

பரமபதம் என்கிற விளையாட்டை கிராமங்களில் ஏணியும், பாம்பும் என்றும் கூறுவதுண்டு. இந்த விளையாட்டு மிகச்சிறந்த ஒரு வாழ்வியலை பற்றியதாகும். மனித வாழ்க்கை எப்படி இந்த உலகத்தில் அமையும் என்பதைச் சிறு பருவத்திலேயே மனதில் பதிய வைக்கிற உன்னதமான ஓர் உளவியல் விளையாட்டு.
இந்த விளையாட்டு நமது திறமையை பொறுத்து நிர்ணயிக்கப் படுவதில்லை. மாறாக பகடையை உருட்டும் போது விழும் நம்பர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. இதில் பல கட்டங்களைக் ஒரே துள்ளலில் கடந்து மேலேறுகிற ஏணி யோகமும் உண்டு. இருப்பதையும் இழந்து பாம்பு வழியாக கீழிறங்குகின்ற கஷ்ட நிலையும் உண்டு.
வாழ்க்கை இந்த விளையாட்டைப் போலத்தான் திடீரென்று உச்சத்தில் சென்று விடும். நாம் நினைத்து பார்க்காத வேளையில் சரிந்து கீழே விழுந்து விடும்.
இதை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொருத்தி பார்க்க முடியும். வாழ்க்கையில் பிரச்னைகள் வருகிறதென்றால், பொருளாதார நெருக்கடி வருகிறதென்றால், உறவுகளுக்குள் சண்டைகள் வருகிறதென்றால், நாம் பாம்பு வழியாக கீழே இறங்குகிறோம் என்று அர்த்தம். அதே நேரம் அமைதியும், அன்பும் நிறைந்த வாழ்வு அமைகிறதென்றால், விழாக்கள், கொண்டாட்டங்கள் என நம் வாழ்க்கை மகிழ்ச்சியை அனுபவிக்கிறதென்றால், பொருள் வரவு அதிகமாக இருந்தால், குழந்தைகள் மகிழ்ச்சியாக கலகலப்பாக வீட்டில் இருந்தால் நாம் ஏணி வழியாக ஏறி சிகரத்தை எட்ட போகிறோம் என்று அர்த்தம். ஆனால் இந்த சிகரத்தை எட்டுகிற வழியில் எதிரிகள் இருப்பார்கள். உறவு அல்லது நட்பு போர்வையில் சுய நலவாதிகளும், ஏமாற்றுக்காரர்களும் இருப்பார்கள். இவற்றையெல்லாம் வாழ்வியலாக நமக்கு சொல்லுகிறது இந்த விளையாட்டு.
எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் வரத்தான் செய்யும். நோய்களோ, பிரச்னைகளோ ஒருவன் ஏழையா பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை. அது எல்லோருக்கும் பொதுவானது. எவ்வளவு தான் பணம் இருந்தாலும் ஒருவரது உயிரை பிடித்து வைக்க முடியாது. அதனால்தான், ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்; உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்’ என்று பாடினார்கள். இந்த வாழ்க்கை நமக்கு எல்லா அனுபவங்களையும் தரக்கூடியது.
நாம் உண்ணும் உணவில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு வேண்டும். இவையெல்லாம் இருந்தால்தான் உடல் நோயற்ற உடலாக இருக்கும். அது போன்று தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை பலம் வாய்ந்ததாக அமைய வேண்டுமென்றால் அவனுடைய வாழ்க்கையில் பிரச்னைகள், சங்கடங்கள், சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், செல்வங்கள் வர வேண்டும்.
அப்படி வருகிற போதெல்லாம் அவற்றை ஏற்று கொள்கிற அல்லது எதிர்த்து போராடுகிற மனத்துணிச்சலும் வர வேண்டும். இப்படியானதொரு அனுபவம் வாய்ந்தால் அதற்கு பிறகு என்னதான் நடந்தாலும் இதயம் உடைந்து போகாது.
பிரேண்டர் ஜாண்சன் கூறியது “இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன” என்று.
கிராமங்களில் பெரியவர்கள் சொல்கிற ஒரு வார்த்தை ஞாபகத்தில் வருகிறது. நாம் சிரிக்கும் போது ‘நல்லா சிரி கொஞ்ச நேரத்தில அழதான் போகிறாய்' என்பார்கள். இதன் அர்த்தம் என்பது வாழ்க்கையில் சிரிப்பு மட்டுமல்ல, அதையும் தாண்டி அழுகையும் உண்டு. அப்போதுதான் நம்முடைய உடலும், மனமும் சமநிலை அடையும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இந்த புரிதல் நமக்கு சிறு வயதிலேயே வந்து விட்டால் நமது வாழ்க்கையில் வருகிற எல்லா போராட்டங்களையும் எதிர்த்து நிற்கிற துணிவு கிடைத்து விடும். இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தோமானால் எல்லா சூழ்நிலைகளிலும் சமமாக வாழ முடியும்.