
இலக்கிய மேதை டாக்டர் ஜான்சன் 'நட்பை புதுப்பித்துக்கொண்டே இருங்கள் என்கிறார். இதற்குப் பொருள் என்னவென்றால். 'பழைய நண்பர்களையும் இழக்கக் கூடாது; புதிய நண்பர்களையும் உண்டாக்கிக் கொண்டே இருக்கவேண்டும்' என்பதாகும். இது வாழ்க்கை இன்பத்துக்கு இன்றியமையாதது. நல்ல நண்பர்களைப் பெறுவதைப்போல் வாழ்க்கையில் ஒருவன் பெறக்கூடிய பாக்கியம் எதுவும் இருக்க முடியாது. நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நண்பர்கள் தேவை. எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்ற போதுதான் சிந்தனை விரிவடைகிறது; புதிய எண்ணங்கள் தோன்றுகின்றன.
நல்ல நண்பர்களிடம் மட்டும்தான் மனம்விட்டு விவாதிக்க முடியும். சில விசயங்களை மனதுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தால், அது பெரிய பாரம் ஆகிவிடுகிறது. அது கவலையை வளர்த்து நம்மை பலவீனம் அடையச் செய்கிறது. அழுத்தி வைக்கப்பட்ட எண்ணங்கள் உடல்நிலை பாதிப்புகளுக்கும் காரணமாகிவிடுகிறது.
கவலை என்கிற பாரத்தை தொடர்ந்து சுமக்காமல், இறக்கி வைப்பதற்கு சுமைதாங்கி தேவைப்படுகிறது. பாரத்தை இறக்கி வைக்கக் கூடிய சுமைதாங்கிகளாக நல்ல நண்பர்கள் பயன்படுகிறார்கள். நம்முடைய மனதின் பாரத்தை அவர்களிடம்தான் இறக்கிவைக்க முடியும். மேலும் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவர்களால்தான் நல்ல ஆலோசனைகளைக் கூறமுடியும்.
நல்ல நண்பர்கள் எளிதில் கிடைத்துவிட மாட்டார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, பரஸ்பரம் மரியாதையும் அன்பும் காட்டுகின்றபோது நட்பு மலர்ச்சி பெறுகின்றது.
இரண்டு நண்பர்கள் எல்லா விஷயங்களிலும் இணங்கிப்போக வேண்டும் என்கிற அவசியமில்லை. கருத்து வேற்றுமைகளையும் தாண்டி நிலவுகிற அன்புதான் நட்புக்கு அடிப்படை. இவ்வாறு அமைகின்ற நட்புதான் நிலைக்கிறது. நீடிக்கிறது. நல்ல நண்டர்கள் கிடைத்துவிட்டால், இரும்பு கொக்கி போட்டு அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும் போலித்தனமாக அன்பு காட்டுகிறவர்களும் இருப்பார்கள். காரியம் வேண்டும் என்பதற்காக நெருக்கமாக பழகுகிறவர்களும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் நம்மிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் திருத்துவதுதான் அவர்களின் நோக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய நலனைப் பற்றிக் கவலைப்படாமல், நம்முடைய திருப்திக்காக இனிமையாகப் பழகுகிறவர்கள் நல்ல நண்பர்கள் ஆக மாட்டார்கள்.
ஒருவர் எப்படிப் பேசுகிறார் என்பதை விட என்ன நோக்கத்துடன் பேசுகிறார் என்பதைத்தான் முக்கியமான விஷயமாகக் கருத வேண்டும். நல்ல நட்புக்கு இலக்கணம் சொல்கின்ற வள்ளுவர் அழகான உவமையினை எடுத்துச்சொல்லி நல்ல நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறார். ஆடை அவிழ்ந்த மாத்திரத்தில் கை எவ்வாறு தாமாகவே சென்று அதைப்பற்றி மானத்தை காப்பாற்றுகிறதோ, அதைப்போல ஒருவனுக்கு துன்பம் வந்தபோது உடனே சென்று அதை நீக்குவதுதான் நட்பு என்கிறார் வள்ளுவர்.
நட்பு என்பது ஒருவழிப் பாதையல்ல நாம் ஒருவரிடம் உண்மையான நட்புடன் பழகினால் அவரும் நட்புடன் பழகுவார். செல்வத்தில் சிறந்த செல்வமாக நட்புச் செல்வத்தையும் நாம் வளர்க்கவேண்டும்.