வாழ்க்கையின் கருப்பொருளை உணர்த்தும் ஈசன் - பார்வதியின் தெய்வீகக் காதல் கதை!
இந்து மதத்தின் மிகப் பழைமையான புராணக் கதைகளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் காதல் கதையை பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. இது மிகவும் தெய்வீகமான கதையாகும். இந்த தெய்வீக கதையானது பக்தி, அன்பு, தியாகம், பொறுமை மற்றும் மாற்றம் ஆகிய கருப்பொருள்களை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சிவபெருமானின் முதல் மனைவி சதி என்பவள் ஆவாள். அவள், தனது தந்தையான தட்சன், சிவபெருமானை அவமதித்ததால் அதைத் தாங்க முடியாமல் தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்து கொண்டாள். அவளின் இந்தச் செயலால் துக்கமடைந்த சிவன், உலகத்தை விட்டு விலகி இமயமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். சிவபெருமான் உலகத்தை விட்டு விலகி இருந்த காரணத்தால் உலகில் சமநிலையின்மை ஏற்பட்டது. உலகத்தின் சமநிலையை மீண்டும் மீட்டெடுக்க சிவபெருமான் உலகத்திற்கு திரும்பி வந்தே ஆக வேண்டும்.
ஆகவே, தேவர்கள் அனைவரும் சேர்ந்து மலை மன்னன் இமவன் மற்றும் அவனது ராணி மேனாவின் மகளான பார்வதி தேவியின் உதவியை நாடத் தீர்மானித்தார்கள். பார்வதி தேவி சதியின் மறு அவதாரம் எனவும் சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்கான ஆத்ம நோக்கத்துடன் பிறந்தாள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
பார்வதி தேவிக்கு சிறு வயதிலிருந்தே சிவனிடம் ஒரு வகையான ஈர்ப்பு இருந்தது. தேவி தன்னுடைய ஆன்மிக ஆழத்தால் அவரது இதயத்தை வெல்ல உறுதியாக இருந்தார். அவள் காட்டிய பாசத்தைப் பொருட்படுத்தாமல் சிவபெருமான் அலட்சியமாகவே இருந்தார். சிவன் தனது தியானத்தில் யாரும் அசைக்க முடியாதவராக இருந்தார். மேலும், துறவறத்தில் முழுமையாக மூழ்கி, தியானத்தில் கவனம் செலுத்தினார்.
தனது பக்தியை சிவபெருமானுக்கு நிரூபிக்க பார்வதி தேவி உறுதியாக இருந்தார். தனது அரச வாழ்க்கையைத் துறந்து, காட்டில் வாழ்ந்து, கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கி, பல வருடங்கள் தவம் செய்து, தனது பக்தியை நிரூபிக்கத் தொடங்கினார்.
அவளின் ஆழமான பக்தியையும் உறுதியையும் கண்டு சிவபெருமான் ஆச்சரியமடைந்தார். அவர் அவளது ஆழமான தியானத்தை கவனித்தார். அவளைத் தடுக்க தியானத்தை விட்டு வெளியேறி பல வேடங்களில் தோன்றினார். அவளது உறுதியான மற்றும் உடைக்க முடியாத பக்தியால் ஈர்க்கப்பட்டார். பின்னர் சிவபெருமான் அவளை மணமகளாக ஏற்றுக்கொண்டார். அவர்களின் இணைவு, துறவுக்கும் உலக ஆசைகளுக்கும் இடையிலான சமநிலையைக் குறிக்கிறது.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் உறவிலிருந்து நாம் அறிந்தகொள்ள வேண்டியவை:
உண்மையான அன்பு நம்மை உயர்த்துகிறது: பார்வதி தேவி தனது உண்மையான அன்பால் சிவபெருமானை துறவறத்திலிருந்து மாற்றி உலகத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார். மேலும், அவரை கணவனாக அடைந்தார். இது உண்மையான அன்புக்கு மிகவும் தனிமையில் இருப்பவர்களைக் கூட மாற்றும் சக்தி உள்ளது என்பதைக் காட்டுகிறது.
சக்திகளின் சமநிலை: சிவன் அமைதி மற்றும் ஆற்றலின் சக்தியை கொண்டுள்ளார். பார்வதி தேவியோ உயிர் சக்தியை உள்ளடக்கியுள்ளார். இந்த இரண்டு சக்திகளின் ஒன்றியம் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இடையிலான சமநிலை தேவை என்பதைக் காட்டுகிறது.
தனிப்பட்ட வளர்ச்சி: சிவன் மற்றும் பார்வதியின் உறவில், பார்வதி, சிவனை அடைவதற்காக முழுவதும் ஆன்மிக வழியைப் பின்பற்றினார். மேலும், பார்வதியின் அன்பினால் சிவன் மீண்டும் உலகிற்குத் திரும்புகிறார். ஆரோக்கியமான உறவுகள் இருவரையும் சிறந்த விதத்தில், அதாவது ஆன்மிக ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் எடுத்துச் செல்லும் என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இருமையில் ஒற்றுமை (அர்த்தநாரீஸ்வரர்): சிவன் மற்றும் பார்வதியின் இந்த வடிவம், கணவன் மனைவி உறவில், இருவரும் சேர்ந்து அவர்களுடைய தனித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது. உண்மையிலேயே வலுவான உறவில், ஆற்றல்கள் ஒன்றிணைகின்றன. ஆனால், ஒருபோதும் தங்கள் அடையாளத்தை அவை இழக்காது.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் உறவிலும், காதல் கதையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.