
நம்மை பல வகையிலும் அச்சம் ஆட்டுவிக்கிறது. இதை எப்படி நிறுத்துவது. ஐந்து குரங்குகள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டன. கூண்டின் கதவு பூட்டப்படவில்லை. இதைக் கவனித்த ஒரு குரங்கு தாழ்ப்பாளைளைத் திறக்க முயன்றபோது, மற்ற நான்கு குரங்குகளின் மீது வெந்நீர் வீசப்பட்டது. அந்தக் குரங்குகள் பயந்தன. தாழ்ப்பாளில் கைவைத்ததால்தான் இப்படி ஆயிற்று என கருதி வெளியேறப் பார்த்த குரங்கைத்தாக்கின. உள்ளே இழுத்துப் போட்டன.. பின்னர் இந்த 5 குரங்குகளின் ஒன்று வெளியே எடுக்கப்பட்டு, புதிய குரங்கு உள்ளே செலுத்தப்பட்டது. அந்தக் குரங்கு கதவும் பக்கம் போனது. இப்போது சுடுநீர் வீசுவதற்கு முன்பாகவே மற்ற நான்கு குரங்குகளும் அதைத்தாக்கின.
இப்படி ஒவ்வொரு குரங்காக வெளியேற்றப்பட்டு ஒரு கட்டத்தில் 5 குரங்குகளும் மாற்றப்பட்டிருந்தன. ஆனாலும் எந்தக் குரங்கு கதவும் பக்கம் போனாலும் அது தாக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. இந்த நிலைதான் மனிதனுக்கும் உள்ளது.
மனிதனுக்கு உயிர் குறித்த அச்சம் வழி வழியாகத் தொடர்கிறது. இந்த பயம் எதனால் வருகிறது. உங்களிடம் இருப்பதை யாரோ எடுத்துப் போய்விடுவார்கள் என்ற பாதுகாப்பின்மைதான் அச்சமாக மாறியிருக்கிறது. புதிதாக ஏதாவது முயற்சி செய்தால் இருப்பதையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மாற்றங்களே இல்லாமல் இருந்தால் வாழ்க்கை மந்தமாகிவிடும்.
மாற்றங்கள்தான் வாழ்க்கையின் சுவாரசியம். உங்கள் பயத்தை வலிந்து துரத்த முடியாது. நீங்கள் எதிரி என்று ஒருவனைக் கருதியதுமே அவரைப்பற்றிய அச்சம் பிறந்து விடுகிறது. அச்சத்தினால் வீரத்தை வெளிப்படுத்திக் காட்சிக்கு வைக்க வேண்டியிருக்கிறது. திருமணம் முடிந்ததும் அடுத்தவரை ஆளும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது ஆளப்படும் பரிதாபம் நேருமா என்ற அச்சம் நேருகிறது. இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு வாழ்க்கையை ஆனந்தமாக்கக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அல்லவா?. எதிர்பார்ப்பில்லாத அன்பை பகிர்ந்து கொள்வதை விடுத்து, ஆதாயங்களை மட்டுமே தேடத் துவங்கும் போதுதான் அது கசப்பாகிப் போகிறது. அங்கே அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையில் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்தாலும் பயணம் சுகமாக அமைந்துவிடும்.
இதைப் புரிந்துகொள்ளாமல் உங்கள் பாதுகாப்பு பற்றியே கவலை கொண்டு இருப்பதால்தான் அச்சம் என்பது அடிப்படை உணர்வாகிவிட்டது. உங்களுடைய மற்ற உணர்வுகள் எல்லாம் அதிலிருந்து வேர் பிடித்து எழுந்தவை ஆகிவிட்டன.
உங்கள் அச்சத்தைத் களைவது எப்படி?. நீங்களே ஒரு டைனோசரை உருவாக்கி விட்டு, அதனிடமிருந்து தப்பி ஓடுவது எப்படி என்று யோசிப்பவரைப் போன்ற நிலையில் இருக்கிறீர்கள். அச்சம் இயல்பானதல்ல. அதை உருவாக்குவதே நீங்கள்தான். அச்சத்தை உருவாக்காமல் இருப்பது எப்படி என்று பாருங்கள். அச்சம் என்பது உங்களை நீங்களே தோற்கடித்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம்.