

மனித வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் போன்றது. ஆனால் இங்கே நாம் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் வெளியில் இருப்பதில்லை. பல நேரங்களில் பயம், சோம்பல் மற்றும் கோபம் போன்ற உருவங்களில் நமக்குள் தான் ஒளிந்திருக்கிறார்கள். இந்த 'உள்மன மிருகத்தை' அடக்கி, அதை வெற்றிக்கு எப்படிப் பயன்படுத்துவது? அதற்கு உதவுவதுதான் 'மிரர் ஆஃப் தி பீஸ்ட் (Mirror Of The Beast)' எனும் தத்துவம்.
கண்ணாடி சொல்லும் தத்துவம்:
இந்தத் தத்துவத்தின் அடிப்படை மிக எளிமையானது. ஒரு கண்ணாடி எப்படித் தன் முன்னால் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கிறதோ, அதுபோலவே சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஒரு மிருகம் நம்மை நோக்கிச் சீறி வரும்போது, பயந்து ஓடினால் அது துரத்தும். ஆனால், ஒரு கண்ணாடியைப் போல அதன் கண்ணைப் பார்த்து, அதே உறுதியுடன் நேருக்கு நேர் நின்றால், அந்த மிருகம் குழப்பமடையும். வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வரும்போது பதற்றமடையாமல், அந்தப் பிரச்சனையின் தீவிரத்தை அப்படியே உள்வாங்கி, அதைவிட பல மடங்கு அதிக உறுதியுடன் அதை எதிர்கொள்வதே இந்தத் தந்திரம்.
சவால்கள் ஒருவரைத் துரத்தும்போது தப்பியோடுவதை விட, ஒரு கண்ணாடியைப் போல நிதானமாக நின்று அவற்றை எதிர்கொள்வதே முதிர்ச்சி. வெளி உலகை மாற்றப் போராடுவதை விட, உள்ளத்தில் இருக்கும் ஒழுக்கத்தையும் அமைதியையும் கூர்மைப்படுத்துவது ஒருவரை எவராலும் அசைக்க முடியாத வலிமையான ஆளுமையாக மாற்றும். அந்தத் தெளிந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பமே உண்மையான வெற்றியின் அடையாளம்
பதற்றம் வேண்டாம், நிதானமே ஆயுதம்:
தனக்கு ஒரு அவமானம் நேரும்போதோ அல்லது தோல்வி கிடைக்கும் போதோ, மனித மனம் உடனே உணர்ச்சிவசப்படுகிறது. ஆனால், இந்த 'மிரர்' நுட்பம் சொல்வது என்னவென்றால் ‘உணர்ச்சிகளை வெளிபடுத்துவதை நிறுத்திவிட்டு, செயலில் வீரத்தைக் காட்டுங்கள் என்பதைத் தான். எதிராளி கோபப்படுத்த முயன்றால், அதே கோபத்தைத் திரும்பக் காட்ட வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஒரு கண்ணாடி போல அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதி எதிராளியை நிலைகுலையச் செய்யும். மற்றவர்களின் ஆக்ரோஷத்தை நிதானத்தால் முறியடிப்பதுதான் உண்மையான பலம்.
ஒழுக்கம் எனும் கண்ணாடி:
மனிதனிடம் இருக்கும் திறமை ஒரு மிருகத்தைப் போன்றது. அதற்கு எல்லையற்ற வலிமை உண்டு. ஆனால், அந்த வலிமைக்கு ஒரு 'கண்ணாடி' தேவை. அந்த கண்ணாடிதான் ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாத திறமை, காட்டில் திரியும் கட்டுக்கடங்காத யானையைப் போன்றது. அது ஒருவருக்கு அவராலேயே ஆபத்தாக முடியலாம்.
ஆனால், அதே திறமையை 'இலக்கு' எனும் கண்ணாடியில் பிரதிபலிக்கும்போது, அது ஒரு லேசரைப் போலக் கூர்மையடைந்து தடைகளைத் தகர்க்கும். நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து, கவனத்தைச் சிதறவிடாமல் ஒரு புள்ளியில் குவிக்கும்போது, எவராலும் வெல்ல முடியாத ஆற்றல் பிறக்கிறது.
முன்னேற்றத்திற்கான ஃபார்முலா:
பிரச்சனையை கண்டு அஞ்சாமல், அதன் ஆணிவேர் என்ன என்பதை ஒரு கண்ணாடியைப் போலத் தெளிவாகப் பார்க்க வேண்டும். உலகம் நம்மை எப்படி நடத்துகிறது என்பது முக்கியமல்ல; நாம் நம்மை எப்படி நடத்துகிறோம் என்பதே முக்கியம். புயல் வீசினாலும் கடலின் ஆழம் அமைதியாக இருப்பதைப் போல, மனதின் ஆழத்தில் அமைதியைக் காக்கப் பழக வேண்டும்.
சுற்றியுள்ள உலகம் ஒரு 'மிருகத்தைப்' போலக் கடினமாக நடந்துகொள்ளலாம். ஆனால், ஒரு கண்ணாடியைப் போல உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தால், அந்தத் தடைகளே முன்னேற்றத்திற்கான ஏணியாக மாறும். உள்மன ஆற்றலைச் சரியாகப் பிரதிபலிக்கும்போது வெற்றி வசப்படும்! வெற்றி என்பது வெளியில் தேடுவதல்ல; தனக்குள் இருக்கும் பேராற்றலைச் சரியான முறையில் உலகிற்குப் பிரதிபலிப்பதே!