
புகழுக்கு மயங்காதவர்கள் இவ்வுலகில் இல்லை. தன்னைைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் யாரேனும் பேசமாட்டார்களா என்று இருப்பவர்கள் அதிகம். சிலர் தங்களை புகழ்ந்து பேசுபவர்களை அதிகம் நம்புவார்கள். அத்துடன் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் செய்துவிடுவார்கள்.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல் தன்னைப் புகழ்பவர்கள் நம்மைச் சுற்றி இருக்க சொர்க்கம் என்று எண்ணுபவர்கள் அதிகம். சிலரைப் புகழ்ந்து பேச ஒரு கும்பல் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும். அப்படி தங்களைப் புகழ்ந்து பேச சிலர் கூட இருந்தால் போதும் தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற அகங்கார எண்ணத்தில் வலம் வருபவர்கள் அதிகம்.
புகழ்ச்சிக்கு மயங்காமல் இருக்கப் பழகவேண்டும். புகழ்ச்சியை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுபவர்கள் உண்மையில் யாரையாவது புகழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களை மற்றவர்கள் புகழ்ந்து பேசினால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் "பாம்பின் கால் பாம்பறியும்" என்பதுதான். அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். ஏதேனும் காரியம் ஆகவேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் இப்படி நம் காலை சுற்றி வருகிறார்கள் என்று.
எக்காரணம் கொண்டும் புகழ் என்னும் போதைக்கு அடிமையாகாமல் இருக்க பழகுவதே நல்லது. ஏனென்றால் ஒருவரை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் அவரை அதிகமாகப் புகழ்ந்து, அவரால் புகழப்படும் நபர் அந்த போதையில் மயங்கி இருக்கும் சமயத்தில் அவரை எளிதாக வென்று விடலாம். நினைத்த காரியத்தை சாதித்தும் விடலாம்.
சிலர் வசை எது, வாழ்த்து எது என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். சிலர் வஞ்சிப் புகழ்ச்சியில் ஒருவரை உயர்த்துவது போல் தாழ்த்தி பேசுவதும் உண்டு. எந்த வகையில் புகழ்ந்தாலும் அதுவும் புகழ்ச்சி தான் என்று எண்ணி மயங்கி இருப்பவர்களிடம் தங்கள் வேலையைக் காட்டி தாங்கள் நினைத்ததை முடித்துக்கொள்பவர்கள் இவ்வுலகில் அதிகம் உண்டு. எனவே எப்பொழுதும் புகழ்ச்சிக்கு மயங்காமல் இருக்க பழகவேண்டும். யாரேனும் நம்மைப் புகழ்ந்தால் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று யூகித்து உஷாராக இருக்கவேண்டும்.
உண்மையிலேயே நாம் புகழ்ச்சிக்கு தகுதியுடையவராக இருந்தாலும் யாரேனும் நம்மை புகழ்ந்து பேசினால் அதை வளர்த்த விரும்பக் கூடாது. உடனடியாக நிராகரித்து விட வேண்டும். போதும்! வேறு ஏதாவது பேசலாம் வாருங்கள் என்று பேச்சை மாற்ற வேண்டும். தகுதி இருக்கிறதோ இல்லையோ சிலர் தங்களைப் புகழும்போது அந்த போதையில் மயங்கி என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டி விடுவார்கள். இது ஆபத்தில் கொண்டுவிடும்.
மனமுதிர்ச்சி பெற்றவர்கள் பொதுவாக யாரும் தங்களைப் புகழ்வதை விரும்புவதில்லை. உலகின் யதார்த்தத்தை அறிந்தவர்கள் அந்தக் கவர்ச்சி சூழலில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட முனைவார்கள்.
புகழ் என்னும் போதையில் மயங்காமல் இருக்க மனதை எப்போதும் தயார்படுத்த வேண்டும். ஒருவர் நம்மிடம் மிகவும் பணிந்து செல்கிறாரா, உஷாரா இருக்க வேண்டும். வளைந்து நெளிந்து சிரித்து பேசி காரியத்தில் கண்ணாக இருப்பவர்களைக் கண்டு விலகி விடுவது புகழ்ச்சிக்கு மயங்காமல் இருக்க வழி வகுக்கும். புகழ்ச்சி என்பது நம்மை பலவீனமாக்கும். அது நம்மை எளிதில் வீழ்த்தி விடும்.
புகழ்ச்சிக்கு மயங்குவது என்பது நம் பக்குவமற்ற மனதையே காட்டுகிறது. புகழ்ச்சி என்பது நம்மை வீழ்த்த வரும் வலிமையான ஆயுதம் என்பதை புரிந்துகொண்டால் போதும். புகழ்ச்சிக்கு எளிதில் மயங்கமாட்டோம்.
என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!