன் முதலாக பள்ளிக்குள் அடி எடுத்து வைக்கும் ஒரு குழந்தை, இது தனக்குத் தொடர்பில்லாத ஓர் இடமாக இருக்கிறதே என்ற பயத்தில் அழுகிறது.
அதுவரை தன் அம்மாவின், குடும்பத்தின் அரவணைப்பில் வளர்ந்த அந்தக் குழந்தைக்கு பள்ளி என்பது பாதுகாப்பாற்ற இடமாக தோன்றுகிறது. ஆனால் பெற்றோர், ஆசிரியர் தொடர்ச்சியாக வைக்கும் நம்பிக்கையே அந்தக் குழந்தையை கல்வியில் சிறந்தவராக மாற்றுகிறது. நம்பிக்கையே சாத்தியமாகும்.
எண்ணங்களை எல்லாம் நல்ல செயலாக்கும் ஆற்றல் தான் வெற்றியாக வளர்ச்சி பெறுகிறது என்பது வால்டேர் என்ற அறிஞரின் கருத்து. நம்பிக்கை வைக்கும் எல்லோருக்கும் இது சாத்தியமாகும். இதற்கு உதாரணம் ஜான் பார்தீன் என்ற அமெரிக்க விஞ்ஞானியின் குட்டி ஸ்டோரி.
1956-ம் ஆண்டு ஜான் பார்தீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. பிரம்மாண்டமாக நடைபெறும் விழா ஒன்றில் ஸ்வீடன் நாட்டு மன்னர் எல்லோருக்கும் நோபல் விருதுகளை வழங்குவார்.
உலகின் மிக உயர்ந்த இந்த விருதைப் பெறும் விஞ்ஞானிகள் அந்த விழாவுக்கு குடும்பத்துடன் செல்வது மரபு. ஆனால் ஜான் பார்தீனின் குழந்தைகள் மூவரில் இரண்டு பேருக்கு அந்த நேரத்தில் பள்ளியில் தேர்வு இருந்தது.
அதனால் ஒரே ஒரு மகனை மட்டும் விழாவுக்கு அழைத்துச் சென்றார். பரிசு பெறும் மற்ற எல்லோருமே குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் பலரும் மிக முக்கியமான வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வந்திருந்தனர். அவர்கள் ஜான்பார் தீனை வேடிக்கையாக பார்த்தனர்.
பரிசு தரும்போது ஸ்வீடன் மன்னரும் அவரை கடிந்து கொண்டார். இது எவ்வளவு பெருமையான விஷயம் உங்கள் குடும்பத்தினர்கள் இதை நேரில் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டாமா? என்று கேட்டார். ஜான் பார்தீன் அப்பொழுது சொன்னவைதான் மிக முக்கியமான வரிகள், "அடுத்த முறை விருது வாங்க வரும் போது கண்டிப்பாக எனது முழு குடும்பத்தையும் கூட்டி வருகிறேன்" என்றார் அவர்.
அந்தப் பதிலைக் கேட்டு மன்னர் சிரித்தார். அரங்கில் இருந்த எல்லோரும் சிரித்து விட்டனர். ஏனெனில், நோபல் பரிசு என்பது அரிதினும் அரிதான வெகுமதி. அதற்கு முன் இரண்டு பேர் மட்டுமே அதை இரண்டு முறை வாங்கி இருந்தனர்.
ஏற்கனவே யாரும் அதுவரை இப்படி வாங்கியதில்லை. எந்த நம்பிக்கையில் ஜான் பார்தீன் இப்படி சொல்லுகிறார் என்பேதே அவர்களின் சிரிப்புக்கு காரணம்.
ஆனால், ஜான் பார்தீன் வெறுமனே உதட்டளவில் இதைச்சொல்லவில்லை. அதன் பின் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தீவிரமாக கண்டுபிடிப்புகள் செய்தார். 1972 ஆம் ஆண்டு அவருக்கு இரண்டாவது முறை நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த முறை தன் முழு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு போய் பரிசு வாங்கினார். ஏற்கனவே அவர் சொன்னதை நினைவு வைத்திருந்த மன்னர் ஆச்சரியத்துடன் ஜான் பார்தீனை பாராட்டினார்.
எந்த அளவுக்கு தன் மீது நம்பிக்கை (self confidence) வைத்திருந்தால் அவர் இப்படி சொல்லி இருப்பார். இது போன்ற நம்பிக்கைதான் எந்த நெருக்கடியிலும் நம்மை முன்னேற வைக்கும் என்பதற்கு இவரே ஒரு எடுத்துக்காட்டு!
இதுமாதிரி எந்த செயலிலும் முழு நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அவரை பெருமைப் படுத்தும் விதமாக அமெரிக்கா இவரது அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.