

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது; ஒரே குழப்பம்!!
சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து, அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன்.
அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப்படி வரவிருக்கும் நபர் உடல்நலக் குறைவால் வர முடியவில்லை என்பதால், இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே, தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன்.
கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய வளாகத்தை அடைந்து விடுவோம்.
கொடுத்த தலைப்பு - 'எதுவாகினும் நான்' அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர்.
அருட்செல்வன்:- தமிழ் முனைவர் பட்டம். தற்போது 'இளைய சமுதாயம்' - தொலைக்காட்சி ஊடகத்தில் 'கதை கள தேர்வு' உறுப்பினராகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் சிறுகதை, புனைவு என தன் திறமைகளை பல தளங்களில் வெளிக்கொண்டு வந்து இருக்கும் 27 வயது இளைஞர்.
மாணவர்கள் படை சூழ, விழா இனிதே தொடங்கியது.
நன்றி!! வணக்கம்!!!
‘நன்றி’ - எனக்கு வாய்ப்பு அளித்த விழா நடத்துனர், மற்றும் பொறுப்பாளர்களுக்கு...
‘வணக்கம்’ - என்னை தெரிந்துகொள்ள நினைக்காமல், “சொல்ல வருகிற செய்தி என்ன?” என்பதை உள்வாங்க வந்து இருக்கும் சக மாணவ, மாணவிகளுக்கும்... மாணவ பெருஞ் செல்வங்களே! எனக்கு அளிக்கப்பட்ட அல்லது இடப்பட்ட, சொல்லப்பட்ட தலைப்பு – 'எதுவாகினும் நான்'.
இவ்வாறாக பேச அழைக்கப்பட்டவரின் உடல்நிலை சற்று பின்னடைவு காரணமாக நான் எதுவாகினுமாக மாறினேன்."
கரவோசை மேல் எழும்ப; ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் அருட்செல்வன்.
"நண்பர்களே, நாம் நினைப்பது போல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்; இது சத்தியம்; உண்மை; இந்த தைபூசத் திருநாளில் ஒரு உண்மையை சொல்கிறேன்.
நாம் பிறப்பதில் இருந்து இறக்கும் வரை நம்மிடையே ஒன்றி, உறவாடி, ஒற்றுமையாய் உளவி, திரும்பச் திரும்ப செயல்புரிந்து நம் எண்ணத்திற்கும், செயலுக்கும், இயக்கத்திற்கும் ஒரு வடிவம் கொடுத்து நாம் நம்மை அறியாமலே நம்மை ஆட்கொண்டு இருக்கும் ஒரு ஜீவ காருண்ய இயக்கம் நம் அருட்பெருஞ் ஜோதியாக விளங்கும் நம்முடைய சுவாசம்.
அந்தப் பெரும் சக்தியை உணராமல் (நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள முடியாமல்) புற நிகழ்வுகளில் அடிமைப்பட்டு, அதனால் ஆட்கொண்டு, அலைக்கடிக்கப்பட்டு நம் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்."
மேலும் கூட்டத்தில் இருந்து பாராட்டுகள், கைத்தட்டல்கள். சற்று சுதாரித்துக் கொண்டு பேசலானான்.
"அதாவது நாம் நம்மை சுயமாக அறிவது நமக்கு 3 வயது முதல் என்று சொல்கிறார்கள்.
முழுமையாக அறிந்துகொள்ள காலம் ஒரு இடைவெளி.
அதற்குள் நாம் மரித்துப் போகிறோம் என்பது தான் நிதர்சனம்.
அப்படி இருக்க, நாம் ஏன் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயை, தந்தையை, உறவினர்களை, நண்பர்களை ஆராதிக்க கூடாது?!
நான் சொல்வது என்பது இந்த உலகத்தில் யாரும் யாருக்காக கடமைபட்டவர்கள் கிடையாது. இது அன்பால் அரவணைக்கப்படுகிறது. இது ஈ, எறும்பு, முதல் மனித வளர்ப்பு வரை உள்ள ஒரு பிரபஞ்ச ஒழுக்கம்.
இந்த ஒழுக்கம் மனிதனுக்கு 100% சாத்தியம். ஆனால் அவன் தன் அறத்தை நினையாமல், சுயத்தை பற்றி புரியாமல், நலமே கருதி சுயநலமாக மாறிவிட்டதன் விளைவு.
யாரும் பிறந்தவுடன் மருத்துவராக, பொறியாளராக, ஆட்சியாளராக வந்து அவதானிப்பது இல்லை. எல்லோரும் சமூகம் சார்ந்து இயங்கி வருகிறோம்.
இதில் உணவு உற்பத்தி செய்பவனுக்கு ஒரு நியதி; உணவை பகிர்பவனுக்கு ஒரு நியதி; அதை உண்டு களிப்பவனுக்கு ஒரு நியதியா?
இங்கே அறிவு என்பது படிப்பு என்கிற மாயையில் இயங்குகிறது. இந்த மாயை ஒழிய ஞானக் கதவு திறக்கப்பட வேண்டும்.
எது அறிவு? இதுவரை புலப்படாததை பிரபஞ்சத்தில் உள்ளதை சமூக நலத்திற்கு கண்டுபிடித்து பயன் அளிக்கிறது.
உதாரணம்: இன்று உள்ள நவீன மயமாக்கப்பட்ட கருவிகள் மருத்துவ மற்றும் மற்ற பிற எல்லா சேவைகளையும் உள் அடக்கும். eg: கணினி;
எது ஞானம்? எதையும் அறிவு கொண்டு சாதித்து விடலாம் என்று நினைத்து செயல்படும் போது ஏற்படும் பெரிய ஆபத்தில் இருந்து காப்பது ஞானம்.
விதி இயற்கை சார்ந்து இயங்குவது;
ஞானம் கர்மம் சார்ந்து இயங்குவது;
கர்மம் தர்மம் சார்ந்து இயங்குவது;
தர்மம் செயல் சார்ந்து இயங்குவது;
செயல் கருத்து சார்ந்து இயங்குவது;
கருத்து எண்ணம் சார்ந்து இயங்குவது;
எண்ணம் உடல் சார்ந்து இயங்குவது;
உடல் உயிர் சார்ந்து இயங்குவது;
உயிரே ஜீவன்; ஆதி; அங்கம்.
நான் இப்போது மைக் (mike) பிடித்து அறிவாளியாக நினைத்து கேட்பவர்களுக்கு மட்டும் இந்த உரையானது, என்னால் ஆகிறது என்று நினைக்கும் போது அது சூன்யமாக மாறுகிறது.
என் அறிவை ஞானம் கொண்டு பகிரும் போது அது ஒரு உணர்வாக, ஒரு தன்மையாக மலர்கிறது.
இப்படித்தான் நாம் நம் கர்மாவை ஞானம் கொண்டு மாற்ற வேண்டும். அது நாம் நினைத்தால் தான் முடியும். அங்கே அறிவு பகிரப்படும்.
அது ஆனந்தமாக, பெரிய ஆனந்தமாக, சத், சித், ஆனந்தமாக இந்த உலகை ஆட்கொள்வது.
அப்படித்தான் இந்த உலகை பிரபஞ்ச சக்தி கொண்டு அதை உணர்ந்த நம் சித்தர்கள், ஞானிகள், புலவர்கள், பாடல்கள், இலக்கியங்கள் என படைத்து சென்று உள்ளனர்.
ஆக படிப்போம்! பகிர்வோம்!
நாம் நாமாக எல்லாம் வல்ல ஜோதியை வழிபடுவோம்."
வணக்கம் கூறி விடை பெற்றான் - அருட்செல்வன்.