
ஒரே ஒரு வார்த்தை அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது. வாழ்க்கையையே மாற்றக்கூடிய அந்த வார்த்தை என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. “நன்றி” “Thanks” இதுதான் அந்த வார்த்தை. இதைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று பார்க்கலாம்.
நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கு உதவுபவர்கள் பலர் உள்ளனர். பிறர் உதவியின்றி நம்மால் வாழ முடியாது என்பதே நிதர்சனம். ஒரு புதிய ஊருக்குச் செல்கிறோம். அங்கு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வழியில் தென்படும் யாரிடமாவது வழி கேட்க வேண்டிய சூழ்நிலை. நாம் அவரிடத்தில் வழி கேட்டால் நமக்கு சரியான வழியைக் காட்டி உதவுகிறார். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். அவருக்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி.
நம்மில் பலர் பல சமயங்களில் பிறரிடம் உதவியைப் பெற்றுக்கொண்டு காரியம் முடிந்ததும் உதவி செய்தவரைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். இது மிகவும் தவறான செயலாகும். நமக்கு உதவியவர் களுக்கு நன்றியைத் தெரிவித்து பிறகு அவரை எங்கே பார்த்தாலும் சிநேகமாக ஒரு புன்னகை செய்து விட்டுச் செல்லுங்கள்.
ஒரு துறவி நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் இருந்த ஒரு சிறு குட்டையில் விழுந்த தேள் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட துறவி அதன் மீது இரக்கப்பட்டு அதைக் காப்பாற்ற நினைத்தார். அந்த குட்டைக்கு அருகில் சென்று அந்தத் தேளைக் கரை சேர்க்க அதை கையால் எடுத்தார். உடனே தேள் அவரை வேகமாக நான்கைந்து முறை கொட்டிவிட்டது. துறவி கையை உதற அந்தத் தேள் மீண்டும் குட்டையில் விழுந்தது.
துறவி மீண்டும் அந்த குட்டையில் விழுந்த தேளை எடுத்தார். அப்போதும் அந்தத் தேள் அவருடைய கையைக் கொட்டியது. இப்படியே நான்கைந்து முறை நடந்தது.
அருகிலிருந்து இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் துறவியிடம் வந்தார்.
“துறவியே, தேள் மீது பரிதாபப்பட்டு அதைக் காப்பாற்றிய உங்களையே அது கொட்டியது. நன்மை செய்த தங்களுக்கு அது தீமை செய்கிறது. அப்படியிருக்க அதை மீண்டும் ஏன் காப்பாற்றினீர்கள் ?”
இந்தக் கேள்விக்குத் துறவி புன்னகைத்தபடியே பதிலளித்தார்.
“கொட்டுவது அதன் சுபாவம். தீமை செய்தோர்க்கும் உதவி செய்வது என் சுபாவம்”
புன்னகைத்தபடியே பதிலளித்து விட்டு தன் வழியில் நடக்க ஆரம்பித்தார் அந்தத் துறவி.
நாம் எப்போதும் அந்த துறவியைப்போல அனைவருக்கும் உதவவேண்டும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு வரம். எதையும் எதிர்பார்க்காமல் உதவும் குணம் சிலருக்கு உள்ளது. அப்படி நமக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உதவுவதும் உதவி செய்தவர்களை மறக்காமல் இருப்பதும் வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒரு பண்பாகும்.
நீங்கள் நெரிசல் மிகுந்த சாலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களுக்கு பாதையைக் கடக்க பயமாக இருந்தால் உங்களுக்கு யாராவது பாதையை பத்திரமாகக் கடக்க உதவலாம். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். வழியில் நின்று கொண்டிருக்கும்போது யாராவது உங்களுக்கு லிப்ட் கொடுத்து உதவலாம். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்.
ஆட்டோவில் பயணித்து நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக் கொண்ட ஆட்டோகாரருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். இப்படியாக உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி சொல்லும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். இதனால் உங்களுக்கு விளைவது நன்மை மட்டுமே என்பதை உணருங்கள்.
உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லுவதன் மூலம் அவர்களின் மனதில் உங்களைப் பற்றிய உயர்வான ஒரு அபிப்ராயம் ஏற்படும். இது உங்கள் உயர்வுக்கு நிச்சயம் வழிவகுக்கும். இந்த கட்டுரையைப் பொறுமையாக வாசித்த உங்களுக்கு என் நன்றி.